வைத்தி என்ட்ரியால் ஒரத்தநாடு அவுட்; தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர்? - ...
கரூர் துயரம் நிகழ்ந்த அதே வேலுச்சாமிபுரத்தில் பொதுக்கூட்டம்! - விஜய்யை சீண்டும் நாதக?
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த த.வெ.க தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானார்கள். அதே வேலுச்சாமிபுரத்தில் 9.02.2025 நா.த.க பொதுக்கூட்டம் நடத்த கரூர் காவல்துறை அனுமதியளித்திருக்கிறது.

2025 செப்டம்பர் 27-ம் தேதி, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு மற்றும் பிரசாரக் கூட்டத்தை நடத்தினார் விஜய். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை முதல் 65 வயது பெண்மணி என 41 பேர் பலியாகினர்.
கரூர் துயர சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணையும் நடந்துவருகிறது. விசாரணைக்காக இரண்டுமுறை டெல்லி சி.பி.ஐ விசாரணைக்கு சென்றுவந்திருக்கிறார் விஜய். இச்சூழலில் துயர சம்பவம் நிகந்த வேலுச்சாமிபுரத்தில் 'ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி' என்ற பொதுக்கூட்டத்தை ஒருங்கிணைத்திருக்கிறது நா.த.க.

நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், "வேலுச்சாமிபுரத்தில் நா.த.க பொதுக்கூட்டம் நடத்துவதும் அதில் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் பங்கேற்பதும் இயல்பாக அமைந்ததாக தெரியவில்லை. கரூர் துயர சம்பவம் நிகழ்ந்தபோது விஜய்யை வெளுத்து வாங்கியது நா.த.க முகாம்.
துயர் சம்பவத்துக்கு பொறுப்பேற்காமல் விஜய் சென்னை ஓடி பனையூரில் ஒளிந்துகொண்டதை தொடர் பிரசாரமாக முன்னெடுத்தனர். இன்றுவரையிலும் த.வெ.க-வின் அரசியலை கடுமையான விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் தேர்தல் நெருங்குவதால் கரூர் மாவட்ட பிரசாரப் பொதுக்கூட்டத்தை வேலுச்சாமிபுரத்தில் நடத்துகிறார்கள் நா.த.க-வினர்.

கரூர் விவகாரத்தில் த.வெ.க-வின் மோசமான செயல்பாட்டையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னை அழைத்து விஜய் ஆறுதல் சொன்ன சம்பவங்கள் மீது கடும் விமர்சனங்களை எழுந்தன. அவற்றையெல்லாம் த.வெ.க- கடந்துவந்துள்ள நிலையில், கரூர் சம்பவத்தில் விஜய் கோட்டைவிட்ட விவகாரங்களை நினைவுகூறி அதை பேசுபொருளாக மாற்ற முயற்சிப்பதாகவும், கரூர் துயர சம்பவத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தி கவனம்ஈர்க்கும் ப்ளானுடன் நா.த.க-வினர் கரூர் செல்கின்றனர்.
துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக், தமிழம் செந்தில்நாதன், சசிகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் அந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த பொதுக்கூட்டத்துக்கு காவல்துறையின் அனுமதியும் கிடைத்திருக்கிறது" என்றனர்.


















