BB Tamil 9: "பர்சனல் விஷயத்தையும் நீங்க பேசாதீங்க"- மோதிக்கொள்ளும் FJ, அமித் பார...
``எந்த நேரத்திலும் மது அருந்தலாம் என்ற நிலை உள்ளதால் பாலியல் வன்கொடுமை தொடர்கின்றன'' - கிருஷ்ணசாமி
பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்
மதுரைக்கு வந்திருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசும்போது, “புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு ஜனவரி 7ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது.
கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். அண்மைக்காலமாக இளைஞர்கள் போதைப்பழக்கங்களுக்கு அடிமையாகி வருவதே இதற்கு முக்கியக் காரணம்.

எந்த நேரத்திலும் மது அருந்தலாம் என்ற நிலை தமிழகத்தில் உள்ளதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. வெளியில் தெரிந்தும் தெரியாமலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மதுவால் தமிழ்ச் சமூகம் அழிந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை சில நாட்கள் பேசினோம், பிறகு மறந்துவிட்டோம். சமூக நீதி மண் என்றும், பெண்களுக்கு விடுதலை என்றும் பேசும் நிலையில், அவர்களுக்குத்தான் அதிகமான கொடுமைகள் நடந்து வருகின்றன. சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.
SIR பூர்த்தி செய்யும் படிவம்
ஒரே ஒரு மாதத்தில் SIR பணிகளை நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். அதிகாரிகள் சாதி, மதம் என்பவற்றிற்கு அப்பாற்பட்டு அனைத்து வீடுகளுக்கும் செல்ல வேண்டும். அதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். அரசியல் கட்சிகளிடம் SIR படிவங்கள் சென்று விடாமல் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
SIR பூர்த்தி செய்யும் படிவம் மிகவும் எளிமையாகவே உள்ளது; வாக்காளர்கள் விடுபடும் நிலை இல்லை. அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முறையாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். SIR விவகாரத்தில் எந்த ஒரு தவறும் நடக்காதவாறு தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும்.

சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும். திமுக ஆட்சி அமைந்தவுடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்தனர். நகராட்சி நிர்வாகத்துறையில் லஞ்சம் கொடுத்து பணியை பெற்றவர்களுக்கு பணி வழங்கக்கூடாது.
இளைஞர்களின் வாழ்க்கையில் மண்ணை போட்டு விட்டால், திறமையானவர்கள் எங்கு செல்வார்கள்? திமுக அரசு நாடகங்கள் நடத்தி பயன் இல்லை -உண்மையை சொல்ல வேண்டும்.
புதிய தமிழகம் கட்சி
ஒரு கட்சியின் வளர்ச்சியை சட்டமன்ற உறுப்பினரை வைத்து மட்டும் தீர்மானிக்கக் கூடாது. தமிழக அரசியல் களத்தை 1995க்கு முன் மற்றும் பின் என்றுதான் பார்க்க வேண்டும்.
புதிய தமிழகம் கட்சி தொடங்கிய பிறகு ஒருவரும் மதம் மாறவில்லை. இப்படித்தான் வாழ வேண்டும் என்றிருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் மனநிலையை தவிடுபொடியாக்கி, போராட்டக் களம் காண வைத்துள்ளோம்.
1995க்கு முன்னர் தென்மாவட்டங்களில் வாக்குப்பதிவு குறைவாகத்தான் இருந்தது. நாங்கள் கட்சி தொடங்கிய பிறகுதான் சதவீதம் அதிகரித்தது.

உரிமைக்காக போராட முடியும் எனும் சூழலை மாற்றியுள்ளோம். SIR கணக்கெடுப்பின் போது வாக்கு விடுபடும் என திமுகவினர்தான் பேசி வருகிறார்கள். SIR பணிகளில் ஏதேனும் தவறு நடந்தால், அதை தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம். தமிழக வாக்காளர்கள் விடுபடாமல் பார்த்துக்கொள்வதில் திமுகவிற்கும் பங்கு உண்டு.
ஜனவரி 7ஆம் தேதிக்குப் பிறகுதான் எங்களது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்போம். சட்டமன்றத்தில் மட்டும் அல்லாமல், ஆட்சியிலும் பங்கு பெறும் அளவில்தான் எங்கள் கூட்டணி அமையும். அமைச்சரவையில் பங்கு பெற்றால்தான் மக்களின் குறைபாடுகளை நீக்க முடியும்,” என்றார்.

















