`உனக்காகத்தான் மனைவியை கொன்றேன்'- காதலிக்குத் தகவல் சொன்ன கணவன்
Doctor Vikatan: கழுத்துவலி உள்ளவர்கள் தலையணை பயன்படுத்தாமல் வெறும் தரையில் படுக்க வேண்டுமா?
Doctor Vikatan: என் வயது 46. கடந்த சில மாதங்களாக கழுத்து வலி அதிகமாக இருக்கிறது. பெயின் கில்லர் போட்டும் பலன் இல்லை. இந்நிலையில், தலையணை வைத்துப் படுப்பதுதான் கழுத்துவலிக்குக் காரணம் என்றும், அதைத் தவிர்த்துவிட்டு வெறுமனே படுக்கும்படியும் சொல்கிறார் என் நண்பர். இது உண்மையா, தலையணையைத் தவிர்த்தால் கழுத்துவலி சரியாகிவிடுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, எலும்பியல் சிகிச்சை மருத்துவர் ரமேஷ்பாபு.

கழுத்து வலி என்றதுமே, தலையணை வைக்காமல் படுத்தால் சரியாகிவிடும் என்கிற கருத்து பலரிடமும் உள்ளது. தலையணை இல்லாமல் படுத்தால் உங்களுக்கு வலி சரியாகிறது என்றால் படுக்கலாம். ஆனால், கழுத்துவலி உள்ள எல்லோருக்கும் இது தீர்வாக அமையும் என்று சொல்ல முடியாது.
பல நாள்களாக கழுத்துவலி தொடர்வதாகச் சொல்லும் நீங்கள், அதற்கான மருத்துவரைப் பார்த்து காரணம் கேட்டீர்களா, சிகிச்சையை எடுத்தீர்களா என்று தெரியவில்லை. காரணம் தெரிந்து சரியான சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. நீங்களாகவே பெயின் கில்லர் வாங்கிப் பயன்படுத்துவது சரியல்ல.
நீங்கள் பயன்படுத்தும் தலையணை கடினமாக இல்லாமல் மென்மையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அந்த வகையில் இலவம்பஞ்சு தலையணை  மிகவும் ஏற்றது. ஃபோம்  (Foam) தலையணைகளும் உபயோகிக்கலாம்.  குறிப்பாக, மெமரி ஃபோம்  (Memory Foam)  தலையணைகளை வைத்துப் படுத்துக்கொள்ளலாம்.  
மெமரி ஃபோம் வகைத் தலையணையில் தலை வைத்துப் படுக்கும்போது ஃபோம் அமுங்கும். அதிலிருந்து தலையை எடுத்ததும், மீண்டும் தலையணை பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.
சாதாரண ஃபோம் தலையணையைப் பயன்படுத்தும்போது நாளாக, ஆக, அது பழைய நிலைக்குத் திரும்பாது. கழுத்து வலி உள்ளவர்களுக்கு இந்த வகை தலையணையோ, மெத்தையோ ஏற்றவை அல்ல.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


















