'தமிழகத்தை ஆளும் கவர்ச்சிக் கூட்டம்; உள்ளாட்சித் தேர்தலில் பதிலடி!' - சூளுரைத்த ...
'பெத்தி' படத்தில் ஜான்வி கபூர் கதாபாத்திரம்: - பகிரங்க மன்னிப்பு கேட்ட இயக்குநர் புச்சி பாபு சனா!
ராம் சரண் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் பெத்தி. புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கும் இந்தப் படத்தில் நடிகை ஜான்வி கபூர் 'அச்சியம்மா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒரு கமர்ஷியல் மசாலா படமாக வெளிவந்துள்ள இத்திரைப்படத்தில், ஜான்வியின் கதாபாத்திரம் காட்டப்பட்ட விதம், தவறான கேமரா கோணங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, துன்புறுத்தல், சம்மதமில்லா செயல் ஆகியவற்றை சாதாரணமாக்குவது போன்ற வசனங்கள் ஆகியவை இணையதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை எவ்வாறு எழுத வேண்டும், எப்படித் திரையில் காட்ட வேண்டும் என்பது குறித்த விவாதங்களும் இதனால் தீவிரமடைந்தன. அதைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா சமூக வலைத்தள பக்கத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் புச்சி பாபு சனா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ``திரைப்படம் என்பது மக்களை மகிழ்விப்பதாகவும், ஊக்கப்படுத்துவதாகவும், அவர்களோடு இணைவதாகவும் இருக்க வேண்டும். அது யாருக்கும் சங்கடத்தையோ அல்லது அவமதிப்பையோ ஏற்படுத்தக் கூடாது. 'பெத்தி' படத்தின் சில காட்சிகள் குறித்து வந்த விமர்சனங்களை நாங்கள் தீவிரமாகக் கவனித்து ஏற்றுக்கொள்கிறோம். திரைக்கு உள்ளேயும் வெளியேயும் பெண்கள் மீது நான் எப்போதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்.

எந்தவொரு பெண் கதாபாத்திரத்தையும் தவறாகக் காட்டவோ அல்லது அவமதிக்கவோ நாங்கள் நினைக்கவில்லை. படத்தின் ஏதேனும் ஒரு பகுதி அப்படிப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால், மக்களின் அந்த உணர்வுகளுக்கு நாங்கள் மதிப்பளித்து, எங்கள் மனமார்ந்த மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறோம். மக்களின் கருத்துக்களை ஆய்வு செய்த பின், சர்ச்சைக்குரிய அந்தப் பகுதிகளை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு பெண்ணும் கண்ணியத்துடனும், மதிப்புடனும் சித்தரிக்கப்பட தகுதியானவர்கள்" என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.











