ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாள் விழா: போயஸ் கார்டனில் கொண்டாடிய ரசிகர்கள் | Photo ...
புதுச்சேரி: `ரோடு ஷோவுக்கு `நோ’ சொன்ன டி.ஐ.ஜி!' - புதுச்சேரி மக்கள் பாராட்டும் சத்தியசுந்தரம் யார்?
கரூர் துயர சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தங்களை தலைவர் விஜய்யை வைத்து மக்கள் சந்திப்பை நடத்த முடிவெடுத்தது த.வெ.க.
ஆனால் தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், அந்த நிகழ்ச்சியை புதுச்சேரியில் நடத்த திட்டமிட்டனர் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள். அதற்குக் காரணம் அந்த மாநிலத்தின் முதலமைச்சரான ரங்கசாமி, விஜய்க்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்பதுதான்.
ஆனால் `100% அதற்கு வாய்ப்பே இல்லை. புதுச்சேரியில் அதற்கெல்லாம் அனுமதி கொடுக்க முடியாது’ என்று ஆரம்பத்திலேயே த.வெ.க-வின் அந்த கோரிக்கையை நிராகரித்து புதுச்சேரி மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்தவர் புதுச்சேரி காவல்துறை டி.ஐ.ஜி சத்தியசுந்தரம்.

அதையடுத்து த.வெ.க-வின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்தும், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் நேரடியாக புதுச்சேரி வந்து காவல்துறையில் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.
அதற்கு டி.ஐ.ஜி சத்தியசுந்தரம் அசைந்து கொடுக்கவில்லை என்பதால்தான், புஸ்ஸி ஆனந்த் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். அதன்பிற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளை அழைத்த முதல்வர் ரங்கசாமி, த.வெ.க ரோடு ஷோ அனுமதி குறித்து ஆலோசனை செய்திருக்கிறார்.
அப்போது, ``ரோடு ஷோ தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதால், அதற்கு அனுமதி கொடுப்பதில் நம் அரசுக்கு சிரமங்கள் இருக்கின்றன.
த.வெ.க-வின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தாராளமாக அனுமதிக்கலாம். ஆனால் `ரோடு ஷோ’வாக அனுமதிக்க வேண்டாம். திறந்தவெளி மைதானத்தில் அனுமதிக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார் டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம்.
அதனால்தான், `ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்காவது ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுங்கள்’ என்று புஸ்ஸி ஆனந்த் கேட்டும், முதல்வர் ரங்கசாமி அதை நிராகரித்திருக்கிறார். அதன்பிறகுதான் துறைமுக மைதானத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
டிசம்பர் 9-ம் தேதி நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாதவாறு புதுச்சேரி காவல்துறை கையாண்ட விதம் குறித்து புதுச்சேரி மக்களுடன் சேர்ந்து த.வெ.க-வினரும் சமூக வலைத்தளங்களில் சிலாகித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், புதுக்கோட்டை மதன்பட்டவூர் கிராமத்தைச் சேர்ந்தவரான டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், விவசாயக் குடும்பத்தை பின்னணியாகக் கொண்டவர். ஐ.பி.எஸ் முடித்து 2009-ல் பணியில் சேர்ந்த இவர், டெல்லி, அந்தமான் நிக்கோபார் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி கடந்த 2024-ல் டி.ஐ.ஜி-யாக புதுச்சேரி வந்தவர்.
பொதுவாக புதுச்சேரிக்கு வரும் டி.ஐ.ஜி-க்கள் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க மாட்டார்கள். ஆனால் புதுச்சேரி காவல் நிலையங்களில் வாரம்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைகேற்புக் கூட்டங்களில் அமர்ந்து அவர்களின் குறைகளைக் கேட்டு, உடனடியாக நடவடிக்கை எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். காவல் நிலையங்களில் அலைக்கழிக்கப்படுபவர்கள், எந்தவித தயக்கமும் இன்றி இவரை எளிமையாக அணுகுகிறார்கள்.
அதேசமயம் நேரடியாக தன்னிடம் புகார்கள் வருவதை ஊக்குவிக்காமல், முதலில் உங்கள் காவல் நிலையங்களில் புகார் கொடுங்கள் என்று கூறி திருப்பி அனுப்பிவிடுகிறார்.
டி.ஐ.ஜி என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல் சக அதிகாரிகளுடன் களத்தில் நிற்பதுடன், அடிக்கடி ரோந்துப் பணிகளிலும் வலம் வருகிறார்.
சமீபத்தில் வந்த தீபாவளிப் பண்டிகைக்கு பத்து நாட்களுக்கு முன்பாக, ஒரு நாளைக்கு சக அதிகாரிளுடன் 5 முதல் 10 கிலோமீட்டர்கள் வரை நடந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அதனால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறவில்லை.
இவை ஒருபுறமிருக்க, தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு யு.பி.எஸ்.இ படிப்பு தொடர்பான வழிகாட்டுதல்களுடன், அவர்களுக்கு ஆகும் பொருளாதார உதவியையும் சத்தமின்றி செய்து வரும் இவர், திரைப்பட இயக்குநர் இரா.சரவணனின் நெருங்கிய நண்பர்.

அதேபோல விளையாட்டில் ஆர்வம் இருக்கும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தேவையான உபகரணங்கள் மற்றும் கட்டுமானங்களை தன்னுடைய நண்பர்கள் மூலம் செய்து தரும் இவர், எந்த ஊரில் இருந்தாலும் பொங்கல் திருவிழாவுக்கு தன்னுடைய கிராமத்தில் ஆஜராகிவிடுவார்.
அப்போது தன்னை எங்கும் முன்னிறுத்திக் கொள்ளாமல், விளையாட்டு உள்ளிட்ட அனைத்துப் போட்டிகளையும் நடத்தி ஊரை திருவிழாக் கோலமாக மாற்றிப் பட்டையைக் கிளப்புகிறார் மனிதர்.
இன்றும் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் யு.பி.எஸ்.சி தொடர்பாக கேட்கும் எந்த உதவிகளாக இருந்தாலும், அதற்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கிறார். அதேபோல கிராமத்தில் இருந்து வரும் எந்த செல்போன் அழைப்பையும் இவர் எடுக்காமல் இருப்பதில்லை என்கின்றனர் அவர் நண்பர்கள்.


















