செய்திகள் :

`இந்திய வீடுகளில் உறங்கும் 35,000 டன் தங்கம்' - மோடி சொல்லும் `மறுசுழற்சி'; மாறுகிறதா மக்கள் மனநிலை?

post image

இந்திய வீடுகளின் லாக்கர்களிலும், பீரோக்களிலும், கோயில் கருவறைகளிலும் சுமார் 35,000 டன் தங்கம் உறங்கிக் கொண்டிருக்கிறது. இதன் மதிப்பு கற்பனைக்கு எட்டாதது; சுமார் 3.8 டிரில்லியன் டாலர்கள்! இது நாட்டின் பொருளாதாரத்தையே புரட்டிப் போடக்கூடிய மாபெரும் சக்தி. ஆனால், இந்த சக்தி பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடப்பதுதான் இந்தியாவின் மிகப்பெரிய முரண்பாடுகளில் ஒன்று.

திருமணங்கள், பண்டிகைகள், சேமிப்பு, முதலீடு என இந்தியர்களின் வாழ்க்கையோடும், கலாச்சாரத்தோடும் பின்னிப் பிணைந்தது தங்கம். ஒவ்வோர் ஆண்டும் தங்கம் வாங்குவதில் இந்தியர்கள் ஆர்வம் காட்டினாலும், ஏற்கெனவே வாங்கிச் சேர்த்த தங்கம் மலையெனக் குவிந்து கிடக்கிறது. இந்த உறங்கும் செல்வத்தை தட்டி எழுப்பி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியுமா? இதுதான் பிரதமர் நரேந்திர மோடி எழுப்பியுள்ள சமீபத்திய கேள்வி.

"புதிதாக இறக்குமதி செய்வதை விடுத்து, நம்மிடம் உள்ள தங்கத்தையே மறுசுழற்சி செய்யுங்கள்" என்ற அவரது வேண்டுகோள், ஒரு புதிய விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது.

 பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அரசின் அவசரம் ஏன்?

இந்தத் திட்டத்தின் பின்னணியில் இருப்பது நாட்டின் இறக்குமதி தொடர்பான கவலைகள்தான். இந்தியாவின் தங்கத் தேவையைப் பூர்த்தி செய்ய, சமீபத்திய நிதியாண்டில் சுமார் 72.4 பில்லியன் டாலர்களை அந்நியச் செலாவணியாக இந்தியா செலவிட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு கிராம் தங்கமும், நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பைக் கரைக்கிறது; வர்த்தகப் பற்றாக்குறையை அதிகரிக்கிறது. இது பொருளாதாரத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

"ஒழுங்கமைக்கப்பட்ட தங்க மறுசுழற்சி, இறக்குமதியை குறைக்கும். இது அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைத்து, நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தி, தற்சார்பு இந்தியாவை நோக்கிய அரசின் பயணத்திற்கு வலு சேர்க்கும்," என்கிறார் ஸ்வஸ்திகா இன்வெஸ்ட்மார்ட்டின் ஆராய்ச்சித் தலைவர் சந்தோஷ் மீனா. மறுசுழற்சி செய்யப்படும் ஒவ்வொரு கிராம் தங்கமும், இறக்குமதி செய்யப்பட வேண்டிய ஒரு கிராம் தங்கத்தைக் குறைக்கிறது என்பதுதான் இதன் எளிமையான சூத்திரம்.

ஒரு சதவீத மாற்றம், மாபெரும் ரிசல்ட்!

இந்தத் திட்டத்தின் மிக ஆச்சரியமான அம்சம், மிகச் சிறிய மாற்றம் கூட எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான். முத்தூட் எக்ஸிம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கேயுர் ஷா-வின் கணக்குப்படி, இந்திய வீடுகளிலும் கோயில்களிலும் உள்ள தங்கத்தில் வெறும் 1 சதவீதத்தை ஆண்டுதோறும் மறுசுழற்சிக்குக் கொண்டு வந்தாலே போதும், நாட்டின் தங்க இறக்குமதியை சுமார் 25 முதல் 30 சதவீதம் வரை குறைத்துவிட முடியும்.

இந்தக் கருத்தை சந்தோஷ் மீனாவும் எதிரொலிக்கிறார். "வீடுகளில் உள்ள தங்கத்தில் 1 சதவீதத்தை மறுசுழற்சி செய்தால், இறக்குமதியை 25-33% வரை குறைக்கலாம். அரசின் கொள்கை ஆதரவு இதை மேலும் ஊக்கப்படுத்தினால், காலப்போக்கில் இறக்குமதித் தேவையை 20-30% அல்லது அதற்கும் மேலாகக் குறைக்க முடியும்," என்கிறார் அவர். இது நகை சந்தையில் மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார ஸ்திரத்தன்மையிலும் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

தங்கம்

தங்கம் ஏன் முடங்கிக் கிடக்கிறது?

