மூதாட்டிகள் கொலை வழக்கு; குவாரியிலிருந்து தப்பிய கொலையாளி; சுட்டுப்பிடித்த போலீஸ...
`ஷமியின் கரியரை முடிக்கும் BCCI தேர்வுக் குழு’ - வெளிப்படையாக பேசிய பெர்சனல் கோச்!
2023-ல் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா இறுதிப்போட்டி வரை சென்றதென்றால் அதற்கு முக்கிய காரணமானவர்களில் ஒருவர் முகமது ஷமி.
வெறும் ஏழே போட்டிகளில் 10.7 ஆவரேஜில் மூன்று முறை 5 விக்கெட்டுகளும், ஒருமுறை 4 விக்கெட்டுகளும் என மொத்தமாக 24 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
அந்த உலகக் கோப்பைக்குப் பின்னர் முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஷமி ஓராண்டுக்கு கிரிக்கெட் விளையாட முடியவில்லை.
பின்னர் அவர் முழுமையாகக் குணமாகித் திரும்பிய வேளையில்தான் பார்டர் கவாஸ்கர் தொடருக்கு இந்தியா தயாராகிக் கொண்டிருந்தது.

பல முன்னாள் வீரர்கள் நிச்சயம் பார்டர் கவாஸ்கர் தொடருக்கு ஷமி தேர்வு செய்யப்பட வேண்டும் என வெளிப்படையாகக் கூறிவந்தபோதிலும், தேர்வுக் குழுவின் பார்வை அவர்மீது படவேயில்லை.
பார்டர் கவாஸ்கர் தொடரையும் இந்தியா இழந்தது. அந்தத் தொடரின் கடைசிப் போட்டியில் காயமடைந்த பும்ராவால் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க முடியவில்லை.
அதனால், ஷமியை சாம்பியன்ஸ் டிராபிக்குள் கொண்டு வந்தார்கள். அங்கும் 5 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அவ்வளவுதான் அங்கிருந்து புறக்கணிக்கப்பட ஆரம்பித்தார் ஷமி.
இங்கிலாந்து டெஸ்ட் தொடர், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியா ஒருநாள் மற்றும் டி20 தொடர், நவம்பர் 14-ல் தொடங்கும் தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடர் என எல்லா தொடர்களிலும் ஷமியை தேர்வுக்குழு கண்டுகொள்ளவேயில்லை.
இதில் சுவாரஸ்யமே, ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தற்போது இழந்த ஒருநாள் தொடருக்கான அணி வெளியானபோது ஷமியின் பெயர் அதில் இல்லாதது குறித்து தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கார், ``இப்போதுதான் ரஞ்சி சீசன் தொடங்கியிருக்கிறது அதில் சில போட்டிகள் ஆடட்டும் பிறகு பார்க்கலாம்" என்றார்.
இப்படிக் கூறும் அஜித் அகர்கார், காயத்திலிருந்து பும்ரா மீண்டு வந்தபோது ரஞ்சி ஆடிவிட்டு வரட்டும் என்று கூறினாரா? என்ற கேள்வியை எழுவதையும் கவனிக்க வேண்டும்.

ஒரு கட்டத்தில் ஷமியே இந்த விவகாரத்தில் வெளிப்டையாக, ``நான்கு நாள் ரஞ்சி போட்டியில் என்னால் பந்துவீச முடியும் என்றால் ஒருநாள் போட்டியில் முடியாதா? தேர்வுக் குழுவுக்கு அப்டேட் செய்ய வேண்டியது என் வேலை இல்லை" எனக் கூறினார்.
வெறும் பேச்சில் மட்டுமல்லாது, நடப்பு ரஞ்சி சீசனில் தான் ஆடிய 3 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி தனது பந்துவீச்சாலும் பதில் சொல்லியிருக்கிறார்.
அப்படியிருந்தும்தான், 2 நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் தொடர் அணியில் புறக்கணிக்கப்பட்டார்.
பும்ராவால் தொடர்ச்சியாக 3 டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியவில்லை என்றாலும், அவருக்காக ஸ்பெஷல் கேர் செய்து அணியில் தக்கவைக்கும் தேர்வுக்குழு, ஷமியும் பும்ராவுக்கு சற்றும் குறைவில்லாத வகையில் அணிக்குப் பங்காற்றியிருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ளாதது ஏன்?.
டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி அதிவேகமாக 50, 100, 150, 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளராக பும்ரா இருக்கிறாரோ, அதேபோல ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 100, 150, 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளராக ஷமி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், 2015, 2019, 2023 ஆகிய 3 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர்களில் வெறும் 18 போட்டிகளில் 55 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்.

