`பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்' அமைக்க வேண்டும்' - ஜக்...
Nepal Flood: நேபாள வெள்ளத்தில் கம்பீரமாக நின்ற ஒரே வீடு; எப்படி தப்பியது?
கடந்த 26-ம் தேதி, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர்.
இந்த வெள்ளம் மனிதர்களின் உயிர்களை மட்டுமே குறி வைக்கவில்லை. வாகனங்கள், வீடுகள் எனக் கோடிக்கணக்கில் மதிப்புள்ள சொத்துகளையும் இந்த வெள்ளம் காணாமல் போகச் செய்துவிட்டது.
நேபாள வெள்ள வீடியோக்களில் ஒரு வீடியோ மிகவும் வைரலானது. சுற்றி இருக்கும் அனைத்து வீடுகளும் இருந்த இடமே தெரியாமல் காணாமல் போயிருக்க, ஒரேயொரு வீடு மட்டும் கம்பீரமாக நிற்கும் வீடியோ அது.

சுற்றி இருக்கும் அனைத்து வீடுகளும் தரைமட்டமாக, அந்தவொரு வீடு மட்டும் தப்பியது எப்படி என்கிற விளக்கமளிக்கும் வீடியோ எக்ஸ் தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவின் விளக்கம் இதோ...
“வெள்ளத்தில் அந்த வீடு தப்பித்திருப்பது ஏதோ அதிர்ஷ்டம் போலத் தோன்றலாம்.
ஆனால் அது எப்படித் தப்பித்தது என்பதற்குப் பின்னால் ஒரு துல்லியமான கட்டிடக் கலை அறிவியல் (Structural physics) இருக்கிறது.
முதலாவது, அதன் கட்டுமான முறை.
இமயமலைப் பள்ளத்தாக்குகளில் உள்ள பெரும்பாலான பாரம்பர்ய வீடுகள் செங்கல் அல்லது கற்களை மட்டுமே வைத்துக் கட்டப்பட்டிருக்கின்றன.
இவை மேலே இருந்து வரும் எடையைத் தாங்கும். ஆனால், பக்கவாட்டில் இருந்து பலமான விசை தாக்கும்போது சுவர்கள் எளிதாகப் பிளந்து கூரை உள்நோக்கி விழுந்துவிடும்.
ஆனால், இந்த வீடு வலுவூட்டப்பட்ட கான்கிரீட் சட்டகத்தைக் (Reinforced Concrete Frame) கொண்டு கட்டப்பட்டுள்ளது.
Explanation into how this house survived Nepal flood. pic.twitter.com/DAHHG0BSyh
— Architecture Presentation (@arcpresentation) August 30, 2026
தொடர்ச்சியான கம்பிகள் அதன் தூண்கள், விட்டங்கள் மற்றும் அடித்தளத்தை ஒரே வலுவான எலும்புக்கூடு போல ஒன்றுடன் ஒன்று பிணைத்து வைத்துள்ளன.
இதனால், சேற்று வெள்ளம் வந்தடித்தபோது, கான்கிரீட் சட்டகம் அந்த மோதல் விசையைத் தாங்கிக்கொண்டு, அதை அப்படியே தரையின் கீழ் கடத்திவிட்டது.
இரண்டாவது, வீட்டின் அமைவிடமும், வடிவமும் முக்கிய காரணங்களாகும்.
வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மிகப்பெரிய பாறைகள் அதன் மையப் பகுதியில்தான் அதிக வேகத்துடன் பாயும்.
இந்த வீடு அந்தப் பாதையிலிருந்து சற்று விலகி, கொஞ்சம் உயரமான இடத்தில் அமைந்திருக்கிறது.
மேலும் இதன் கச்சிதமான வடிவத்தால், வந்தடைந்த வெள்ளம் இரண்டாகப் பிரிந்து வீட்டின் இரு பக்கங்களிலும் விலகிச் சென்றிருக்கிறது.
அதுமட்டுமின்றி, முதலில் வந்து படிந்த சேறு ஒரு இயற்கைச் சரிவை உருவாக்கி, அதற்கு அடுத்து வந்த அதிவேக வெள்ள அலைகளை வீட்டின் மீது மோதவிடாமல் மேல்நோக்கி விலக்கிவிட்டுவிட்டது.”




