இதற்குப் பின்னால் ஆழமான கலாச்சார மற்றும் நிதி சார்ந்த காரணங்கள் உள்ளன. தலைமுறை தலைமுறையாக, தங்கம் ஒரு பாதுகாப்பான சொத்தாகவும், பணவீக்கத்திற்கு எதிரான கவசமாகவும், அவசர காலங்களில் கைகொடுக்கும் ஆபத்பாந்தவனாகவும் பார்க்கப்படுகிறது. திருமணங்கள், பரிசுகள், பரம்பரைச் சொத்து என தங்கம் வீடுகளில் சேர்கிறது. இதன் காரணமாக, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத, மாடல் பழையதாகிப் போன, சேதமடைந்த நகைகள் கூட பாதுகாக்கப்படுகின்றன. அவற்றின் மதிப்பு அப்படியே இருப்பதால், மக்கள் அதை விற்கத் தயங்குகிறார்கள்.

இங்குதான் மறுசுழற்சி ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. பழைய நகைகளைக் கொடுத்து, பணமாகவோ, புதிய டிசைன்களிலோ அல்லது சுத்தமான தங்கக் கட்டிகளாகவோ மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை இது வழங்குகிறது. இதன் மூலம், தங்கம் அதன் மதிப்பையும் இழக்காமல், மீண்டும் பொருளாதார சுழற்சிக்குள் வருகிறது.

மாறுகிறதா மக்களின் மனநிலை?

நிச்சயமாக மாற்றம் தெரிகிறது என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள். தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருப்பது, பயன்படுத்தப்படாத நகைகளை விற்கவோ அல்லது மாற்றவோ மக்களைத் தூண்டியுள்ளது. பல முன்னணி நகைக்கடைகள், சேதாரம் இல்லாத அல்லது குறைந்த சேதாரத்தில் பழைய நகைகளை மாற்றிக்கொள்ளும் திட்டங்களை அறிவிப்பதும் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது.

"தங்கத்தின் விலை உயர்வு, லாக்கர்களில் உறங்கிக் கொண்டிருக்கும் நகைகளின் மதிப்பை அதிகரித்துள்ளது. இது, அவற்றை ஏன் முடக்கி வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வியை பல குடும்பங்களில் எழுப்பியுள்ளது," என்கிறார் சந்தோஷ் மீனா. தொழில்நுட்பத்தின் உதவியுடன், மறுசுழற்சி என்பது இப்போது மிகவும் வெளிப்படையானதாகவும், நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் மாறியுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், இந்தியாவின் வீடுகளில் உறங்கிக் கொண்டிருக்கும் இந்த தங்கத் தலைவிதி, பிரதமர் மோடியின் அழைப்பால் விழித்தெழுமா, அல்லது இதுவும் ஒரு கனவாகவே கரைந்துவிடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கலாச்சாரப் பிணைப்பையும், பொருளாதாரத் தேவையையும் சமன்செய்யும் இந்தப் பெரும் முயற்சியின் வெற்றி, மக்களின் கைகளில்தான் உள்ளது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

(News Source: NDTV )

விஜய்யின் பத்திரிகையாளர் தவிர்ப்பு யுக்தி எப்படி உருவாக்கப்பட்டது? - களத்திலிருந்து ஓர் அலசல்!

முதல்வர் விஜய் அரசுமுறை பயணமாக கடந்த வாரம் டெல்லிக்கு சென்று வந்திருக்கிறார். பிரதமர் மோடியையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்திருக்கிறார். இந்தப் பயணத்தில் முதல்வர் பத்திரிகையாளர்களை சந்... மேலும் பார்க்க

இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்; ஏற்கெனவே ரூ.7 உயர்வு; இன்னும் எவ்வளவு உயரலாம்?

ஈரான் போர் காரணமாக, இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.ஈரான் போர் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றாமல் மத்திய ... மேலும் பார்க்க

"'ஆபரேஷன் சிந்தூர் 2.0' -க்கு இந்திய ராணுவம் தயாராகி வருகிறது!" - ராணுவத் தளபதி ஜெனரல் திவேதி

தேவை ஏற்பட்டால் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0’ நடவடிக்கையைத் தொடங்குவதற்கு இந்திய ஆயுதப் படைகள் முழுத் தயார் நிலையில் இருப்பதாக ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். மேலும், இந்தியப் ராணுவம்,... மேலும் பார்க்க

இனி ரூபாய் நோட்டு பேப்பரில் வராது; 'பிளாஸ்டிக்கில்' வரப்போகிறது? - RBI-க்கு ஏன் இந்த யோசனை?

இதுவரை இந்திய ரூபாய் நோட்டுகளைத் தாள்களில் தானே பார்த்திருக்கிறோம். இனி பிளாஸ்டிக்கில் பார்த்தாலும் பார்ப்போம். இந்திய ரிசர்வ் வங்கி இதற்கான யோசனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது புழக்கத்... மேலும் பார்க்க

22 வயதில் ஐபிஎஸ்; `தமிழ்நாட்டின் புதிய டிஜிபி' - மகேஷ்குமார் அகர்வால் நியமனம்!

தமிழகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவாக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவி இருந்து வருகிறது. இந்தப் பதவிக்கு தகுதியான சீனியர் டி.ஜி.பி-க்களில் மூன்று அல்லது 5 பேரை மத்திய அரசின் யு.பி.எஸ... மேலும் பார்க்க

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை தொடக்க விழா தொடர்ந்து தள்ளிப் போவது ஏன்?

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க, 108 இடங்களில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட்கள், ஐ.யு.எம்.எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு விஜய் புதிய ஆட்சியை அமைத்தார். முதல்வரா... மேலும் பார்க்க