`கர்நாடகம், உத்தரவை கடைபிடிக்கவில்லை எனில்.!’ - காவிரி வழக்கில் அதிரடி காட்டிய உ...
``பெண்கள் தைரியமாக புகாரளிப்பதால் பாலியல் வழக்கு அதிகம் உள்ளதாக தெரிகிறது'' - அமைச்சர் கீதாஜீவன்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நாகர்கோவில் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "சமூக நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட எல்லா திட்டங்களுக்கும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுவிட்டன.
அன்புக்கரங்கள் திட்டத்தில் இன்னும் மக்கள் விண்ணப்பிக்கலாம். எத்தனை விண்ணப்பம் வந்தாலும் கொடுக்க முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பெண்கள் நடமாட முடியாமல் உள்ளனர் என பொய்யான குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பா.ஜ.க-வினர் முன்வைக்கின்றனர்.
உண்மைநிலை அது அல்ல. இந்தியாவில் பாதுகாப்பான நகரமாக சென்னையும் அதற்கு அடுத்தபடியாக கோவையும் உள்ளது என மத்திய அரசின் புள்ளி விவரம் கூறுகிறது.
பெண்கள் அதிகமாக வேலை செய்யும் இடம், பெண்களுக்கு கல்வி உரிமை, சொத்துரிமை அனைத்தும் கொடுக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடுதான்.
இரண்டு காரணங்களால்தான்..
இந்த காலத்தில் மூலை முடுக்குகளில் எல்லாம் நடக்கும் தவறுகள்கூட வெளிச்சத்துக்கு வருகின்றன. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள் இந்த ஆட்சியில் தைரியமாக புகார் அளிக்க முன்வருகிறார்கள். இந்த இரண்டு காரணங்களால்தான் பாலியல் விவகாரங்கள் அதிகமாக நடப்பது போன்று தெரிகிறது.

எதிர்க்கட்சிகள் எதையும் பாராட்ட மாட்டார்கள். ஆளுங்கட்சியை குறைகூற வாய்ப்பு கிடைக்காதா என்ற நோக்கில் குற்றம் சொல்கின்றனர்.
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள் புகார் கூற தயங்கும் பழைய நிலைமை தற்போது மாறி இருக்கிறது. அதிக அளவில் புகார் அளிக்க முன்வருகிறார்கள். பெண்களின் நிலை இன்று உயர்ந்திருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில் பாலியல் குற்றச்சாட்டுகளை மட்டும்தான் கூற முடியும் என்பதால் எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள்.
பாலியல் குற்றங்களுக்கு எதிராக அதிக புகார்கள் வருவது தான் சமூக நலத்துறையின் வெற்றி. பாலியல் குற்றங்களுக்கு எதிராக புகார் தரும் பெண்களை நாங்கள் மனமாற பாராட்டுகிறோம்.
அதற்கான விழிப்புணர்வை செய்து வெற்றி பெற்றுள்ளோம்" என்றார்.


















