"அவர் ஒரு மூத்த அண்ணனைப் போல என்னிடம் பேசினார், என் கனவு.!"- விராட் கோலி குறித்து வைபவ் சூர்யவன்ஷி
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றில் தோல்வியடைந்திருந்தாலும் அந்த அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
15 வயதான சூர்யவன்ஷி 16 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரை சதம் உள்பட 776 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்தார்.
இதில் 63 பவுண்டரியும், 72 சிக்சரும் அடங்கும். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேட்டி அளித்திருக்கும் சூர்யவன்ஷி விராட் கோலி குறித்து பகிர்ந்திருக்கிறார்.
விராட் கோலி குறித்து பேசிய அவர், "நான் முன்பு ஆர்சிபி அணியின் ரசிகனாக இருந்தேன். சொல்லப்போனால், நான் விராட் கோலியின் தீவிர ரசிகன்.
விராட் அண்ணா என் தோள் மேல் கை போட்டு என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது, நிஜமாகவே என் கனவு நனவானது போல் இருந்தது.
அவர் பேசிய விதம், அவர் ஒரு பெரிய வீரர் என்பது போலவே தெரியவில்லை. ஒரு மூத்த அண்ணனைப் போல என்னிடம் பேசினார். அவர் விஷயங்களை விளக்கிய விதமும், என்னிடம் பேசிய விதமும் அற்புதமாக இருந்தது.

நான் என்ன செய்ய வேண்டும், எதில் என்னுடைய கவனத்தை செலுத்த வேண்டும் என்பதை அவர் எனக்கு எடுத்துரைத்தார்" என்று விராட் கோலி குறித்து சூர்யவன்ஷி நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.




















