`4 சுவருக்குள் முடிந்திருக்க வேண்டியது' பூதாகரமாக்கிய அண்ணாமலை - விலகல் அறிவிப்ப...
"இசுலாமியச் சொந்தங்கள் அனுபவிக்கும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!"- படத்தை பாராட்டிய சீமான்
விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'சிறை'.
'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார்.
'7 Screen Studio' லலித் குமார் தயாரித்திருந்த இந்தப்படத்தில் அவரது மகன் எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'சிறை' திரைப்படம் ஓடிடியிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பாராட்டி இருக்கிறார்.
மெய் சிலிர்த்தேன்!
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " அன்பிற்குரிய சகோதரர் லலித்குமார் அவர்களின் 7 screen studio நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அன்புத்தம்பி சுரேஷ் ராஜகுமாரி அவர்களின் இயக்கத்தில், அன்பு இளவல் தமிழ் அவர்களின் ஆகச்சிறந்த கதை, திரைக்கதை, உரையாடலில், அன்புத்தம்பி விக்ரம் பிரபு, அன்புத்தம்பி அக்ஷய்குமார் ஆகியோர் நாயகர்களாக நடித்து வெளியான வெற்றிப்படைப்பான ‘சிறை’ திரைப்படத்தினை அண்மையில் கண்டு மெய் சிலிர்த்தேன்.
மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரும் 'சிறை'
1980களில் நடந்த உண்மை நிகழ்வைத் தழுவி அன்புத்தம்பி தமிழ் அவர்கள் எழுதிய கதையை, ஆகச்சிறந்த திரைப்படைப்பாகத் தந்துள்ள சுரேஷ் ராஜகுமாரி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இயக்குநர், நடிகராக மட்டுமின்றி கதாசிரியராகவும் தம்பி தமிழ் பெரும் வெற்றி பெற்றுள்ளார்.
காவல்துறையில் பணியாற்றிய தம்முடைய அனுபவத்தின் மூலம் காவல்துறையில் நடக்கும் உணர்வுப்பூர்வமான உண்மைகளை ஆகச்சிறந்த கலைப்படைப்புகளாக ஆக்கித்தந்து, சமூகத்தின் இருண்ட பக்கங்களுக்கு புதுவெளிச்சம் பாய்ச்சும் தம்பி தமிழின் அளப்பரிய கலைத்திறன் மிகுந்த போற்றுதற்குரியது. ‘சிறை’ பொதுவாக வலியையும் வேதனையையும் தரும் என்பார்கள். ஆனால், இந்த ‘சிறை’ திரைப்படம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது.
ஒரே ஒரு பெயர்.!
வேலை பளு காரணமாக திரைப்படம் வெளியான உடனேயே காணக்கூடிய சூழல் அமையாத நிலையில், இப்படி ஒரு நல்ல படத்தை இத்தனை நாட்கள் பார்க்காமல் தவறவிட்டுவிட்டோமே என்று வருந்தும் அளவிற்கு ஆகச்சிறந்த கலைப்படைப்பாக சிறை திரைப்படம் அமைந்துள்ளது மிகுந்த மனநிறைவைத் தந்தது.
கதையின் நாயகனுக்கு அப்துல் ரவூப் என்ற பெயர் வைத்ததற்காவே தம்பி தமிழ் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பாராட்டுகள்.
ஒரே ஒரு பெயர் அதிகாரவர்க்கத்தின் பார்வையிலும், சிந்தனையிலும் எத்தனை மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை தோலுரித்துக் காட்டுகிறது ‘சிறை’ திரைப்படம்.
மதம் கொண்டே எடை போடப்படுகிறார்கள்
சாமானிய மனிதர்கள் அவர்கள் சார்ந்துள்ள சாதி, மதம் கொண்டே எடை போடப்படுகிறார்கள் என்ற உண்மையை வெகு இயல்பாக உணர்த்துகிறது ‘சிறை’ திரைப்படம். இசுலாமியப் பெயர் வைத்திருந்தாலே எந்த அளவிற்கு அவர்கள் சோதனைக்கும், வேதனைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை ஐயா அப்துல் கலாம் முதல் இந்தி நடிகர் ஷாருக்கான் வரை நாம் செய்திகளாக கேள்விப்பட்டு அறிந்தோம்.
அத்தனை உயரத்திற்கு சென்ற புகழ் பெற்ற ஆளுமைகளுக்கே அந்த நிலைமை என்றால் இந்த மண்ணில் வாழும் சாமானிய இசுலாமியச் சொந்தங்கள் எத்தகைய துயரங்களையும், வேதனைகளையும் அதிகார மட்டத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் சந்திக்க நேர்கிறது என்பதைப் பார்க்கும் அனைவருக்கும் கடத்துகிறது ‘சிறை’ திரைப்படம்.

துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!
20 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை கைதிகளாகவே சிறையில் இசுலாமியச் சொந்தங்கள் மனதளவிலும், உடலளவிலும் அனுபவித்து வரும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!
காவல்துறையிலும், நல்ல மனிதர்களும், கெட்ட மனிதர்களும் கலந்தே உள்ளனர் என்பதையும், துறை ரீதியாக அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், சவால்கள், அதனால் ஏற்படும் உளவியல் பாதிப்புகள், அரசியல் அதிகாரத்தின் அழுத்தத்தால் வேறு வழியின்றி அவர்கள் எடுக்க வேண்டிய முடிவுகள், கடுமையாக நடந்துகொள்ள வேண்டிய சூழல்கள் என அனைத்தையும் கதையின் போக்கிலேயே வெளிப்படுத்தி புதிய வெளிச்சம் பாய்ச்சியுள்ளது சிறைத் திரைப்படம்.
