Kashmir Times: பத்திரிகை அலுவலகத்தில் ரெய்டு; துப்பாக்கி பறிமுதல்? - அரசை விமர்ச...
"திமுக தொழில்த்துறை முதலீடுகளில் ஊழல் பொய்" - பாமக அன்புமணி அடுக்கும் குற்றச்சாட்டுகள்
திமுக தலைமையிலான தமிழக அரசு, தொழில்துறை முதலீடுகளில் தொடர்ந்து ஊழலும், பொய்யான அறிவிப்புகளை அறிவித்து வருவதாக பாட்டளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
'திமுக'வின் தொழில்நுறை அமைச்சர் டி.ஆர். பி. ராஜா, இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.
இந்நிலையில் அன்புமணி ராமதாஸ், "திமுக கட்டமைத்த பொய் கோட்டைகளை தொழில் அமைச்சரே தகர்த்திருப்பதுதான் பா.ம.க.வின் வெற்றி" என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், "தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் என்ற பெயரில் திமுக அரசு நடத்தி வரும் மோசடிகளை அம்பலப் படுத்தும் வகையில் சென்னையில் நேற்று நான் வெளியிட்ட, திமுக அரசின் தொழில் பொய் முதலீடுகள் என்ற தலைப்பிலான ஆவணத்தில் இடம்பெற்றுள்ள உண்மைகளை மறுப்பதாகக் கூறி தொழில்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
ஆனால், பாவம்... பா.ம.க.வின் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக நினைத்துக் கொண்டு அவை அனைத்தையும் அமைச்சர் ஒப்புக் கொண்டிருக்கிறார். இது பாமகவின் வெற்றி.
தி.மு.க. அரசின் மீது பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து முன்வைத்து வந்த குற்றச்சாட்டும், வழங்கி வந்த அறிவுறுத்தலும் என்னவென்றால், தமிழ்நாட்டில் முழுமையாக நிறைவேற்றப்பட்ட தொழில் முதலீட்டுத் திட்டங்கள் எத்தனை? அவற்றின் மூலம் தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடுகள் எவ்வளவு? என்பதை மூடி மறைக்காதீர்கள் என்பதும், அந்த விவரங்களை முழுமையாக வெளியிடுங்கள் என்பதும் தான். ஆனால், திமுக அரசும், அதன் முதலமைச்சராகிய

மு.க.ஸ்டாலின் அவர்களும் தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் வரை மொத்தம் ரூ.11.32 லட்சம் கோடி முதலீடுகள் வந்திருப்பதாகவும், அதன்மூலம் 34 லட்சத்து 2998 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருப்பதாகவும் பச்சைப் பொய்யை கூறி வந்தனர். அவர்கள் கூறுவது பொய் என்பதால் தான் தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வந்தது.
ஆனால், வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டால், தங்களின் பொய்மூட்டைகள் அம்பலமாகிவிடும் என்பதால் பல்வேறு காரணங்களைக் கூறி அதற்கு திமுக அரசு தொடர்ந்து மறுத்து வந்தது.
இத்தகைய சூழலில் தான் திமுக அரசின் பொய் முதலீடுகளை அம்பலப்படுத்தும் நோக்குடன், திமுக அரசின் தொழில் பொய் முதலீடுகள் என்ற தலைப்பிலான ஆவணத்தை சென்னையில் நேற்று நான் வெளியிட்டேன். அதில் பாட்டாளி மக்கள் கட்சி ஆதாரப்பூர்வமாக தெரிவித்திருந்த உண்மை என்னவெனில், ரூ.11.32 லட்சம் கோடிக்கு திமுக அரசு கையெழுத்திட்டிருப்பது அனைத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தான்; அந்த முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வரவில்லை என்பது தான். மேலும், 2021-ஆம் ஆண்டு முதல் திமுக அரசு செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் கடந்த நான்கரை ஆண்டுகளில் செய்யப்பட்ட முதலீடுகளின் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடிக்கும் குறைவு; விழுக்காடு அடிப்படையில் அது 8.8% மட்டும் தான் என்பதை அந்த ஆவணத்தில் ஆண்டுவாரியான ஆதாரங்களுடன் நான் விளக்கியிருந்தேன்.

அதன் பயனாக, நேற்று முன்நாள் வரை ரூ.11.32 லட்சம் கோடி முதலீடும் வந்து குவிந்து விட்டதைப் போலவும், அதன் காரணமாக 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து விட்டதைப் போலவும் மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வந்த தொழில்துறை அமைச்சர், நேற்று வெளியிட்ட அறிக்கையில் முதன்முறையாக, 2021 முதல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 23 விழுக்காடும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு ஒப்பந்தங்களில் 16 விழுக்காடும் வணிக உற்பத்தியை தொடங்கியிருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். மொத்த ஒப்பந்தங்களில் 80 விழுக்காடும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு ஒப்பந்தங்களில் 77 விழுக்காடும் செயலாக்கம் பெற்று விட்டதாக அவர் கட்டி வைத்த பொய்கோட்டையை இதன் மூலம் அவரே தகர்த்துள்ளார்.
தொழில் துறை அமைச்சர் கூறியவாறு 2021 முதல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 23% முதலீடுகள் கூட முழுமையாக வரவில்லை என்பது தான் உண்மை. அதற்கு இரு சான்றுகளை மட்டும் இங்கு முன்வைக்கிறேன்.
அமைச்சரின் கூற்றுப்படி புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்திய நிறுவனங்களில் ஹூண்டாய், வின்ஃபாஸ்ட் மகிழுந்து நிறுவனங்கள் முதன்மையானவை. ஹூண்டாய் நிறுவனம் கடந்த 11.05.2022-ஆம் நாள் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ரூ.20 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய ஒப்புக்கொண்டது.
ஆனால், சுமார் ரூ.500 கோடி அளவுக்கு தான் முதலீடு செய்துள்ளது. அரசின் கணக்குப்படி அந்த ஒப்பந்தம் செயலாக்கம் பெற்று விட்டது. ஆனால், அதில் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 2.5% மட்டும் தான் வந்துள்ளது. இதை எவ்வாறு முழுமையான செயலாக்கமாக எடுத்துக் கொள்ள முடியும்?
அடுத்ததாக, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 07.01.2024 ஆம் நாள் தமிழக அரசுடன் செய்து கொள்ளப் பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி வின்ஃபாஸ்ட் மகிழுந்து நிறுவனம் ரூ.16,000 கோடி முதலீடு செய்யவும், அதன் மூலம் 3500 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும் ஒப்புக்கொண்டது. அதன்படி வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் அதன் ஆலையை அமைத்து 04.08.2025ஆம் நாள் மகிழுந்து உற்பத்தியை தொடங்கி உள்ளது. ஆனால், அந்த நிறுவனம் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் ரூ.4000 கோடியை, அதாவது 25% மட்டுமே முதலீடு செய்துள்ளது; 400 பேருக்கு, அதாவது 11.5% மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.

