Tvk Vijay Speech: அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்? - முதல்வருக்க...
Personal Finance: முதலீட்டின் மூலம் ஒரு கோடி ரூபாய் சேர்க்கணுமா? 15:15:15 ஃபார்முலாதான் ஒரே வழி!
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு கோடி ரூபாயைச் சேர்த்துவிட வேண்டும் என்பது பெரும் இலக்காக இருக்கும். ஆனால், அதை எப்படி முதலீட்டின் மூலம் சேர்ப்பது என்பது தெரியாமல் இருக்கும்.
சர்வதேச நிறுவனமான ஹெச்.எஸ்.பி.சி நிறுவனம் சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பில், இன்றைய இந்தியர்களுக்கு ஓய்வுகாலத்தை நிம்மதியாகக் கழிக்க ரூ.3.3 கோடி தேவை என்கிற சர்வே முடிவை வெளியிட்டிருக்கிறது.
அப்படி இருக்கும் போது ஒரு கோடி ரூபாய் என்பது எதிர்காலத்தில் மிகச் சொர்ப தொகையாகவே கருதப்படும். இருப்பினும் 15 வருடங்களில் ஒருவர் ஒரு கோடி ரூபாயை எப்படிச் சேமிக்கலாம் என்பதற்கான வழியைச் சொல்கிறார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.
கோடீஸ்வரன் திட்டம்!

"என்னிடம் நிதி ஆலோசனை கேட்டு வரும் பலரும் ஒரு கோடி ரூபாயை இலக்காக வைத்துதான் வருகிறார்கள். அவர்கள் அப்படி இலக்கில்லாமல் வரும்போதும், ஒரு கோடியை முதலீட்டின் மூலம் நிச்சயமாகச் சேர்க்க வேண்டும் என்பதை நான் அவர்களுக்குப் பரிந்துரைக்கிறேன். முதல் ஒரு கோடி ரூபாயைச் சேர்ப்பதுதான் சிரமமாக இருக்குமே தவிர, அடுத்தடுத்த ஒரு கோடி என்பது எளிதில் எட்டக் கூடிய விஷயமாக மாறிவிடும்.
ஓய்வுகாலம் என்பது ஒரு நபருக்கு மிக முக்கியமான காலகட்டம் ஆகும். அந்தக் காலகட்டத்தில் வங்கிகள் பெரும்பாலும் மூத்த குடிமக்களுக்கு கடன்களை வழங்காது. ஓய்வுகாலத்தில் ஒருவரால் இப்போது சம்பாதிப்பது போல சம்பாதித்து வருமானம் ஈட்டமுடியாது. ஆக, வருமானம் ஈட்டுவதற்கான ஒரே வழி, நீங்கள் பணி காலங்களில் சம்பாதித்த தொகையை முதலீடு செய்து, அந்த முதலீட்டை வைத்து பணத்தைப் பெருக்குவதுதான்.
அதன்படி பார்க்கும் போது, 25 வயதில் ஒருவர் வேலைக்குச் செல்வதாக இருந்தால், அவரை 15:15:15 என்கிற ஃபார்முலாவின்படி, 40-வது ஆண்டில் அவரை ஒரு கோடிக்கு அதிபதியாக ஆகலாம். 30 வயதில் உள்ள ஒருவர் இந்த ஃபார்முலாவை ஃபாலோ செய்தால் 45-வது வயதிலும், 40 வயது மதிகத்தக்க ஒருவர் தனது 55-வது வயதிலும் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனது 60-வது வயதிலும் நிச்சயமாக கோடீஸ்வரர் ஆக முடியும்" என்றவர் அதற்கான முதலீட்டு வழிகளைச் சொன்னார்.
15 ஆண்டுகள் ; ரூ.15,000 ; 15% வருமானம்!

"முதலீட்டுக்கு பணம் மட்டும்தான் முக்கியம் எனப் பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பணத்தைவிட மிக முக்கியமானது காலம். எவ்வளவு சீக்கிரமாக ஒருவர் முதலீட்டை ஆரம்பிக்கிறாரோ, அவ்வளவு சீக்கிரம் கோடீஸ்வரர் ஆக முடியும். அதற்கு குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் கட்டாயம் தேவை. இன்றைய நிலையில் பெரும்பாலானவர்களின் குறைந்தபட்ச மாதச் சம்பளம் ரூ.50,000-ஆக இருக்கிறது.
இவர்கள் இதர செலவுகளுக்கு ரூ.35,000-ஐ ஒதுக்கியது போக மாதம் ரூ.15,000-ஐ 15% வருமானம் தரக்கூடிய வகையில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் பிரித்து பிரித்து எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய வேண்டும். இன்றைய நிலையில் கோல்டு இ.டி.எஃப்., சில்வர் இ.டி.எஃப் போன்ற மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் நல்ல லாபத்தைப் பதிவு செய்திருக்கின்றன. இந்த வகை முதலீடுகளிலும் தனது முதலீட்டுத் தொகையின் ஒரு பகுதியை முதலீடு செய்யலாம்.
ஸ்மால்கேப் ஃபண்டுகளில் கவனம்!
ஸ்மால்கேப் முதலீடுகளில் கவனம் செலுத்துவது நல்லது. ஏனெனில் ஸ்மால்கேப் நிறுவனங்களின் வளர்ச்சிதான் எப்போதும் சிறப்பாக இருக்கிறது. அதற்காக மிட்கேப் மற்றும் லார்ஜ்கேப் முதலீடுகளில் முதலீடு செய்யக்கூடாது என்கிற அர்த்தம் இல்லை. அதிலும் முதலீடு செய்யலாம். ஆனால் லாப சதவிகிதம் குறைவாக இருக்கும். நமது இலக்கு 15 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் என இருக்கும்போது முதலீட்டில் ரிஸ்க் எடுப்பதில் தவறில்லை.

