"நாங்கள் தலைக்கனம் பிடித்தவர்கள் அல்ல" - ரசிகருடனான செல்பி விவகாரம் குறித்து பூஜ...
'ஜிஹாதி' அவதூறு முதல் போலீஸ் விசாரணை வரை; மலையாளத் திரையுலகை உலுக்கும் த்ரிஷ்யம் நடிகை விவகாரம்
மலையாளத் திரையுலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நடிகை அன்சிபா ஹாசன் மற்றும் நடிகர் டினி டாம் இடையேயான மோதல் சர்ச்சையாகியிருக்கிறது.
நடிகர் டினி டாம், நடிகை அன்சிபா ஹாசன் மீது தனிப்பட்ட விரோதம் மற்றும் மத ரீதியான காரணங்களால், அவர் தயாரிப்பு நிர்வாகி ராஜீவ் குடப்பனக்குன்னுவின் மகனைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றார் என்ற வதந்தியைப் பரப்பினார்.
மேலும், அன்சிபாவை 'ஜிஹாதி' என்றும் அவதூறு செய்தார். ஆனால், ராஜீவ் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் இந்தச் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்து, உண்மை நிலையை விளக்கினர்.
அதைத் தொடர்ந்து 'அம்மா' (AMMA) சங்கத்தின் இணைச் செயலாளராக இருந்த அன்சிபா, இதுகுறித்து சங்கத்தில் புகாரளித்தார். எனினும், குற்றம் சாட்டப்பட்ட டினி டாமுக்கு ஆதரவாக சங்க நிர்வாகிகள் செயல்பட்டதால், தனக்கு நீதி கிடைக்காது என்பதை உணர்ந்து அன்சிபா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில்தான் அம்மா சங்கத்தின் துணைத் தலைவர் லட்சுமிப்ரியா அளித்த புகாரின் பேரில், திருப்பூணித்துறா காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட அன்சிபா, அங்கிருந்த பெண் உதவி ஆய்வாளர் ரேஷ்மா தன்னை மனரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அன்சிபா கேரள முதலமைச்சரிடம் புகாரளிக்க, அது டிஜிபி-யின் (DGP) விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
திருக்காக்கரை உதவி ஆணையர் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க கொச்சி வந்த அன்சிபா, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``மலையாள மக்கள் அனைவருக்கும் இதில் உள்ள உண்மை என்னவென்று நன்றாகத் புரிந்துவிட்டது. அவர் செய்த இந்தச் செயலை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.
இதற்கான தண்டனையை அவர் அனுபவித்தே தீர வேண்டும். நான் ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து 'அம்மா' சங்கத்தில் புகார் அளித்திருந்தேன்.

தற்போதைய செயற்குழு மீது எனக்கு நம்பிக்கை இல்லாததால்தான் நான் எனது பதவியை ராஜினாமா செய்தேன். தற்போதைய அதே செயற்குழுவின் முன்னால் வந்து என்னை விளக்கம் அளிக்கச் சொல்வது என்னை கேலி செய்வதற்குச் சமம்.
எனக்கு நீதி வழங்காத ஒரு குழுவின் முன்னால் சென்று நான் என்ன பேச முடியும்? எனவே, சங்கத்தில் உள்ள வேறு ஏதேனும் நடுநிலையான உறுப்பினர்களைக் கொண்டு விசாரணைக் குழுவை அமைக்கலாம் என்று கூறியுள்ளேன். ஆனால், இதுவரை சங்கத்தில் இருந்து எனக்கு எந்தப் பதிலும் வரவில்லை.
ராஜீவ் குடப்பனக்குன்னு மற்றும் அவரது மகன் ஆகியோர் உண்மையைச் சொல்லாமல் டினி டாம் சொன்ன பொய்க்கு ஆதரவாகப் பேசியிருந்தால், இந்நேரம் நான் தேசத்துரோகக் குற்றத்திற்காக சிறையில் இருக்க வேண்டியிருந்திருக்கும்.
இவ்வளவு பெரிய குற்றச் செயல்களைச் செய்துவிட்டு, அதை நான் அமைதியாகப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம்? இவர்களின் முகமூடி கிழிய வேண்டும்" என்றார் ஆவேசமாக.

















