புதுச்சேரி: தந்தையை பராமரிக்காத மூன்று மகன்களுக்கு சிறைத் தண்டனை! - அதிரடி காட்ட...
ஈரோடு: மதுபோதையில் போலீஸ் ஜீப்பை ஓட்டிய ஹெட் கான்ஸ்டபிள் - அதிரடி காட்டிய அதிகாரிகள்!
ஈரோட்டில் இருந்து தாளவாடி நோக்கிச் சென்று கொண்டிருந்த போலீஸ் வாகனம் ஒன்று சாலையின் இடது, வலது என தாறுமாறாக ஓடுவதை சக பயணிகள் பார்த்துள்ளனர். மற்றவர்கள் வாகனங்களை இயக்க முடியாத அளவிற்கு இயக்கப்பட்ட அந்த போலீஸ் வாகனத்தை வீடியோ பதிவு செய்த சிலர், சோஷியல் மீடியாக்களில் பதிவு செய்துள்ளனர். காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் தலைக்கேறிய மதுபோதையில் தாறுமாறாக போலீஸ் வாகனத்தை இயக்கிச் செல்லும் அந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், விசாரணை நடைபெற்று வந்தது. சம்பந்தப்பட்ட காவலரை பணியிடை நீக்கம் செய்வதாக மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்த காவல்துறையினர், "ஈரோட்டில் நேற்று முன்தினம் போலீஸ் வாகனம் ஒன்று தாறுமாறாக ஓடுவது போன்று சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரன் ஸ்ருதி உத்தரவின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். தாளவாடி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஹெட் கான்ஸ்டபிள் (நிலைய தலைமை காவலர்) சரவண பிரகாஷ் மதுபோதையில் போலீஸ் ஜீப்பை ஓட்டியது உறுதி செய்யப்பட்டது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தலைமை நிலைய காவலர் சரவண பிரகாஷ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றனர்.


















