``சுடுகாட்டுக்கு சாலை இல்லை, சேறு சகதியில் நடந்து போகிறோம்'' - நான்கு தலைமுறையாக...
Keerthy Suresh: `சிரஞ்சீவியைவிட விஜய் நல்ல டான்சரா?' - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி
நடிகை கீர்த்தி சுரேஷ் வரும் 28ம் தேதி வெளியாகவுள்ள `ரிவால்வர் ரீட்டா' படத்தின் புரொமோஷன் பணிகளில் பரபரப்பாக உள்ளார். இதன் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த நடனக் கலைஞர்" எனக் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார்.
கீர்த்தியின் கருத்து சிரஞ்சீவியின் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கீர்த்தி சுரேஷிடம் விஜய்யை ஏன் சிறந்த டான்ஸராகக் கருதுகிறீர்கள் என்றும், இது நடிகர்களின் தோற்றத்தைப் பற்றிய உங்கள் கருத்தா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
Keerthy Suresh நேரடி பதில்
அதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், "யார் பார்க்க நன்றாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றியது அல்ல. நான் விஜய்க்கு எந்த அளவு பெரிய ரசிகை என்று சிரஞ்சீவி அவர்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன். நான் சிரஞ்சீவி சாரை நேசிக்கிறேன், அவருடன் பணிபுரிவதையும் நேசிக்கிறேன், அவரை நான் மதிக்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
அவர் மேலும், "நாங்கள் பேசியபோது நான் அவரிடமும் இதைச் சொல்லியிருக்கிறேன். இது தவறான விதத்தில் வெளிப்படும் என்று நினைக்கவில்லை. சிரஞ்சீவி காருவின் ரசிகர்களை நான் காயப்படுத்தியிருந்தால், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் படப்பிடிப்பின்போது வேடிக்கையாக உரையாடிக் கொள்வோம். நாங்கள் சேர்ந்து பணியாற்றியபோது, நான் அவரிடம், 'சார், எனக்கு விஜய் சாரோட டான்ஸ்லாம் ரொம்பப் பிடிக்கும்' என்று சொன்னேன். அவர் அதை மிகவும் ஸ்போர்ட்டிவ் ஆக எடுத்துக்கொண்டார்" என்று தெரிவித்தார்.
தனது கருத்து இரு நடிகர்களையும் எதிர்மறையான விதத்தில் ஒப்பிடுவதற்காகச் சொல்லப்படவில்லை என்று கீர்த்தி சுரேஷ் விளக்கியுள்ளார். "அவர்கள் (நேர்காணலில்) என்னிடம் கேட்டபோது, நான் என் மனதில் பட்டதை அப்படியே சொன்னேன். அவர்கள் இருவருமே பெரிய நட்சத்திரங்கள். என் அம்மாவே சிரஞ்சீவி சாருடன் நடித்திருக்கிறார். யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை. சந்தேகமே இல்லாமல், அவர் நாட்டின் மிகச் சிறந்த நட்சத்திரங்களில் ஒருவர். நான் துளியும் மரியாதை குறைவாகப் பேசவில்லை" என்று திட்டவட்டமாகச் பேசியிருக்கிறார்.
"என் கருத்தைக் கேட்டபோது, என் மனதில் பட்டதைச் சொன்னேன். என் மனதில் இருப்பதைச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. இதற்கு ஒரு காரணம், நான் விஜய் சாரின் படங்களைப் பெரும்பாலும் அதிகம் பார்த்திருக்கிறேன். நான் துளியும் தவறான உள்நோக்கத்துடன் சொல்லவில்லை. நான் சிரஞ்சீவி சாரிடம் என் கருத்தைச் சொன்னபோதுகூட, அவர் எனது நேர்மையைப் பாராட்டினார்" என்று தான் நடிகர்களை ஒப்பிடவோ அல்லது தரவரிசைப்படுத்தவோ நினைக்கவில்லை என்பதை கீர்த்தி சுரேஷ் தெளிவுபடுத்தினார்.
டார்க் காமடி படமான ரிவால்வர் ரீட்டா குடும்பங்கள் பார்க்கும் வெற்றிப்படமாக அமையும் என கீர்த்தி சுரேஷ் நம்பிக்கையுடன் இருக்கிறார். அடுத்ததாக 'கண்ணிவெடி' என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.



















