என்னை இப்படி பார்க்கணும்னு அவர் ஆசைப்பட்டார்..! - Karthigaichelvan | KS | Disco ...
`உன் சகோதரியை கொலை செய்கிறேன்' - மனைவியை அடித்து கொன்று மைத்துனருக்கு போனில் தகவல் கொடுத்த கணவர்
டெல்லி போலீஸில் சிறப்பு ஆயுத பிரிவில் பணியாற்றி வந்தவர் காஜல் செளதரி(27). இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு அன்குர் என்பவருடன் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். அதோடு காஜல் இப்போது 3 மாதம் கர்ப்பமாக இருந்தார். அன்குர் பாதுகாப்புத்துறையில் க்ளார்க்காக இருந்து வருகிறார். இருவரும் கல்லூரியில் படித்தபோது காதலித்து வந்தனர். அவர்கள் இருவருக்கும் திருமணமான நாளில் இருந்து அடிக்கடி கணவன் வீட்டார் வரதட்சணை கேட்டு காஜலை சித்ரவதை செய்து வந்தனர். திருமணத்தின் போது நகை, பணம் கொடுத்தபோதும் அது போதாது என்று கேட்டு மேற்கொண்டு பணம் கேட்டு சித்ரவதை செய்து வந்தனர்.
இதில் உடற்பயிற்சிக்காக எடை தூக்கி பயிற்சி எடுக்க பயன்படும் டம்பாலால் அன்குர் தனது மனைவியின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். இது தொடர்பாக அன்குர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து காஜல் சகோதரர் நிகில் கூறுகையில், ``கடந்த 22ம் தேதி காஜல் கணவர் அன்குர் போன் செய்து, உங்களது சகோதரிக்கு புரிய வையுங்கள் என்று தெரிவித்தார். உடனே நான் அவரிடம் சற்று அமைதியாக இருங்கள் என்று கூறிவிட்டு எனது சகோதரி காஜலுக்கு போன் செய்தேன்.
உங்களது சகோதரியை கொலை செய்கிறேன்
பொதுவாக காஜல் வீட்டில் நடக்கும் எதையும் எங்களது குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ள மாட்டார். ஆனால் அன்றைய தினம் வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து என்னிடம் போனில் தெரிவித்துக்கொண்டிருந்தார். அந்நேரம் அன்குர் தனது மனைவியிடமிருந்து கோபத்தில் போனை பிடுங்கி என்னிடம் பேசினார். அன்குர் என்னிடம், இந்த சத்தத்தை பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு சாட்சிக்கு உதவும். உங்களது சகோதரியை கொலை செய்கிறேன். போலீஸாரால் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்தார். அதன் பிறகு காஜல் கதறும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் போனும் ஆப்பாகிவிட்டது. அடுத்த சில நிமிடங்களில் அனுகுர் போன் செய்து உங்களது சகோதரி இறந்துவிட்டார்.
மருத்துவமனைக்கு வாருங்கள் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். நாங்கள் மருத்துவமனைக்கு விரைந்தோம். அங்கு எதிரியைக்கூட இது போன்று யாரும் கொலை செய்யமாட்டார்கள். அந்த அளவுக்கு மோசமாக அடித்திருந்தனர். தலையில் பின்னால் இருந்து டம்ப்பாலால் அடித்து இருந்தனர். எனது சகோதரி உடம்பு முழுக்க காயம் இருந்தது. 5 நாள் சிகிச்சைக்கு பிறகு இறந்துவிட்டார்''என்றார்.
காஜல் தந்தை ராகேஷ் இது குறித்து கூறுகையில்,''திருமணத்தின் போது விலையுயர்ந்த பொருட்களை வாங்கி கொடுத்தோம். புல்லட், தங்க நகைகள், பணம் கொடுத்தோம். அப்படி இருந்தும் வேறு யாரையாவது திருமணம் செய்திருந்தால் கார் கிடைத்திருக்கும் என்று அன்குர் வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்தனர். அதனால் எனது மகள் காரையும் ஏற்பாடு செய்து கொடுத்தாள். அப்படி இருந்தும் சித்ரவதை குறையவில்லை. எங்களது மகளிடம் சுதந்திரமாக பேசக்கூட முடியாமல் இருந்தது.
வேலைக்கு சென்று வந்த பிறகு வீட்டு வேலைகள் அனைத்தையும் எனது மகளிடம் செய்ய சொன்னார்கள். கர்ப்பமாக இருந்தபோதிலும், துணி துவைப்பது, சமைப்பது, பாத்திரம் கழுவது என அனைத்து வேலைகளையும் செய்ய சொன்னார்கள்'' என்றார். கடந்த 5 மாதத்திற்கு முன்பு ஒரு முறை இதே போன்று காஜலை அவரது கணவர் அடித்துள்ளார். அந்நேரம் நிகில் அங்கு சென்று தனது சகோதரியிடம்,உனக்கு எப்போது வீட்டுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறாயோ அப்போது வந்துவிடு என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.
திருமணம் முடிந்த பிறகு அவர்கள் ஹரியானாவில் தங்கி இருந்தனர். அங்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் தம்பதி டெல்லியில் வீடு வாடகைக்கு எடுத்து வந்து தங்கி இருந்தனர். காஜலும், அன்குரும் கல்லூரியில் ஒன்றாக படித்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.














