குப்பை மேலாண்மை: "கடந்த காலத்திலிருந்து பாடம் படிங்க" - தவெக MLA-வுக்கு பூவுலகின...
இந்தியாவிற்கு பெரிய பிரச்னை? நிர்மலா சீதாராமன் சொல்லும் மூன்று F-களை கவனிங்க - Detail
'இப்போ... அப்போ' என்று ஈரான் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தான் தொடர்ந்து அடிப்படுகிறதே தவிர, போர் நிறுத்தத்தின் அறிகுறிகள் எதுவும் வெளிப்படையாக தெரியவில்லை.
இந்த ஈரான் போரால் உலக நாடுகள் அனைத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கு அல்ல.
அதன் வெளிப்பாடு தான் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல், சி.என்.ஜியின் தொடர் விலை ஏற்றம்.
இதன் உச்சம் இந்திய பிரதமர் மோடியிடம் இருந்து வந்த அட்வைஸ்கள் - ஓராண்டிற்குத் தங்கம் வாங்காதீர்கள்... வொர்க் ஃப்ரம் ஹோம் பாருங்கள்... பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் கிளாஸ் நடத்தலாம்... எரிவாயுவை மக்கள் தேவையில்லாமல் பயன்படுத்த வேண்டாம்... இப்படி நிறைய.
ஆனால், இந்த அளவிற்கு இந்தியாவில் பிரச்னை இருக்கிறதா என்று கேட்டால், 'ஆம்' என்பது தான் கசப்பான உண்மை.
நேற்று முன்தினம், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, தற்போது இந்தியாவிற்கு மூன்று F-கள் முக்கியமானது - எரிசக்தி (Fuel), உரம் (Fertilizer), அந்நிய செலாவணி (Forex).
எரிசக்தி:
இந்தப் போருக்கு முன்பு, இந்தியாவின் 45 சதவிகித எண்ணெய் இறக்குமதிகள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் வந்துகொண்டிருந்தன. ஆனால், இப்போது அந்த வழி மூடப்பட்டிருக்கிறது.
இதனால், இந்தியாவிற்கு வரும் எண்ணெய் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய அரசின் தரவுகளின் படி, தற்போது இந்தியா 40 நாடுகளிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. அதில் ரஷ்யா, ஈராக், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய நாடுகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மத்திய கிழக்கு நாடுகள் ஈரான் தங்களது எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதால், எண்ணெய் உற்பத்தியை குறைத்துள்ளன... பகுதியாக எண்ணெய் இறக்குமதியையும் நிறுத்தியுள்ளன.
இதனால், இந்தியாவிற்கு வரும் எண்ணெய் வரத்து குறைந்துள்ளன. இந்தியா 40 நாடுகளிடம் இருந்து எண்ணெய் வாங்கி வந்தாலும், அனைத்து உலக நாடுகளுக்குமே அந்த நாடுகள் எண்ணெயை ஏற்றுமதி செய்யும். அதிலும் சிக்கல் உள்ளது.
மேலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதையும் இந்தியா சமாளிக்க வேண்டும்.
உரம்:
சீனாவிற்கு அடுத்து அதிக உரங்களைப் பயன்படுத்தும் நாடு, இந்தியா. இந்தியா இறக்குமதி செய்யும் உரங்கள் மற்றும் உரங்களுக்கான மூலப்பொருள்களும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தான் வருகின்றன. அதுவும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் வந்தன.
அதற்கும் இப்போது ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் செக் ஏற்பட்டுள்ளது.
உரங்கள் வரத்து குறைந்தால், இங்கு உற்பத்திகளும் குறையும். உணவு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

அந்நிய செலாவணி:
இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதை சரிகட்ட அவ்வப்போது இந்திய ரிசர்வ் வங்கி சந்தையில் அமெரிக்க டாலர்களை விற்று வருகிறது.
இன்னொரு பக்கம், எண்ணெய் வாங்க இந்தியாவிற்கு அந்நிய செலாவணி நிச்சயம் தேவை. இந்தப் போருக்கு முன்பு 60 - 70 டாலருக்கு விற்பனையாகி கொண்டிருந்த எண்ணெய், தற்போது 90 டாலருக்கு மேல் விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது.
இதனாலும், இந்தியா செலவு செய்யும் அந்நிய செலாவணி அதிகம்.
ஒருவேளை, ஈரான் போர் விரைவில் முடியவில்லை என்றால், அந்நிய செலாவணி அதிகம் தேவைப்படும். அதனால், அதை பக்காவாக கணக்குப் போட்டு செலவு செய்வது புத்திசாலித்தனம்.
அதனால் தான், மோடி தங்கம் ஓராண்டிற்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று கூறினார். ஏனெனில், தங்கமும் வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.
முக்கியமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தொடர்ந்து இந்தியாவில் இருந்து வெளியேற்றி வருகின்றனர். இவர்கள் முதலீடுகளை வெளியேற்றி செல்லும் போது, அவர்கள் டாலர்களாக தான் கொண்டு செல்வார்கள்.
அதனாலும், அந்நிய செலாவணி இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது.
ஆக, இந்த மூன்றும் இப்போது இந்தியாவிற்கு மிக மிக முக்கியம். இதை இந்தியா எப்படி கையாண்டு சமாளிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
