இதேபோல், செயலாக்கம் பெற்று விட்டதாக தொழில்துறை அமைச்சர் குறிப்பிடும் 23% ஒப்பந்தங்களிலும் அரைகுறையாகவே முதலீடுகள் வந்துள்ளது. செயலாக்கம் பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விழுக்காட்டைக் கூறிய அமைச்சர், அவற்றின் மூலம் கிடைத்த முதலீட்டின் மதிப்பைத் தெரிவித்தால், அது பாட்டாளி மக்கள் கட்சியால் தெரிவிக்கப்பட்ட 8.8% (ரூ.1 லட்சம் கோடி) என்ற அளவுடன் ஒத்துப் போகும். வேண்டுமானால், தொழில்துறை அமைச்சர் கூட்டிக் கழித்துப் பார்க்கட்டும்... பா.ம.க.வின் கணக்கு சரியாகவே இருக்கும்.
இரண்டாவதாக, புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பை செயலாக்கம் பெற்ற முதலீடுகளின் மதிப்பாக குறிப்பிட்டு வந்த தொழில் துறை அமைச்சர், இப்போது முதன்முறையாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, MoU என்பது முதலீட்டு 'உறுதிமொழிகள்' தான் (Commitments) என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உள்ள மொத்தத் தொகையும் முதல் நாளிலேயே முதலீட்டாளர்களால் செலவிடப்படும் என நினைப்பது குழந்தைத்தனமானது. முதலீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி அடிப்படை புரிதல் இல்லாதவர்கள் மட்டுமே இத்தகைய அரைவேக்காட்டுதனமான அனுமானங்களை வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்றும் தொழில்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.
கடந்த காலங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள், அளித்த பேட்டிகள் ஆகியவற்றையும், தொழில்துறை அமைச்சரே கடந்த காலங்களில் வெளியிட்ட அறிக்கைகளையும் அவர் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.
அப்போது தான் கடந்த காலங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்ட நாளிலேயே ஒட்டுமொத்த முதலீடும் தமிழ்நாட்டு வந்து விட்டதாக கூறி வந்த அவர்கள் இருவரும் தான் அரைவேக்காட்டுதனமான அனுமானங்களை வெளிப்படுத்தியிருக்கின்றனர் என்பதும், அவர்களின் நினைப்பு தான் குழந்தைத்தனமானது என்பதும் அனைவருக்கும் உறுதியாக தெரியவரும்.
தொழில் முதலீடுகள்: திமுக கட்டமைத்த பொய் கோட்டைகளை தொழில் அமைச்சரே தகர்த்திருப்பது தான் பா.ம.க.வின் வெற்றி! @CMOTamilnadupic.twitter.com/Wk7qzfgChQ
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) November 20, 2025
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குவிய வேண்டும்; முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உயர வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்பமாகும். தமிழ்நாட்டிற்கு அதிக முதலீடுகள் வந்தால், அதை எண்ணி மகிழ்ச்சியடையும் முதல் நபர் நானாகத் தான் இருப்பேன். ஆனால், திமுக ஆட்சியில் அது நடக்கவில்லை என்ற ஆதங்கத்தில் தான் குறைகளை சுட்டிக் காட்டுகிறேன். தொழில்துறை அமைச்சராக இருப்பவருக்கு மாநிலத்தின் நலனில் அக்கறையும், நேர்மையும் இருக்க வேண்டும். அவை இல்லாத தொழில்துறை அமைச்சரால் நிர்வகிக்கப்படும் துறையில் முதலீடுகள் வராது, மோசடிகளும், பொய்களும் தான் வரிசை கட்டி வரும். தமிழ்நாடு இப்போது இதைத் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
தொழில் தொடங்க அனுமதி வழங்குவதில் தொடங்கி, நிலம் ஒதுக்குவது வரை அனைத்திலும் திமுக அரசின் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷனை தாங்கிக் கொள்ள முடியாததால் தான் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தைத் திரும்பிப் பார்க்காமல் ஓடுகின்றன.
இவை அனைத்தும் இன்னும் 3 மாதங்களுக்குத் தான். அதன்பிறகு அமையவிருக்கும் பா.ம.க. அங்கம் வகிக்கும் ஆட்சியில், தொழில்துறை தூய்மையாக்கப்படும். பிற நாடுகளும், பிற மாநிலங்களும் தொழில் முதலீடு செய்ய தேடி வரும் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்." என்று அறிக்கையில் திமுக மீதான குற்றாச்சாட்டுகளை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

















