Tamilnadu State Awards: திருத்தப்பட்ட விருது பட்டியல் - 'சுந்தரி' சீரியலுக்கான அ...
`மனசு பதறுகிறது; காவல்துறைக்குப் பாடம் புகட்டுவோம்' - அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையில் நீதிபதி!
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமாரை, கடந்த 2025 ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படைக் காவலர்கள் விசாரித்தனர். அதில் ஜூன் 28ஆம் தேதி அவர் கொலைசெய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் தனிப்படைக் காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைதுசெய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி மதுரை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு, நீதிபதி ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில், "அஜித்குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. வழக்கு பதியப்பட்டுள்ள 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி நகை திருட்டு புகார் அளிக்கப்பட்டது உண்மையா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு சிபிஐ தரப்பில், "அது உண்மை இல்லை. அறிக்கையே தயாராகி வருகிறது." என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, "ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு ஒருவரை அடித்துக் கொலை செய்துவிட்டனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? அவர் தானே காரணம்?" எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், ``இதற்கு என்ன காரணம்? முன்விரோதம் ஏதும் இருந்ததா?" எனக் கேள்வி எழுப்பினார்.
"முன்விரோதம் எதுவும் இல்லை. டிஎஸ்பி விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது" என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, "யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனசு பதறுகிறது. ஒன்றுமில்லா விஷயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள். காவல்துறையினருக்குப் பாடம் புகட்டுவோம்" எனக் குறிப்பிட்டு வழக்கை பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


















