Nvidia-வின் 'AI PC' : ஒற்றை சிப் தான்! `உங்க லேப்டாப்பே பேசும், யோசிக்கும்' - வே...
நெல்லை: தகாத உறவைக் கைவிட மறுத்த மகள்; வாயில் விஷம் ஊற்றி கொன்று, தற்கொலை நாடகமாடிய பெற்றோர் கைது
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள செண்பகராமநல்லூரைச் சேர்ந்தவர் சிவன். இவரது மனைவி வைரம்மாள். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். இவரது 5வது மகள் அமுதா.
திருமணமாகாத நிலையில் அமுதா தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவரது உறவினர் ஒருவர் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார். நாளடைவில் அவருக்கும் அமுதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த உறவினருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், இருவருக்கும் திருமணம் மீறிய உறவாக மாறியது. இந்த விவகாரம் அமுதாவின் பெற்றோருக்குத் தெரிய வர தகாத உறவைக் கைவிடும்படி அமுதாவைக் கண்டித்துள்ளனர். ஆனால், அமுதா அவருடனான பழக்கத்தைக் கைவிட மறுத்துள்ளாராம்.
இதுதொடர்பாக அமுதாவிற்கும் அவரது பெற்றோருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று அமுதா வீட்டில் தூக்கில் தொங்கியுள்ளார்.
அவர் தற்கொலைசெய்து கொண்டதாக பெற்றோர்கள் உறவினர்கள், ஊர்க்காரர்களிடம் கூறியுள்ளனர். இதுகுறித்து மூலக்கரைப்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு அமுதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அமுதாவின் கழுத்துப் பகுதியில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகித்தனர்.

அமுதாவின் தாய், தந்தையிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பலமுறை கூறியும், அமுதா தகாத உறவைக் கைவிட மறுத்ததால் அவரது வாயில் விஷத்தை ஊற்றிவிட்டு அமுதாவின் கழுத்தை நெரித்தோம். சிறிது நேரத்தில் அமுதா உயிரிழந்ந்தார்.
பின்னர் உடலை தூக்கில் தொங்கவிட்டோம் எனக் கொலை செய்ததை இருவரும் ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து அமுதாவின் தாய், தந்தை இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.



















