Maa Inti Bangaaram: "சாய் பல்லவியை மனதில் வைத்துதான் இந்தக் கதை உருவாக்கப்பட்டது!' - பகிரும் சமந்தா
சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்ஷன் படமான 'மா இண்டி பங்காரம்' ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். கடைசியாக சமந்தா நடிப்பில் 'குஷி' திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

அந்தத் திரைப்படத்திற்குப் பிறகு சமந்தா நடித்திருக்கும் இப்படம், ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்திற்கான புரோமோஷன் நிகழ்வுகளிலும் சமந்தா பங்கேற்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்குச் சமந்தா பதிலளித்திருக்கிறார். அப்படி ரசிகர்களின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதிலளித்து வந்தவர், இந்தப் படத்தில் முதலில் சாய் பல்லவி நடிக்கவிருந்ததாக தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர், "என் தயாரிப்பு நிறுவனமான 'டிராலலா' (Tralala) நிறுவனத்தின் முக்கிய நோக்கமே பெண்களை மையப்படுத்திய கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான்.
அந்த வகையில், இந்த 'மா இண்டி பங்காரம்' படத்தின் கதையை முதலில் நடிகை சாய் பல்லவியை மனதில் வைத்துதான் உருவாக்கினோம். அவருக்கே கதையை முதலில் கொண்டு செல்லவும் நினைத்தோம்.
ஆனால், சாய் பல்லவி அப்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால், அவருக்கு இதற்கான நேரம் கிடைக்கவில்லை என்பது எனக்குத் தெரியும்.
அதனால், அந்தப் படத்தின் இயக்குநர்கள் என் கதாபாத்திரத்திற்கும், எனக்கு ஏற்றவாறு கதையில் சில மாற்றங்களைச் செய்தார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்தத் திரைப்படத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை; இந்தத் திரைப்படம்தான் என்னைத் தேர்ந்தெடுத்தது," எனக் கூறியிருக்கிறார்.
இந்தப் பதிவை நடிகை சாய் பல்லவி அவருடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, "'மா இண்டி பங்காரம்' திரைப்படம் உங்களை வந்தடைய வேண்டும் என இருந்திருக்கிறது." எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

