ரிஸ்க் எடுக்க தயங்குகிறவர்களும், பயமாக இருக்கிறது என்பவர்களும் ஸ்மால்கேப் நிறுவனம் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளின் பக்கம் வராமல் இருப்பது நல்லது. அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இன்றைய நிலையில் லார்ஜ்கேப் பங்குகள் பட்டியலில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் ஒருநாள் ஸ்மால்கேப் பங்குகள் பட்டியலில் இருந்தவைதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
எஸ்.ஐ.பி சிஸ்டம்!

பெரும்பாலான மக்கள், எஸ்.ஐ.பி என்பதை ஒரு முதலீட்டுத் திட்டமாகக் கருதுகிறார்கள். 'நீங்கள் எதுல முதலீடு பண்ணி இருக்கீங்க?' என்று கேட்கும்போது, 'நான் எஸ்.ஐ.பி-ல முதலீடு பண்ணியிருக்கேன்' என்கிற பதிலைச் சொல்கிறார்கள். அவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது, எஸ்.ஐ.பி என்பது முதலீடு திட்டம் கிடையாது. அது ஒரு பணத்தை முதலீடு செய்யும் முறை.
மாதா மாதம் ஒரு தொகையை ஆட்டோமேட்டிக்காக வங்கிகள் உங்களது வங்கிக்கணக்கில் இருந்து கடன் இ.எம்.ஐ-களுக்கு எப்படி எடுத்துக் கொள்கின்றனவோ, அதே போல, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மாதா மாதம், நீங்கள் முடிவு செய்த ஒரு தொகையை ஆட்டோமேட்டிக்க்காக உங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து எடுத்து, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கணக்கில் வரவு வைக்கும். அன்றைய தினத்தில் நீங்கள் தேர்வு செய்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் ஒரு என்.ஏ.வி மதிப்பு என்னவோ அதற்கு தகுந்தாற்போல வரவாகும்.
இப்படி ஒவ்வொரு மாதமும் நீங்கள் ரூ.15,000-ஐ முதலீடு செய்யும்போது, அதற்கு 15 ஆண்களில் சராசரி வருமானமாக 15% கிடைக்கும்பட்சத்தில் நிச்சயமாக நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம். ஒரு கோடி என்கிற இலக்குடன் நீங்கள் முதலீடு செய்ய ஆரம்பித்த பிறகு, அதை இடைநிறுத்தம் செய்யாமல் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
15,000 ரூபாயை மட்டுமே நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்யாமல், ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு கிடைக்கும்போதெல்லாம் கூடுதல் 10% தொகையை அதிகரித்துக் கொண்டே வருபட்சத்தில் இன்னும் சீக்கிரமாக உங்களால் ஒரு கோடி ரூபாயைச் சேர்த்துவிடலாம். 15% வருமானத்தும் என்ன உத்திரவாதம் என நீங்கள் கேட்கலாம். 'காலம் பொன் போன்றது' என்பார்கள். இந்த முதலீட்டு ஃபார்முலாவிலும் காலம்தான் ஒரு கோடியைச் சம்பாதித்துக் கொடுக்கிறது. ஏனெனில் கடந்த 15 ஆண்டுகளில் பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்டுகள் 15%-ற்கும் அதிகமான வருமானத்தைக் கொடுத்திருக்கின்றன" என்றார் தெளிவாக.
உலகின் மொத்தம் ஏழு அதிசயங்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தாம். ஆனால், கூட்டு வட்டியை (Compounding Interest) உலகின் எட்டாவது அதிசயம் என்கின்றனர். உலகின் மிகச்சிறந்த முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபெட்கூட இந்தக் கூட்டு வட்டியைப் பின்பற்றித்தான் முதலீட்டின் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் பணத்தைச் சேர்த்ததாகச் சொல்கிறார்.
ஆக, மேலே சொன்ன ஃபார்முலாவின்படியும், கூட்டு வட்டி என்கிற முதலீட்டு மந்திரத்தின் மூலமும் நீங்களும் நிச்சயம் கோடீஸ்வரர் ஆகலாம்.

















