Bhgayashri Borse: 'டைரி மில்க் விளம்பரம் டு டோலிவுட்'; புதிய சென்சேஷன் 'காந்தா' ...
TVK: `அறிவு என்ற வார்த்தையைக் கேட்டாலே அவர்களுக்கு.!" - மறைமுகமாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
தி.மு.க இளைஞா் அணி சாா்பில் ‘தி.மு.க 75- முப்பெரும் அறிவுத் திருவிழா’ நடத்தியது. 8-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆளுமை நிகழ்வரங்குக்கு வந்து உரையாற்றினர். இதற்கிடையில் தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், ``தங்களைக் கொள்கைவாதிகளாக அடிக்கடி காட்டிக்கொள்வதற்காக, எல்லோரையும் ஏமாற்றுவதற்காக, தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழினம்தான் தங்கள் உயிர் என்றும் மண், மொழி, மானம்தான் தங்கள் தலையாய கொள்கை என்று ஒரு சம்பிரதாயச் சங்கை முழங்கத் தொடங்கி உள்ளார், அக்கட்சியின் தலைவர்.

அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது?
பெரியார், அண்ணா கொள்கைகளை மறந்துவிட்ட அவர்கள், மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளோடு களம் இறங்கி, யாருக்கும் எதற்கும் வளையாமல் வலம் வரும் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து, கொள்கையற்றவர்கள் என்று கூறுவதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட உளைச்சலும் குமைச்சலுமன்றி வேறென்ன?" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், அறிவுத் திருவிழாவின் நிறைவு விழாவான நேற்று தி.மு.க இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``நாம் அறிவுத் திருவிழா தொடங்கி 4 நாளுக்குப் பிறகுதான் அவர்களுக்கு இப்படி ஒரு திருவிழா நடக்கிறது என்பதே தெரிந்திருக்கிறது.
அவர்களிடமிருந்து 'இந்த திருவிழாவை எப்படி நடத்தலாம்... யாரைக்கேட்டு நடத்தினீர்கள்... எதுக்காக நடத்துனீர்கள்' எனக் கேள்வி வருகிறது. அறிவு இருப்பவன் அறிவுத் திருவிழா நடத்துவான். அதுவும் அறிவுத் திருவிழாவில் அவர்களை விமர்சித்துப் பேசிவிட்டோம் எனக் கோபம்வேறு வருகிறதாம்.
எப்படி போலீசை பார்த்தால் திருடனுக்கு பயம் வருமோ, அப்படி அறிவு என்ற வார்த்தையைக் கேட்டாலே அவர்களுக்கு அலர்ஜியாகிவிடுகிறது. சுகாதார மேம்பாட்டைப் பற்றி பேசும்போது கிருமிகளைப் பற்றி பேசாமல் இருக்க முடியுமா?
அதுபோலதான் அறிவுத் திருவிழாவில் கொள்கைகளைப் பற்றி பேசும்போது, கொள்கையற்றவர்களின் கும்பலால் வரும் ஆபத்தையும் பேசியிருக்கிறார்கள். தி.மு.க என்பதே ஒரு அறிவு இயக்கம். கழகத்தில் பயணிக்கும் ஒவ்வொரு நாளுமே அறிவுத் திருநாள்.
சலூன், டீக்கடை, சைக்கிள் கடை என சாமானிய மக்களையும் அரசியல் பேச வைத்த இயக்கம் இது. இந்தக் கழகத்தின் முன்னோடிகள் தொடங்கி இப்போது இருக்கும் அமைச்சர்கள் வரை பலரும் இன்றும் புத்தகங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
நம் இயக்கத்தின் அலுவலகப் பெயர் கூட அண்ணா அறிவாலயம். இப்படி அறிவுக்கு முக்கியத்துவம் தருவதால்தான் நாம் இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாக இருக்கிறோம்" என உரையாற்றினார்.















