``கார்கே-ஜிக்கு வயதாகிவிட்டது... அவர் அமர்ந்தே கோஷமிடட்டும்" - நாடாளுமன்றத்தில் ...
புதுக்கோட்டை: 'தொண்டைமான் சிலையும், அவர் அமைத்த கோயிலும்!' - தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுப்பு
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வரும் தமிழ்த்துறைத் தலைவர் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் கா.காளிதாஸ், பேராசிரியர் சாலை கலையரசன், பேராசிரியர் கருப்பையா ஆகியோர் கொண்ட வரலாற்று ஆய்வுக் குழுவினர் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் செல்லும் வழியில் உள்ள நெடுஞ்சேரியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த பகுதியில் இடிந்த நிலையில் அனுமன் கோயில் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். இது பற்றி ஆய்வாளர்கள் பேசும்போது,
"இந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள சிலைகளில் ஒன்று, தொண்டைமான் மன்னர் சிலை. மன்னர் தலையில் தொப்பியுடன் காணப்படுகின்றார்.

மன்னரைச் சுற்றிலும் கோயிலுக்கு விளக்கத்தம்பம் அளித்த குறுநிலக்கிழார்களின் உருவங்கள் உள்ளன. அதேபோல், ஆலயத்தில் கிடைத்த ஒரே ஒரு சிலை கையில் சஞ்சீவி மலை தாங்கிய அனுமன் சிலையாகும். அதுவும், தொண்டைமான்களுடைய குலதெய்வச்சிலை மற்றும் புதுக்கோட்டை அரசு இலட்சினைச் சின்னம். சிலையில் இருக்கும் மன்னர் யார் என்ற ஆய்வுக்கு வருகிறபோது, புதுக்கோட்டை பகுதியில் சங்கம வம்ச மன்னர்களின் பிரதிநிதிகள் பலரின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஹரிஹர புக்கர் ஆகியோரின் சகோதரர் கம்பனனின் பெயரிட்ட கி.பி 1374-ம் ஆண்டு கல்வெட்டு குடுமியாமலையில் காணப்படுகிறது. கிபி 13 34 -35 மதுரை சுல்தானியர் ஆட்சியில் மாபார் ( மாத்தூர்) பகுதியை ஜலாலுதீன் அசன்சா ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.
கிபி 14 99 இல் புதுக்கோட்டை பகுதியை நரசப்ப நாயக்கர் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். இந்தத் தொப்பி அணிந்த மன்னர் சிலை இவர்களாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், கிபி 1641 - 1730 -இல் இவர்களை வெற்றி கண்டு இரகுநாதராய தொண்டமான் ஆட்சிக்கு வருகிறார். இவரது சிலை புதுக்கோட்டை பிரகதாம்பாள் ஆலயத்தில் உள்ளது. அதில் குடுமியும், நெடுஞ்சேரியில் கண்டெடுக்கப்பட்ட சிலையில் தொப்பியுடனும் காணப்படுகிறார். பொம்மாடி மலை என்ற காரணப்பெயர். சங்கம ஆட்சிக்கு பின் விஜயநகர பேரரசின் ஆட்சிக்கு வந்தவர்கள் சாலுவ வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.

சாலுவ முதலாம் நரசிம்மன் (கி.பி 1486 - 1497) மகன் இம்மாடி நரசிம்மன் காலத்து கல்வெட்டுகள் இரண்டு இங்கு காணப்படுகின்றன. நெடுஞ்சேரிக்கு அருகில் உள்ள தற்போதைய பொம்மாடி மலை இம்மாடி நரசிம்மன் காலத்தில் இம்மாடி மலை என்றாகித் தற்போது பொம்மாடி மலை என்றாகி இருக்கக்கூடும். இன்றைய மேட்டுப்பட்டி கேட் முனிக் கோயிலுக்கு அருகில் சாலுவன் குடியிருப்பு என்று ஒரு குடியிருப்பு (தெரு) உள்ளதையும் சான்றாக்கிக் கொள்ளலாம். இம்மாதிரியான தொன்மைச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை" என்றார்கள்.
















