`பிக் பாஸ்' பார்த்துக்கொண்டே ஹைவேஸில் ஆம்னி பஸ் ஓட்டிய டிரைவர், பணிநீக்கம் - பின...
IPL: சென்னை அணியில் சஞ்சு சாம்சன்? விடைபெறும் ஜடேஜா?! - இந்த ட்ரேடிங் மூலம் யாருக்கு லாபம்?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வரும் சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் சென்னை அணி வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சாம்சனுக்கு பதில் ஜடேஜாவையும் சாம் கரணையும் சென்னை அணி ராஜஸ்தானுக்கு விட்டு தரவிருப்பதாகக் கூறுகின்றனர். இந்த டிரேடிங்கால் பலன் பெறப்போவது யார்? சென்னை அணிக்கு இதில் என்ன லாபம்?

ஜடேஜாவை டிரேடிங் முறையில் விட்டுக்கொடுப்பதாக சென்னை அணி எடுத்தது மிக முக்கியமான முடிவு. ஏனெனில், ஜடேஜா சென்னை அணியோடு உணர்வுப்பூர்வமான பந்தத்தைக் கொண்டவர். சென்னை அணியின் அந்த மிக முக்கிய 3-4 வீரர்களில் ஒருவர். தொடக்க காலத்தில் சில சீசன்களையும், சென்னை அணி தடை செய்யப்பட்டிருந்த காலத்தையும் தவிர்த்து எல்லா சீசனையும் சென்னை அணிக்காகத்தான் ஆடியிருக்கிறார்.
தடையிலிருந்து மீண்டு வந்தபோது சென்னை அணி தக்க வைத்த மூன்று வீரர்களில் ஜடேஜாவும் ஒருவர். தோனிக்குப் பிறகு யார் கேப்டன் எனும்போது ஜடேஜாதான் முதல் ஆப்சனாக இருந்தார். அவர் கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததால் மட்டுமே அடுத்த சாய்ஸ்களுக்குச் செல்கிறார்கள். இப்படி அணியின் மிக முக்கியமான வீரரை விட்டுக்கொடுக்க காரணம் என்ன?

தாக்கம் இல்லை:
ஜடேஜா சமீபகாலமாக அத்தனை தாக்கம் ஏற்படுத்தும் வகையில் ஆடுவதில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாகத்தான் நல்ல இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார். கடந்த சீசனில் பேட்டிங் ஆர்டரில் ப்ரமோட் செய்யப்பட்ட போது பெரிய இம்பாக்ட்டை கொடுக்கவில்லை. பௌலிங்கிலும் ஸ்பெசலாக எதையும் செய்வதில்லை. வெறுமென எமோஷனல் காரணங்களுக்காக மட்டும் எத்தனை வீரர்களை அணியில் வைத்துக்கொள்வது?
சாம்சன் வருகை!
சரி, அதற்காக சாம்சனை அணிக்குள் கொண்டு வருவதால் என்ன நடக்கும்? சாம்சன் ஜடேஜாவை விட இளையவர். இன்னும் சில சீசன்களுக்கு அவரால் ஆக்டிவ்வாக ஆட முடியும். மேலும், சென்னை அணிக்கு தோனிக்குப் பிறகு ரசிகர்களைக் கவர்ந்து இழுக்கக்கூடிய ஒரு முகம் தேவை. அந்த முகமாக சாம்சன் கட்டாயம் இருப்பார். இந்திய அணிக்காக பெரிதாக சாதிக்காவிடிலும் தென்னிந்தியாவில் அவருக்கு பெரிய ரசிகர் வட்டமே இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு வங்கதேச A அணியுடன் இந்திய A அணி ஒரு போட்டியில் ஆடியது. சாம்சன் இந்திய அணிக்காக ஆடினார். அந்தப் போட்டியை காண்பதற்கே சேப்பாக்கில் சாம்சனுக்காக நிறைய ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஆக, தோனியளவுக்கு இல்லையேனும் அணியின் நட்சத்திரத் தன்மையை தக்கவைக்க சாம்சன் உதவுவார்.

