``நிதிஷ் கட்சி 25 இடங்களுக்கு மேல் வென்றுவிட்டால் நான் அரசியலை விட்டே போகிறேன்" ...
நீலகிரி: கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய பெண் சிறுத்தை - போராடி மீட்ட வனத்துறை
நீலகிரியில் அதிகரித்து வரும் காடழிப்பு காரணமாக வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் தேயிலை தோட்டங்களில் தஞ்சமடைந்து வருகின்றன. தடுப்பு வேலிகள், சுருக்கு கம்பிகள், மின் வேலிகள் போன்றவற்றில் சிக்கி வனவிலங்குகள் உயிரிழந்து வருகின்றன.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் இன்று காலை 7 மணியளவில் சிறுத்தையின் பயங்கர உறுமல் சத்தம் கேட்டிருக்கிறது. அருகில் சென்று பார்த்த உள்ளூர் மக்கள், வேலி கம்பியில் சிறுத்தையின் கால்கள் சிக்கியிருப்பதைக் கண்டு உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து உறுதி செய்த வனத்துறையினர் சிறுத்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வலியால் துடித்த அந்த சிறுத்தை மிகவும் ஆக்ரோஷமாக சீறியதால் மயக்க ஊசி செலுத்தி மீட்கும் முடிவை எடுத்திருக்கிறார்கள்.

வனவிலங்குகளுக்கான சிறப்பு கால்நடை மருத்துவர் உதவியை நாடிய வனத்துறையினர், முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து மருத்துவரை வரவழைத்து சிறுத்தையை மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர். மதியம் ஒரு மணியளவில் அந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி சாந்தப்படுத்தியுள்ளனர். வேலிக் கம்பியில் இருந்து சிறுத்தையை பத்திரமாக மீட்டு கூண்டு மூலம் முதுமலைக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.
சிறுத்தை மீட்பு பின்னணி குறித்து வனத்துறையினர், " பந்தலூர் வனச்சரக எல்லைக்குட்பட்ட பாறைக்கல் சாலை அருகில் ராஜலிங்கம் என்பவரின் பட்டா நிலம் இருக்கிறது. அங்குள்ள கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

வனத்துறை குழுவினர் மற்றும் வன கால்நடை மருத்துவர் உதவியுடன் சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது. சுமார் 2 வயதுடைய பெண் சிறுத்தை நல்ல உடல்நலனுடன் இருக்கிறது. மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் " என்றனர்.




















