BB Tamil 9: "கண்ணு முன்னாடி நடக்கும்போது குமட்டிட்டு வரும்" - மனம் திறக்கும் பிக...
'மேயர் பிரியா டு பத்மபிரியா' - தலைநகர் சீட் ரேஸில் திமுக ஜூனியர்கள்? ; விடாப்பிடி சீனியர்கள்!
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தலைநகர் தொகுதிகளை குறிவைத்து தி.மு.க ஜூனியர் நிர்வாகிகள் காய்நகர்த்தி வருவதை, சீனியர்கள் பலரும் ரசிக்கவில்லை என முணுமுணுக்கிறார்கள் விவரமறிந்த அறிவாலயப் புள்ளிகள். இதுகுறித்து விரிவாக விசாரித்தோம்.
2026 சட்டமன்றத் தேர்தலில், பெண்கள், இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறையினரின் வாக்குகளை ஈர்க்கும் பொருட்டு மகளிர் உரிமைத் தொகை தொடங்கி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் வரை அவசர அவசரமாக நிறைவேற்றி வருகிறது தி.மு.க அரசு. இச்சூழலில், “அரசு நலத்திட்டங்களோடு நிறுத்திவிடாமல், இளம் வேட்பாளர்களை களமிறக்குவது கூடுதல் பிளஸ் ஆக அமையும்” எனக் கணக்குப் போடுகிறது தி.மு.க தலைமை.

இச்சூழலை கணித்த பல ஜூனியர் நிர்வாகிகள், தலைமைக்கு நெருக்கமான புள்ளிகள் மூலமாக சீட் ரேஸில் இணைந்திருக்கிறார்கள்.
உதயநிதிக்கு முன்னிலை... வாய்ப்பு கேட்கும் ஜூனியர்கள்!
நம்மிடம் பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர்கள் சிலர்,
“2016-ல் 1 சதவீதமாக இருந்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி 2021-ல் 6.8 சதவீதமாக உயர்ந்தது. தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்த நாளோடு ஒப்பிட்டால் இன்றைய சூழலில் கணிசமாக வளர்ந்திருக்கிறது. இவை இரண்டிலும் பொதுவான காரணமாக இருப்பது இளம் மாவட்ட நிர்வாகிகளையும் வேட்பாளர்களையும் நிறுத்துவதுதான்.

2026 சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களின் வாக்குகளை ஈர்க்கவே அவசர அவசரமாக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியை துணை முதலமைச்சராக ஆக்கியது தலைமை. தலைமையில் ஒரு இளம் முகம் இருப்பது போலவே, வேட்பாளர் பட்டியலிலும் இளைஞர்கள் இடம்பெற வேண்டும். குறைந்தபட்சம் சென்னை, கோவை போன்ற நகரங்களில் இளம் வேட்பாளர்களை களமிறக்க வேண்டும் என்ற கருத்து கட்சிக்குள் வலுவாக இருக்கிறது. இதனை உணர்ந்த இளம் தி.மு.க நிர்வாகிகள் பலரும் சீட் கேட்டு அப்ளிக்கேஷன் போட்டு வருகிறார்கள்,” என்றனர்.

தலைநகர் தொகுதிகளை கைப்பற்ற கட்சிக்குள் பெரும் போட்டி
விபரமறிந்தவர்கள் கூறுகையில், “சென்னை மாநகராட்சி மேயராக இருக்கும் பிரியா ராஜன், இம்முறை சேகர்பாபு வாயிலாக எம்.எல்.ஏ சீட் கேட்டுவருகிறார். திரு.வி.க. நகர் தொகுதியில் பிரியாவை களமிறக்க காய்கள் நகர்த்தப்படுகின்றன.
அதேபோல், எழும்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ பரந்தாமனுக்கு பதிலாக தமிழன் பிரசன்னா போட்டியிட விரும்புவதாக என சொல்லப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்ற பத்ம பிரியா தற்போது தி.மு.கவில் உள்ளார். அவரும் மதுரவாயல் தொகுதியில் களமிறங்க விண்ணப்பித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தி.மு.க சார்பாக ஊடகங்களில் பேசிவரும் மருத்துவர் யாழினி, இளைஞரணி கோட்டாவில் வேளச்சேரி அல்லது தலைநகரில் ஒரு தொகுதியை பெற விருப்பம் தெரிவித்துவருகிறார். அதேபோல், விருகம்பாக்கம் தொகுதியை கைப்பற்ற சீனியரான கே.கே. நகர் தனசேகரன் அதீத முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சூழலில், சிட்டிங் எம்.எல்.ஏ பிரபாகர ராஜா இளைஞரணி பொறுப்பாளர் என்ற முறையில் ரேஸில் பங்கேற்கிறார்.
ஆயிரம் விளக்கு சிட்டிங் எம்.எல்.ஏ ஏழிலனுக்கு மீண்டும் சீட் ஒதுக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. இவற்றுக்கு மேலாக, இளைஞர்களின் முகமாக தி.மு.க முன்னிறுத்தும் உதயநிதியும் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் களமிறங்குகிறார்,” என்றனர்.
வாய்ப்பில்ல ராஜா... விடாப்பிடி சீனியர்கள்!
“சட்டமன்றத் தேர்தல் வந்தால் இளைஞர்கள் தங்களுக்கு வேண்டியவர்கள்மூலம் சீட் கேட்டு விண்ணப்பிப்பது வழக்கமாக நடைமுறையே. ஆனால் நிதர்சனத்தில் பெருவாரியான இளைஞர்கள் வாய்ப்பு பெறுவது தி.மு.கவில் இன்னும் சாத்தியமில்லாத நிலையே உள்ளது,” என்கிறார்கள் இளைஞரணி நிர்வாகிகள் சிலர்.

அவர்கள் கூறுகையில், “தலைநகரில் அமைச்சர்களாகவும், மா.செ.க்களாகவும் இருப்பவர்கள் என்னச் சொல்கிறார்களோ அதுவே சட்டம் என்ற நிலைதான் தி.மு.கவில் இன்னும் நீடிக்கிறது. இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் பொறுப்புகளிலேயே தங்களுக்கு வேண்டியவர்களை தலைநகரிலுள்ள அமைச்சர்கள் நியமித்துக் கொள்கிறார்கள்.
நிர்வாக வசதிக்காக சென்னை மாவட்டத்தை பிரித்து புதிய கட்டமைப்பை கொண்டுவர வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி கூறியிருந்தபோதும், அதனை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள் சீனியர் அமைச்சர்கள்.

இளைஞர்களுக்கு சீட் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றாலும், மா.செ.க்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். சிட்டிங் எம்.எல்.ஏ எழிலன், சேகர்பாபு ரூட்டில் மேயர் பிரியா, தமிழன் பிரசன்னா ஆகியோரை தவிர மற்றவர்களுக்கு சீட் கிடைப்பது சந்தேகம்தான்,” என்றனர்.
நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள்,
“த.வெ.க.வின் வருகை, நா.த.க.வின் எழுச்சியை எதிர்கொள்ள பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டிய நிர்பந்தம் தி.மு.கக்கு எழுந்திருப்பது உண்மைதான்.

ஆனால் சீனியர்கள் ‘நாங்கள் சொல்பவர்களுக்குத்தான் சீட்’ என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார்கள். ஆகவே தி.மு.க தலைமை என்ன முடிவெடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,” என்றனர்.




















