"நன்றி திருவனந்தபுரம்"- சிபிஎம் கோட்டையைக் கைப்பற்றிய பாஜக; வாழ்த்து தெரிவித்த ப...
தமிழ்நாடு வரும் அமித் ஷா; இறுதி முடிவை ஒத்திவைக்கும் ஓ.பன்னீர்செல்வம் - என்ன நடக்கிறது?
அமித் ஷா வருகிற 15-ம் தேதி தமிழ்நாடு வருகிறார். ஆனால், அவர் வருவதற்கான சிக்னல்கள் இப்போதே தமிழ்நாட்டில் தெரிகிறது.
தற்போது தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டிசம்பர் 15-ம் தேதியில் தான், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் கூட்டம் நடக்கும் எனவும் அதில் இறுதி முடிவை அறிவிப்பதாக முன்னர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அமித் ஷா தமிழ்நாடு வருகை அறிவிப்பு வெளியானது.
தற்போது ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்துக்கான தேதியைத் தள்ளி வைத்து உள்ளதாக அறிவித்துள்ளார்.

அடம்பிடிக்கும் கே.பழனிசாமி
அதிமுகவில் மீண்டும் இணைய ஓ.பன்னீர்செல்வம் எடுக்காத முயற்சிகளே இல்லை. பாஜக மேலிடமும் கே.பழனிசாமியிடம் பேசி பார்த்தது. ஆனால், அவர் கொஞ்சம்கூட அசைந்து கொடுப்பதாக இல்லை.
ஒருகட்டத்தில் (கடந்த ஜூலை மாதம்) பன்னீர்செல்வம் பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகிவிட்டார்.
இருந்தாலும், இந்த மாதத் தொடக்கத்தில் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை சந்தித்து வந்தார் அவர்.
கடந்த 7-ம் தேதி, கோவையில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை சந்தித்தும் பேசினார்.
இந்தநிலையில் தான் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாசிட்டிவ் சிக்னல்?
தமிழ்நாடு வரும் அமித் ஷா தனக்கு எதாவது பாசிட்டிவ் சிக்னல் காட்டினாலும் காட்டலாம் என்கிற பன்னீர்செல்வம் எண்ணத்தின் விளைவே இறுதி முடிவு தேதியின் ஒத்திவைப்பு என்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள்.
சில மாதங்களாக, ஓ.பன்னீர்செல்வமும், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் நெருக்கம் காட்டி வருகின்றனர். இடையில் செங்கோட்டையனும் இவர்களுடன் இணைந்திருந்தார். ஆனால், அவர் இப்போது தவெகவில் இணைந்துவிட்டார். டி.டி.வி.தினகரனும் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக பேசிவருகிறார்.

பாஜக நகர்வுகள்
இன்னொரு பக்கம், பாஜக ஓ.பன்னீர்செல்வத்தை விட்டுதர தயாராக இல்லை என்றே சொல்லலாம். இதற்கு டெல்லியில் ஃபிக்ஸான அமித் ஷா சந்திப்பும், கடந்த வாரம் நடந்த அண்ணாமலை சந்திப்பும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இன்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றிருக்கிறார். அமித் ஷாவை சந்திக்க உள்ளார். அவர்கள் இருவரும் கூட்டணி குறித்து பேச உள்ளதாக பாஜக தரப்பு கூறுகிறது.
'மெகா கூட்டணி' என்கிற பெயரில் தான் அதிமுக - பாஜக கூட்டணி உருவாகியது. ஆனால், அந்தக் கூட்டணியில் அந்த இரு கட்சிகளைத் தவிர வேற எந்தக் கட்சியும் இதுவரை இடம்பெறவில்லை.
தென் மாவட்டங்களில் இந்தக் கூட்டணியைக் கொண்டு சேர்க்க ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆதரவு தேவை என்று பாஜக நினைக்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்வதாக இல்லை.
அதனால், ஓ.பன்னீர்செல்வம் விஷயத்தில் பீகார் ஃபார்முலாவைக் கையிலெடுக்கலாம் பாஜக.
அதாவது, அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்க்க சொல்லாமல், தேசிய ஜனநாயக கூட்டணியில் அவரை சேர்த்துகொள்ள நினைக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம் முடிவு?
இதை பாஜக செய்யும் என்று நினைத்து தான் பன்னீர்செல்வமும் தனது முடிவை ஒத்தி வைத்திருக்கிறார்.
ஒருவேளை அப்படி எதுவும் நடக்காமல் போனால், அவர் தனிக்கட்சி தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்தப் பேச்சு அவர் டெல்லி சென்ற போதே எழுந்தது.
தனிக்கட்சி ஆரம்பித்து, விஜய்யுடன் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட திட்டமும் அவர் வசம் இருந்ததாக சொல்லப்பட்டது.
ஆனால், இவை அனைத்தும் அமித் ஷா தமிழ்நாடு வருகைக்கு பிறகே தெரியும்.!
