விக்ரம் பிரபுவிற்கு மிகச்சிறந்த படம்
ஈழமக்களின் துயர் துடைக்க தன் இன்னுயிர் ஈந்த மானத்தமிழ் மகன் முத்துக்குமாருக்கு மூத்த நெருப்பு ‘தழல் ஈகி’ அப்துல் ரவூப் அவர்களின் ஈகத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் விதமாக, நாம் தமிழர் கட்சி தம் மாணவர் பாசறையின் குறியீடாக அப்துல் ரவூபின் திருவுருவத்தையே வரித்துக்கொண்டது.
ஆனால், இப்படத்தின் ஒரே ஒரு உரையாடல் மூலம் அனைத்து மக்களுக்கும் அப்துல் ரவூபின் ஈகத்தை தம்பி தமிழ் சேர்த்துள்ளது மனதை நெகிழச் செய்துவிட்டது. விக்ரம் பிரபு உண்மையான காவல்துறை அதிகாரியாக மிடுக்கான தோற்றத்துடனும், அதிகார தோரணையுடனும் காவலர் கதிரவனாக தம்பி விக்ரம் பிரபு நடிப்பில் உச்சம் தொட்டுள்ளார். டாணாக்காரன் திரைப்படத்திற்குப் பிறகு தம்பி விக்ரம் பிரபுவிற்கு மிகச்சிறந்த படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.
நெஞ்சை உருகச் செய்த அழுகை
இந்த இரண்டு மாபெரும் வெற்றிப் படங்களும் தம்பி தமிழ் அவர்களின் மிகச்சிறந்த படைப்புகளாகும். அவரைப்போலவே படத்தின் நாயகனாக வரும் தம்பி அக்ஷய்குமார் அறிமுக நாயகன் என அறியாத அளவிற்கு, தன்னுடைய திறமையான நடிப்பாற்றலால் கதையின் நாயகனாகவே வாழ்ந்துள்ளார். இறுதிக் காட்சியில் அவரின் அழுகை நெஞ்சை உருகச் செய்துவிட்டது.
80களில் வாழ்ந்த சிவகங்கை மண்ணின் மகளாக வரும் நாயகி அனிஷ்மா சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். விக்ரம் பிரபுவின் மனைவியாக வரும் அனந்தா தம்பிராஜா ஏற்ற பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நீதிபதியாக வரும் தேனப்பன், காவல் ஆய்வாளராக வரும் தம்பி மூணாறு ரமேஷ், ரகு உள்ளிட்ட அனைவருமே தங்களின் இயல்பான நடிப்பின் மூலம் படத்திற்கு உயிரூட்டியுள்ளனர். அழுத்தமான உரையாடல்களும், அதற்கேற்ற காட்சி அமைப்புகளும் படத்தை ஆகச்சிறந்த காவியமாக்கியுள்ளது.
அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்..!
தம்பி ஜஸ்டின் பிரபாகரின் மனதை வருடும் இசையும், தம்பி மாதேஷ் மாணிக்கத்தின் அழகான ஒளிப்பதிவும், விறுவிறுப்பைக் கூட்டும் தம்பி பிலோமின் ராஜின் அருமையான படத்தொகுப்பும், படத்தினை வேறு உயரத்திற்குக் கொண்டு செல்கிறது. ‘சிறை’ திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்..!
நீதிமன்றங்களே இந்த நாட்டில் வாழும் எளிய மக்களின் இறுதி நம்பிக்கை என்பதையும், காவல்துறையும், நீதித்துறையும் நேர்மையாகச் செயல்பட்டால் இந்த நாட்டில் வாழும் எந்த ஒரு குடிமகனும் அநியாயமாகத் தண்டிக்கப்படாமல் காக்க முடியும் என்பதையும் காட்சிகளால் கற்பிக்கிறது ‘சிறை’ திரைப்படம்.
சமூகத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத கலைப்படைப்பு வீணானதே. நாம் வாழும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘சிறை’ திரைப்படம், சமகால மனிதர்களின் சிந்தனையில் நல்ல மாற்றத்தை உறுதியாக ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

சிறை பார்க்கும் ரசிகர்களின் மனம் நிறை!"
இதுபோன்ற ஆகச்சிறந்த திரைப்படைப்புகளுக்கு நாம் தரும் ஆதரவும், வரவேற்புமே, படைப்பாளிகளுக்குப் பெரும் ஊக்கத்தையும், மேன்மேலும் இதுபோன்ற கலைப் படைப்புகளைத் தரவேண்டும் என்ற உத்வேகத்தையும் அளித்து, தொடர்ச்சியாக நல்ல திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பாக அமையும்.
1984ஆம் ஆண்டு அம்மா லட்சுமி அவர்களின் நடிப்பில் வெளியான ‘சிறை’ திரைப்படம் வெற்றிப் படைப்பானது போல, அன்பு இளவல் சுரேஷ் ராஜகுமாரி அவர்களின் இயக்கத்தில் வெளியான ‘சிறை’ திரைப்படமும் மாபெரும் வெற்றிப்படைப்பானது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது!
‘சிறை’ திரைப்பட இயக்குநர் அன்பு இளவல், சுரேஷ் ராஜகுமாரி, திரைக்கதை ஆசிரியர் அன்புத்தம்பி தமிழ், நாயகர்கள் அன்புத்தம்பி விக்ரம் பிரபு, அன்புத்தம்பி அக்ஷய்குமார், நாயகி அனிஷ்மா உள்ளிட்ட ‘சிறை’ திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்!
சிறை பார்க்கும்
ரசிகர்களின்
மனம் நிறை!" என்று நெகிழ்ச்சியாகப் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.














