சேயோன்: 'அன்று கல்லூரி சீனியர்; இன்று இசையமைப்பாளர்'; SK - SANA 24 வருட நட்பு பற...
'மதுபோதையில் டிராக்டரை ஓட்டிய நபர்; ஆட்டுமந்தையில் மோதி 81 ஆடுகள் பலி' - திருச்சியில் அதிர்ச்சி
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் பி.இ பட்டதாரியான நித்திஸ். இவர், கடந்த 4 வருடமாக செம்மறி ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தச்சங்குறிச்சி பகுதியில் மேய்ச்சல் குறைவாக இருப்பதால், அருகே உள்ள நெய்க்குளம் பகுதியில் மேய்ச்சலுக்காக 250 செம்மறி ஆடுகளை தச்சங்குறிச்சியில் இருந்து சிறுகனூர் செல்ல சாலையில் ஓட்டிச் சென்றார்.

அப்போது, அந்த வழியாக இரண்டு டிப்பருடன் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டர் ஆடுகள் மீது மோதியது. இதில், 81 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது. மேலும், 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயமடைந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த காணக்கிளியநல்லூர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அவர்களின் விசாரணையில் டிராக்டரை ஓட்டி வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நல்லதம்பி என்பவர் சாலை வளைவில் வாகனத்தை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. அதோடு, அவர் மதுபோதையில் இருந்ததாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து காணக்கிளியநல்லூர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை வளைவில் அதிவேகமாக ஓட்டி வந்த டிப்பர் டிராக்டர்கள் மோதிய விபத்தில் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள 81 செம்மறி ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.





















