செய்திகள் :

``ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வரை ஓயமாட்டோம்!" - முதல்வர் ஸ்டாலின்

post image

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாகக் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தின் மீதான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பி உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு பல முக்கிய விஷயங்களை குறிப்பிட்டிருந்தது.

திரௌபதி முர்மு - ஆளுநர் ரவி
திரௌபதி முர்மு - ஆளுநர் ரவி

அதில், ``மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு எதையும் நீதிமன்றத்தால் விதிக்க முடியாது. மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என்றால் அதற்கான காரணங்களை மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் இவ்வாறு கால வரம்பை நிர்ணயித்திருந்தது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. ஒரு மசோதா மீது காரணமே இல்லாமல் நீண்ட காலத்திற்கு ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார் என்றால் சம்பந்தப்பட்ட மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடலாம்.

இருப்பினும் ஆளுநருக்கு நீதிமன்றங்களால் எந்த உத்தரவையும் போட முடியாது. மசோதாக்கள் மீது முடிவெடுங்கள் என கேட்டுக் கொள்ளத்தான் முடியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தான் மாநிலத்தை முழுமையாக செலுத்தக்கூடிய அதிகார அமைப்பாக இருக்க வேண்டும். ஒரு மாநிலத்திற்கு இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை ஏற்க முடியாது." எனத் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும்!

சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம்!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள விளக்கங்கள் ஆளுநருக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் பெற்ற 8 ஏப்ரல் 2025 தீர்ப்பின் மீது எந்தத் தாக்கத்தையும் செலுத்தாது.

சொல்லப் போனால்,

* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் ஆட்சியைச் செலுத்த வேண்டும், மாநிலத்தில் இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது.

* அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டகத்துக்குட்பட்டே அரசியலமைப்புப் பதவியில் இருப்போர் செயல்பட வேண்டுமே ஒழிய, அரசியலமைப்பை மீறிச் செயல்படலாகாது!

* சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் மறுப்பது / (தமிழ்நாடு ஆளுநர் செய்தது போல) காலவரையின்றி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைப்பது எனும் நான்காவது விருப்பத் தேர்வு ஆளுநருக்கு இல்லை.

* மசோதாக்களின்மீது முடிவெடுக்காமல் காலவரையின்றி ஆளுநர் தாமதம் செய்ய இயலாது. அப்படி, எந்த விளக்கமும் இல்லாமல் நீண்டகாலம் இழுத்தடித்தால், மாநிலங்கள் நீதிமன்றங்களை அணுகலாம். ஆளுநர்கள் வேண்டுமென்றே தாமதிப்பதற்கு எதிராக வழக்கு தொடுத்து, கேள்விக்குட்படுத்தி நியாயம் பெறலாம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

என்பனவற்றைத் தனது விளக்கத்தில் உச்சநீதிமன்ற அமர்வு மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், புனித சேவியர் கல்லூரி, அகமதாபாத் v. குஜராத் அரசு (1974) 1 SCC 717 வழக்கின் தீர்ப்பில் (பத்தி 109), 9 நீதிபதிகள் கொண்ட அமர்வானது, "நீதிமன்றங்கள் தெரிவிக்கும் கருத்துகள் என்பவை அரசு தலைமை வழக்கறிஞர்கள் தெரிவிக்கும் கருத்துகளைப் போன்றவை என்பதைக் கடந்து அவற்றுக்கென எந்த மதிப்பும் இல்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளது.

*காலவரையின்றிக் காலம் தாழ்த்தலாம்,

*சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் மறுக்கலாம் எனும் தமிழ்நாடு ஆளுநர் அவர்களின் கூற்றை உச்ச நீதிமன்றத்தின் நேற்றைய கருத்து மீண்டுமொருமுறை நிராகரித்துள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உட்பட மாநில அரசுகளுடன் மல்லுக்கட்டும் அனைத்து ஆளுநர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் வழியில் செயல்பட வேண்டும் என்பதையும், மக்களின் விருப்பத்தைச் சட்டமியற்றி நிறைவேற்றும்போது, வேண்டுமென்றே ஒப்புதல் அளிக்காமல் காலத்தைக் கடத்தினால் நீதிமன்றங்களில் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டுமென்பதையும் நமது சட்டப் போராட்டத்தின் மூலம் கட்டாயமாக்கியுள்ளோம்! அரசியல்சட்டப்பிரிவு 361-க்குப் பின்னால் ஆளுநர்கள் ஒளிந்துகொள்ள முடியாது என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளோம்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

அரசியல் சட்டத்தால் அமையப்பெற்ற எந்தப் பதவியும் அச்சட்டத்துக்கு அப்பாற்பட்டதில்லை என நான் திடமாக நம்புகிறேன். உயர்ந்த அரசியலமைப்புப் பதவிகளில் இருப்போரே அரசியலமைப்புச் சட்டத்தை மீறி நடந்தாலும், நீதிமன்றங்கள்தான் ஒரே நம்பிக்கை.

ஆகவே, நீதிமன்றங்களின் கதவு தீர்வுபெறத் திறந்தே இருக்க வேண்டும். அது தனது கதவுகளை அடைத்தால், நமது அரசியலமைப்பின்படியான மக்களாட்சியில் சட்டத்தின் ஆட்சியைச் சிறுமைப்படுத்திவிடும்; அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படும் ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொள்வதை ஊக்குவிக்கும்.

தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தைச் சட்டங்களின்மூலம் நிறைவேற்ற, அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டு அரசியலமைப்புக் கருவிகள் செயல்படுவதை உறுதிசெய்யத் தொடர்ந்து உழைப்போம்! எங்கள் வாக்கைக் காப்பாற்றுவோம்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"அமெரிக்க அதிரபரையே எதிர்க்கும் துணிவு கொண்டவர் மோடி" - நயினார் நாகேந்திரன்

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை, குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும். கோவ... மேலும் பார்க்க

திமுக, அதிமுக-வுக்கு பிடிகொடுக்காத பிரேமலதா - தேமுதிக-வின் அடுத்த அரசியல் நகர்வு என்ன?

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க இடம்பெற்றிருந்தது. விருதுநகரில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் எனப் பெரிதும் நம்பிய பிரேமலதாவுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சி... மேலும் பார்க்க

ஆப்ரேஷன் சிந்தூர்: ``இந்தியா மீது பாகிஸ்தானின் வெற்றி" - அமெரிக்கா கருத்தும் காங்கிரஸ் கேள்வியும்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொலை செய்யப்பட்டதற்காக மே 7-ம் தேதி இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' எனும் தாக்குதலைத் தொடங்கியது. இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்கள் த... மேலும் பார்க்க

``உதயநிதி அப்செட்; செல்வப்பெருந்தகை ஆப்சென்ட்'' - வைரலாகும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு

இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மெல்லத் தொடங்குகிறது. இதற்கிடையில், திமுக காங்கிரஸ் கூட்டணி நீண்டகாலமாக எழுதப்படாத விதியாகவே தொடர்ந்து ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: மராத்தி பேசாதவருக்கு ரயிலில் அடி, உதை; உயிரை மாய்த்துக்கொண்ட கல்லூரி மாணவர்

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ரயிலில் சென்றபோது மொழி விவகாரத்தில் உள்ளூர் கும்பலால் தாக்கப்பட்ட 19 வயது கல்லூரி மாணவர், தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக வியாழக்கிழமை (நவ. 20) காவல்துறையினர் தெரிவித்துள்ளன... மேலும் பார்க்க