கல்வி, வேலைவாய்ப்பு : சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமத்திற்கு மலேசிய துணைத் தூதரக...
விருதுநகர்: நிச்சயத்துக்கு பின் திருமணத்துக்கு மறுப்பு - இளம்பெண்ணையும், தாயையும் வெட்டிய மணமகன்
விருதுநகரில் திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணை திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகன் அரிவாளால் சரமாரியாக வெட்டிய நிலையில், தடுக்க முயன்ற தாயையும் வெட்டியுள்ளார். இதில் பெண்ணின் தாயார் பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்குறிச்சி மருத்துவர் தெருவைச் சேர்ந்த முத்துக்குமாரின் மகள் வர்ஷா (21). இவருக்கும், முத்துக்குமாரின் அக்கா மகனான யுவராஜாவுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வர்ஷா யுவராஜாவை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், இன்று காலை வர்ஷா தனது வீட்டின் முன்பு துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, அரிவாளுடன் அங்கு வந்த யுவராஜா, திடீரென அவரை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த வர்ஷா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அந்த நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய வர்ஷாவின் தாயார் விநாயகஜோதி, மகளை காப்பாற்ற முயன்ற போது யுவராஜா அவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில், விநாயகஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த வர்ஷாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மல்லாங்கிணறு காவல் நிலைய போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து யுவராஜா, பயன்படுத்திய அரிவாளுடன் மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளம்பெண்ணை கொலை செய்ய முயன்றதுடன், தடுக்க வந்த அவரது தாயை வெட்டிக்கொன்ற இந்த சம்பவம் கல்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.






