இதன் மூலம், ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் பட்டியலில் 5-வது இடத்திலும், அதில் இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்திலும் இருக்கிறார்.
பும்ரா கூட ஒருநாள் உலகக் கோப்பையில் ஷமியை விட கூடுதலாக 2 போட்டிகளில் (20 போட்டிகள்) ஆடியும் 38 விக்கெட்டுகள்தான் எடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் ஷமியின் பெர்சனல் பயிற்சியாளர் முகமது பத்ருதீன், ஷமி விவகாரத்தில் தேர்வுக்குழு என்ன மனநிலையில் இருக்கிறது, எப்படிச் செயல்படுகிறது என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
தனியார் ஊடகத்துடனான பேட்டியில் முகமது பத்ருதீன், ``தேர்வுக் குழுவினர் ஷமியைப் புறக்கணிக்கிறார்கள். அது தெளிவாகத் தெரிகிறது. 3 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தும் அவர் தகுதியற்றவராக எனக்குத் தெரியவில்லை.
தேர்வுக்குழு அவரைக் கண்டும் காணாமல் இருக்கிறது. அது ஏன் என்று அவர்கள்தான் சொல்ல முடியும். இப்போதைக்கு தேர்வுசெய்யப்போவதில்லை என அவர்கள் முடிவே செய்துவிட்டார்கள்.
டெஸ்ட் போட்டிக்கு ஒருவரைத் தேர்வு செய்கிறீர்கள் என்றால் ரஞ்சி போட்டி அடிப்படையில் அவரைத் தேர்வு செய்ய வேண்டும். டி20 போட்டிகளை வைத்து தேர்வு செய்வது தவறு.

இங்கே, முடிவுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிகிறது. செயல்திறன் அல்லது உடற்தகுதி என்ற பேச்செல்லாம் ஒரு சாக்குப்போக்கு மட்டும்தான்.
யாரை விளையாட வைக்க வேண்டும், யாரை விளையாட வைக்கக் கூடாது என்ற திட்டம் அவர்களிடம் இருக்கிறது. இதுபற்றியெல்லாம் ஷமியிடம் பேச மாட்டேன். எனக்கும் அது பிடிக்காது.
நீங்கள் ஆடிக்கொண்டே இருக்கிறீர்கள் ஆனால் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அது வெறுப்பாக இருக்கும்.
அதனால்தான் ஷமியிடம், `நீங்கள் ஆடிக்கொண்டே இருங்கள், உங்களின் ஆட்டம் உங்களுக்காகப் பேசும். கவலைப்பட வேண்டாம் நீங்கள் ஃபிட்னெஸ்ஸுடன் இருக்கிறீர்கள். உங்களின் ஆட்டம் உங்களுக்காகப் பேசுகிறது' என்று கூறுவேன்.
ஷமி நிச்சயம் கம்பேக் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவரின் கம்பேக் எல்லோரையும் வாயடைக்க வைக்கும். ஒருநாள் இல்லை ஒருநாள் அவரை ஆடவைக்கும் நிலை வரும்.

அவர் ஃபார்மில் இருக்கும்போதே தேர்ந்தெடுக்கவில்லையெனில், தயவு செய்து செயல்திறன் அடிப்படையில்தான் வீரர்களைத் தேர்வு செய்கிறோம் என்று கூறாதீர்கள் (தேர்வுக் குழு). ஏனெனில் அது உண்மையல்ல.
உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு இவ்வளவு செய்த வீரரை நீங்கள் இப்படிப் புறக்கணிக்கக் கூடாது.
25 - 28 வயதில் எப்படி பயிற்சியில் ஈடுபட்டாரோ இன்றும் அதேபோல் பயிற்சியில் ஈடுபடுகிறார்.
உண்மையில், அவரின் வயதுக்கு ஏற்ப அவரது பணிச்சுமை அதிகரித்துள்ளது. தினமும் ஆறு முதல் ஏழு மணி நேரம் மைதானத்தில் செலவிடுகிறார்.
அப்படிப்பட்ட ஒரு வீரரின் உடற்தகுதியை இவ்வாறு சோதிக்க வேண்டிய அவசியமில்லை.

அவர் 2027 உலகக் கோப்பை பற்றிப் பேசவில்லை, தனக்கான வாய்ப்பை பற்றித்தான் பேசுகிறார்.
அவரது கவனம் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிறப்பாகச் செயல்படுவதில் மட்டுமே உள்ளது.
வரவிருக்கும் எந்தவொரு தொடரிலும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டால், அவர்களால் அவரை என்றென்றும் புறக்கணிக்க முடியாது. இறுதியில், அவர்கள் அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்" என்று கூறினார்.




