அதேமாதிரி, தோனி சென்னை அணியின் விக்கெட் கீப்பராக இத்தனை ஆண்டுகளாக ஆடியிருக்கிறார். அவர் இடத்துக்கு அதே அளவுக்கு திறனுடைய அணியின் லெவனில் எப்போதும் இருக்கும் தகுதியுடைய ஒரு வீரர் தேவை. அந்த வீரராகவும் சாம்சன் இருப்பார். மேலும், அணியின் ஓப்பனிங் கூட்டணி இன்னும் செட்டில் ஆகவில்லை. ஆயுஸ் மாத்ரேவுடன் ஓப்பனிங் இறங்கவும் சாம்சன் நல்ல சாய்ஸாக இருப்பார். மேலும், சென்னையின் பேட்டிங் லைன் அப்பில் ருத்துராஜை கடந்து ஒரு வலுவான இந்திய பேட்டராக சாம்சன் இருப்பார்.
சாம்சன் சென்னை அணிக்கு வந்தால் அவருக்கு கேப்டன் பதவி கொடுக்கப்படுமா? இப்போதைக்கு இருக்காது என்றே தோன்றுகிறது. ஏனெனில், சென்னை அணி அடிக்கடி கேப்டன்களை மாற்றும் அணி இல்லை. ருத்துராஜூக்கு இன்னும் வாய்ப்புகளைக் கொடுப்பார்கள். அவரால் எதிர்பார்க்கும் ரிசல்ட்டை கொடுக்க முடியாதபட்சத்தில் சாம்சனுக்கு கேப்டன் பதவி வந்து சேர வாய்ப்பிருக்கிறது.

ராஜஸ்தான் அணியின் பேட்டிங் வலுவாகவே இருக்கிறது. அதனால் சாம்சனுடைய இல்லாமை அங்கே பெரிய குறையாக இருக்காது. மேலும், கடந்த சீசனிலிருந்தே அவர்கள் ரியான் பராக்கை கேப்டனாக புரொமோட் செய்யத் தொடங்கிவிட்டார்கள். கீப்பராகவும் துருவ் ஜூரேல் இருக்கிறார். ஜடேஜா அங்கே செல்வதன் மூலம் ஒரு இந்திய ஸ்பின்னர் அவர்களுக்குக் கிடைப்பார்.

ஏனெனில், தீக்சனாவையும் ஹசரங்காவையும் மட்டும்தான் அவர்கள் நம்பியிருப்பார்கள். காம்பீனேஷனாக பார்க்கையில் ஜடேஜா நல்ல சாய்ஸாக இருப்பார். மேலும், ஜடேஜாவுக்கு அது புதிய அணி இல்லை. அவரின் முதல் அணியே ராஜஸ்தான் தான். ஷேன் வார்னே ஜடேஜாவை ஆரம்ப காலத்திலேயே ராக் ஸ்டார் என புகழ்ந்திருக்கிறார். ஆக, ஜடேஜாவுக்கு இது வீடு திரும்பும் படலமாகத்தான் இருக்கும். எங்கு தொடங்கினாரோ அங்கேயே தன்னுடைய கரியரை நிறைவு செய்யும் வாய்ப்பும் கூட அவருக்கு வாய்க்கலாம். சாம் கரண் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர். சரியாக பயன்படுத்தினால் பலவிதங்களில் அவரை பயன்படுத்தலாம்.
இரண்டு அணிகளுக்கு இடையேயும் ட்ரேடிங் முடிந்துவிட்டது என தகவல் வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரக்கூடும். எதிர்பார்ப்பதை போல இந்த ட்ரேடிங் நடந்தால் இதைப் பற்றிய உங்களின் கருத்து என்ன?



















