`பந்தக்கால் ஊன்றிய அதிமுக; பொருமலில் பாஜக முதல் சிக்கலில் கதர் கட்சி தலைமை வரை' ...
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன்; விரைவில் திருமணம் அருளும் குடைக்கல்யாணம் வேண்டுதல்!
அம்மன் அருள் செய்யும் தலங்கள் நம் தேசமெங்கும் உள்ளன. அவற்றில் கருணையே வடிவாக அம்பிகை பவானியாக அருளும் தலம் பெரியபாளையம். சென்னையிலிருந்து செங்குன்றம் வழியாகச் சென்று தச்சூருக்கு முன்பாக இடப்புறம் திரும்பி, கன்னிகைபேர் வழியே பெரியபாளையம் செல்லலாம்.
சென்னையிலிருந்து 43 கி.மீ தொலைவில் உள்ளது. வாருங்கள் அத்தல மகிமையையும் அத்தலம் சக்தி வாய்ந்த நேர்த்திகடன் செலுத்தும் தலம் என்று சொல்வதில் இருக்கும் கருத்தையும் அறிந்துகொள்வோம்.
உத்தர வாகினியாக ஓடும் ஆரணி நதிக்கரையில் புற்று உருவில் அமர்ந்தாள் அன்னை ஆதிசக்தி, அவளோடு பரசுராமரின் அன்னையான ரேணுகாதேவியும் வந்து அமர்ந்து இத்தலத்தைப் புனிதப்படுத்தினார்கள் என்கிறது தல புராணம்.

ஒருமுறை வளையல் வியாபாரி கனவில் வந்த அன்னை, தான் புற்றில் குடியிருப்பதாகக் கூறி மறைந்தாள். அந்த ஆணைப்படி புற்றை இடிக்க, அங்கு ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. புற்றுக்குள் சுயம்பு ஒன்று இருந்தது. அதில்தான் ரத்தம் வடிந்தது.
இன்றும் அன்னையின் வெள்ளிக் கவசத்தை நீக்கிப் பார்த்தால் சுயம்புவின் உச்சியில் கடப்பாரை பட்ட வடுவைக் காணலாம். அந்தச் சுயம்பு மூர்த்தியையே அம்பிகையாகக் கொண்டாடத் தொடங்கினர்.
மூலவரான பவானி அம்மன் வலது கையில் கத்தி, வலது மேல் கையில் சக்கரமும், இடது கையில் அமுத கலசத்தையும், இடது மேல் கையில் சங்கும் கொண்டு காட்சி அளிக்கிறாள். சங்கு சக்கரம் கொண்ட வைஷ்ணவியாக அன்னை அமர்ந்திருக்கிறாள்.
இந்த அன்னையின் மடியருகே தலை மட்டுமே கொண்ட சுயம்புவாக ரேணுகா தேவி அம்சமாக மற்றொரு அன்னை காட்சி தருகிறாள். இவளே தொன்மையான தேவி என்கிறார்கள். பவானியின் அருகில் கிருஷ்ணர், நாகதேவர் திருவுருவங்கள் உள்ளன.
இங்கு பவானி அன்னையோடு தனித்தனி சந்நிதிகளில் கணபதி, மகா மாதங்கி ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீநிவாசப் பெருமாள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர், ஸ்ரீபரசுராமர், நாகர், புற்றுக்கோயில் தேவி ஆகியவர்களையும் தரிசிக்க முடியும்.
மீனவக்குலப் பெண்களின் தாயாகத் திகழ்பவள் பவானி அம்மன். கடலுக்குச் சென்ற தங்கள் கணவன்மார்கள் பாதுகாப்பாகத் திரும்பி வரத் துணை செய்பவள் அன்னை பவானியே என்பது அவர்களின் நம்பிக்கை. அசாதாரண சூழல்களில் பெரும் போராட்டத்துக்குப் பின்பு உயிர் பிழைத்து கணவன் திரும்பி வந்ததும், இந்தக் கோயிலுக்கு வந்து தங்களது திருமாங்கல்யத்தைக் காணிக்கையாக வழங்குவது வழக்கம்.
மழை பொழியவும், காலரா, வைசூரி போன்ற கொடிய நோய்கள் தாக்காமல் இருக்கவும் இவளே தங்களைக் காத்தருள்கிறாள் என்கிறார்கள் மக்கள்.

விரைவில் திருமணம் நடக்க இங்கே நிகழும் குடைக்கல்யாண பரிகாரம் முக்கியமானது. திருமணம் ஆக வேண்டிய பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும், கரகம் சுமந்து வந்து நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.
இளைஞர்களும் இளம் பெண்களும் பட்டாடை உடுத்தி, சந்தனக் குங்குமம் பூசிக் கொண்டு, தலையில் கரகத்தைச் சுமந்தபடி, அம்மனுக்குப் பிரியமான இசைக் கருவிகள் முழங்க, கரகம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இது ‘குடைக் கல்யாணம்’ என்று அழைக்கப்படுகிறது.
தீச்சட்டி ஏந்தல், வேப்பம் சேலை உடுத்தல், கோழி சுற்றி விடுதல், உப்பு மிளகு கொட்டுதல், தேங்காய் உருட்டல், அங்கப் பிரதட்சம், மாவிளக்கு - அகல் விளக்கு ஏற்றுதல், துலாபாரம் கொடுத்தல், வேப்பிலையால் மந்திரித்தல், சேலை சாத்துதல், பொங்கல் வைத்தல், மொட்டை அடித்தல், திருமாங்கல்ய காணிக்கை அளித்தல் எனப் பக்தர்கள் தங்கள் வேண்டுகோளுக்கு ஏற்ப நேர்த்திக்கடன் செலுத்துவதை நம்மால் காணமுடியும்.
ஆடி மாதத்துக்கு முன்பும் பின்பும் உள்ள 14 வாரங்களும், சித்திரா பௌர்ணமி நாளும் இங்கு விசேஷம். திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 முதல் 12.30 மணி வரையும்; பிற்பகல் 3 முதல் இரவு 9 மணி வரையும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5 முதல் தொடர்ந்து இரவு 9 மணி வரையும் நடை திறந்திருக்கும். அன்றாடம் காலை 8 மணி, 11 மணி, மாலை 5 மணி என மூன்று வேளைகளும் பவானி அம்மனுக்குத் தீர்த்த அபிஷேகம் செய்யப்படுகிறது. குங்குமமும் மஞ்சளும் கலந்த இந்தத் தீர்த்தம் நோய்களைத் தீர்க்கும் மகாபிரசாதமாக உள்ளது.

எப்போதும் கூட்டம் நிறைந்திருக்கும் இந்த ஆலயத்தில் அருமையான அன்னதானமும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அம்மனுக்குச் சேலை சாத்தி இங்கு வேண்டிக்கொண்டால் தீராத துன்பங்கள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை.




















