செய்திகள் :

கும்பகோணம் ஜுரஹரவிநாயகர்: மிளகுரசம் பருப்பு துவையல் நிவேதனம்; யம பயம் நீக்கும் பிரளயகால ருத்ரர்!

post image

ராகு ஸ்தலம் நாகேஸ்வரன் கோயில்

நோய்கள் பரவும் பருவநிலை காலம் இது. ஒவ்வோர் ஆண்டும் புதிய புதிய நோய்கள் வந்து மக்களை வாட்டுகின்றன. அதற்கான மருத்துவம் வளர்ந்துவந்து உதவினாலும் மனதளவிலும் உடலளவிலும் நமக்குத் தெம்பும் நம்பிக்கையும் நிலைத்திருக்க இறைவழிபாடு நிச்சயம் தேவை.

அப்படி ஓர் ஆலயம் ஒன்றை தரிசனம் செய்வோம். எப்படிப்பட்ட ஜுரமாக இருந்தாலும் இந்த ஆலய விநாயகரை வேண்டிக்கொண்டால் நிச்சயம் ஜுரம் குறையும் என்கிறார்கள். வாருங்கள், அந்த அற்புதக் கோயில் குறித்துப் பார்ப்போம்.

கும்பகோணத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராகு ஸ்தலம் நாகேஸ்வரன் கோயில். இந்த ஆலயத்தின் ஈசன் நாக தோஷங்களை நீக்கி அருள்பவர். இங்கு நடைபெறும் ராகு கால வழிபாடுகள் விசேஷமானவை. அந்த ஆலயத்தில் அருள்பாலிப்பவர்தான் ஜுரஹர விநாயகர்.

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் - ஜுரஹரவிநாயகர்
கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் - ஜுரஹரவிநாயகர்

ஜுரஹர விநாயகர்

சுமார் 1,500 வருடங்கள் பழைமையானது இந்தக் கோயில். சூரியபகவான் வழிபட்ட தலம். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாள்களிலும் ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே பிரவேசித்து சுவாமியைத் தன் ஒளிக்கரங்களால் தழுவி சூரியபகவான் வழிபடும் காட்சி அற்புதமானது.

சூரியன் பூஜை செய்த தலம் என்பதால், கோயிலின் உள்பிராகாரத்தில், வடபுறத்தில் சூரியனுக்கு இங்கே தனிச் சந்நிதி உள்ளது. அச்சந்நிதியைச் சுற்றியுள்ள கோஷ்டத்தில் இருப்பவர்தான் ஜுரஹர விநாயகர்.

சூரியன் என்றாலே வெப்பம். அப்படிப்பட்ட உஷ்ணாதிபதியின் கோஷ்டத்தில் இருப்பதால், அந்த உஷ்ணத்தைத் தணிக்கும் சக்தி பெற்றவராக இருக்கிறார் இந்த விநாயகர். வெப்ப சம்பந்தமான காய்ச்சல், கண் நோய்கள் மற்றும் அனைத்து உஷ்ண நோய்களையும் நீக்கி அருளுகிறார்.

கடுமையான காய்ச்சல் கண்டவர்கள் தங்கள் மனதிலேயே இந்த ஜுரஹர விநாயகரை நினைத்து வேண்டிக்கொள்ளலாம். முடிந்தவர்கள் அல்லது காய்ச்சல் கண்டவர்களின் உறவினர்கள் இங்கே வந்து ஜுரஹர விநாயகருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்ள வேண்டும்.

அப்படி விசேஷ பிரார்த்தனையின் பேரில் அபிஷேகம் செய்தால் அப்போது மிளகு ரசம் சாதமும், பருப்புத் துவையலும் நைவேத்தியம் செய்யப்படும். இந்தப் பிரார்த்தனையை ஞாயிற்றுக்கிழமையில் செய்வது சிறப்பு.

அந்நாளில் வர இயலாதவர்கள், வேறு ஏதேனும் ஒரு நாள் வந்து அர்ச்சனை செய்து, காய்ச்சல் நீங்க வேண்டிக்கொண்டு, வணங்கிச் சென்றாலும் நல்லது.

அப்படி வந்து வழிபட்டு வேண்டிக்கொண்டவர்களின் காய்ச்சலை இந்த விநாயகப்பெருமான் உடனே நீக்கிவிடுவார் என்கிறார்கள். இதற்கு சாட்சி இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையே.

கும்பகோணம் நாகேஸ்வர கோயில் உற்சவர்
கும்பகோணம் நாகேஸ்வர கோயில் உற்சவர்

பிரளயகால ருத்ரர்

இங்கே பிரளயகால ருத்ரர் சந்நிதி ஒன்றும் அமைந்துள்ளது. இவர் சிவனுடைய அம்சம். சிவனின் 64 மூர்த்தங்களில் ஒன்று. யமனுடைய அதிதேவதை.

