காரைக்குடி : காருக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்; நகைகள் திருட்டு; சிக்கிய ...
காரைக்குடி : காருக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்; நகைகள் திருட்டு; சிக்கிய டிரைவர்!
காருக்குள் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் காரைக்குடி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த பாண்டிகுமார் மனைவி மகேஸ்வரி. கடந்த 6 ஆம் தேதி காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கை தைலமரக் காட்டுப்பகுதியில் காருக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இத்தகவல் தெரிந்து குன்றக்குடி இன்ஸ்பெக்டர சுந்தரி தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகேஸ்வரி அணிந்திருந்த நகைகள் காணாமல் போயிருந்ததால் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு அப்பகுதியிலுள்ள அனைத்து கண்கானிப்பு கேமிரக்களை ஆய்வு செய்தும், தொடர் விசாரணையிலும் சம்பவத்தன்று காரைக்குடி லட்சுமிநகரைச் சேர்ந்த மகேஸ்வரிக்கு டிரைவிங் பழகிக் கொடுத்த டிரைவர் சசிகுமாரை மகேஸ்வரி அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

தலைமறைவான சசிகுமாரை காவல்துறையினர் பிடித்து நடத்திய விசாணையில், 'கொடுக்கல் வாங்கல் தொழிலுக்கு மகேஸ்வரிக்கு பணம் தேவைப்பட்டதால் டிரைவர் சசிகுமார் வேறொரு நபரிடம் பெரிய அளவில் கடன் வாங்கி கொடுத்ததாகவும், அந்த பணத்தை திருப்பி கேட்டபோது கொடுக்காமல் நீண்ட நாட்கள் மகேஸ்வரி இழுத்தடித்துள்ளதாகவும் பணம் கொடுத்தவர் சசிகுமாரிடம் நெருக்கி வந்த நிலையில் ஆவுடைப்பொய்கை பகுதியில் வீட்டு மனையை பார்ப்பதற்கு சசிகுமாருடன் மகேஸ்வரி சென்றுள்ளார். அங்கு வைத்து கொடுத்த பணத்தை கேட்ட சசிகுமாருக்கும் மகேஸ்வரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சசிகுமார் மகேஸ்வரி முகத்தில் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். அவர் அணிந்திருந்த 20 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு அங்குள்ள கண்மாயில் குளித்துவிட்டு அங்கு ஒரு தோட்டத்தில் காய்ந்த துணிகளை அணிந்துகொண்டு மருத்துவமனைக்கு வந்து மகேஸ்வரி இறந்தது குறித்து விசாரித்துவிட்டு சென்றிருக்கிறார். அதன் பின்பு கால் லிஸ்ட் மூலம் ஆய்வு செய்த காவல்துறையினர் சசிகுமாரை வீட்டுக்கு சென்று கைது செய்தனர். அடகு வைத்த நகைகளையும் மீட்டுள்ளனர்' என்றனர்.
இந்த கொலை சம்பவத்தில் சசிகுமார் மட்டும் குற்றவாளி கிடையாது. இன்னும் சிலர் இருக்கலாம், அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று மகேஸ்வரியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். அது மட்டுமின்றி காவல் நிலையத்துக்கு சசிகுமாரை அழைத்து வந்தபோது மகேஸ்வரியின் உறவினர்கள் தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.