எனவே, யம பயங்கள், யம உபாதைகள் தீர்வதற்கு இச் சந்நிதியில் பூஜை செய்யலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் யம கண்டத்தில் பூஜை செய்ய வேண்டும்.

இந்தச் சந்நிதியின் இன்னொரு சிறப்பாக, யமகிங்கரர்களின் உருவங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அம்மி, குழவி, உலக்கை, உரல் போன்று ஒவ்வொரு பொருளைத் தலையில் வைத்துக்கொண்டு நிற்பதுபோல அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

இதற்கு அருகிலேயே இருக்கும் இந்திராக்ஷி என்ற அம்பாள், கடன் பிரச்னை மற்றும் தீராத வியாதிகளைத் தீர்த்து வைப்பவள்.

மேலும் இந்தத் தல மூலவரான பிரஹன்நாயகி சமேத நாகேஸ்வரருக்கு நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. சிவராத்திரியில் ஆதிசேஷனே வந்து வழிபாடு செய்வதாக ஐதீகம்.

சர்ப்பதோஷம் நீக்கும் தலமான இங்கு வந்து வேண்டிக்கொண்டால், ராகு கேது தோஷங்கள் நீங்குவதோடு குழந்தை பாக்கியம், திருமணம் ஆகியவற்றில் இருந்த தடைகளும் உடனடியாக விலகுகின்றன என்கிறார்கள்.

இங்கே ஆயில்ய நட்சத்திர தினத்தில் வந்து பூஜை செய்வது மிகவும் விசேஷம்.

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் பிராகாரம்
கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் பிராகாரம்

இப்படிப்பட்ட சிறப்புகளை உடைய இந்த ஆலயத்துக்கு ஒருமுறை வாருங்கள். காய்ச்சலுக்கு நிவாரணம் தரும் கணபதியைத் தொழுது, உலக மக்கள் அனைவரும் உடல்நலம் பெற அந்த நாகேஸ்வரரையும் வணங்கி பூரண ஆரோக்கியமும் மன அமைதியும் பிரார்த்தனை செய்து வாருங்கள். வாழ்க்கை நலமாகும்.

விழுப்புரம், எசாலம் ஸ்ரீராமநாதேஸ்வரர் : அரசியலில் வெற்றி, பதவியோகம் அருளும் ஈசன்!

சோழர்கள் கலைப்பொக்கிஷங்களாகத் திகழ்பவை அவர்கள் எழுப்பிய ஆலயங்கள். தஞ்சைப் பெரியகோயிலும் கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயிலும் அதற்குப் பெரும் எடுத்துக்காட்டுகள். ஆனால் கோயில்கள் கலைப்படைப்புகள் மட்டுமல்ல... மேலும் பார்க்க

குற்றாலம், இலஞ்சி முருகன் கோயில்: வேண்டும் வரம்தரும் மாதுளை முத்துகளால் ஆன வேல் காணிக்கை!

தமிழ்க்கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமான் அடியார்களின் குரலுக்கு ஓடி வருபவர். அப்படி அவர் ஓடி வந்து அருள் செய்த தலங்களில் ஒன்று இலஞ்சி. தமிழகத்தின் எல்லைப்புற ஊர்களில் ஒன்று செங்கோட்டை. இயற்கை ... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: உண்டியலில் முருக பக்தர் செலுத்திய `வெள்ளிக்காசு மாலை' - சிறப்பு என்ன?

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா, கடந்த மாதம் 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 27-ம் தேதி சூரசம்ஹாரமும், 28-ம் தேதி தி... மேலும் பார்க்க

தூத்துக்குடி, ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோயில் : பிரச்னைகள் தீர்க்கும் பிரதோஷ தேங்காய் மாலை!

பிரதோஷ காலத்தில் வழிபாடுகள் சிவாலயங்களில் சிறப்பாக நடைபெறும். வைணவ ஆலயங்களில் நரசிம்ம மூர்த்திக்கு விசேஷ வழிபாடுகள் உண்டு. ஆனால் விநாயகருக்குப் பிரதோஷ வழிபாடுகள் விசேஷமாக நடைபெறும் தலம் ஒன்று உண்டு. அ... மேலும் பார்க்க

சிதம்பரம், ஓமாம் புலியூர் துயர்தீர்த்த நாதர் கோயில்: மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய குருஸ்தலம்!

தட்சிணாமூர்த்தியே குருவடிவம். அவரை வழிபட்டால் சகலவிதமான ஞானமும் கிடைக்கும். மேலும் வாழ்வில் இருக்கும் தடைகள் விலகி நன்மைகள் கூடிவரும். சில ஆலயங்களில் தட்சிணாமூர்த்தி விசேஷ வடிவுடன் அருள்பாலிப்பார். அப... மேலும் பார்க்க

தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தரைக் கடித்த நாய்; பணியாளர்களின் அலட்சியமா?

முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்கிவருகிறது. இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்ககளும், விடுமுறை மற்றும் வ... மேலும் பார்க்க