ராஜஸ்தான்: ``திருமணம் நடைபெற 16 நாள் குழந்தையை பலியிட்ட 4 பெண்கள்'' - பெற்றோர்கள...
சுசீந்திரம்: தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளம் சுவர் இடிந்து விழ என்ன காரணம்? வல்லுநர்கள் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளத்தை ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி சீரமைக்க கடந்த மார்ச் 2-ம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டது.
செப்டம்பர் 19-ம் தேதி தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென வடக்கு பகுதியில் உள்ள தெப்பக்குளத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. பிரசித்திபெற்ற சுசீந்திரம் கோயில் தெப்பக்குளத்தின் கரை உடைந்து விழுந்த சம்பவம் பக்தர்களிடத்தில் அதிர்வலை ஏற்படுத்தியது. இதையடுத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் குளத்தை பார்வையிட்டு, உடனடியாக பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து வந்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மனோ தங்கராஜ் சுசீந்திரம் தெப்பக்குளத்தை ஆய்வு செய்தார். உடன் மாவட்ட கலெக்டர் அழகுமீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது அந்த பகுதி இளைஞர்கள் அமைச்சரிடம், தெப்பக்குளத்தில் இருந்து அதிக அளவு மண் எடுக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர்.

ஆய்வுக்குப் பின் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"சுசீந்திரம் கோவில் தெப்பக்குளம் சுற்றுச் சுவர் உடைப்பு குறித்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வல்லுநர் குழுவினர் வந்திருக்கிறார்கள். தொல்லியல் துறை வல்லுநர்கள் மற்றும் ஐ.ஐ.டி வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்டு, பழமை மாறாமல் தெப்பக்குளம் சரிசெய்யப்படும்.
இளைஞர்கள் புகார் கூறியதுபோன்று, தெப்பக்குளத்தில் இருந்து மண் அதிகமாக எடுக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச் சுவர் உடைந்து விழுந்தது குறித்து ஆய்வு நடக்கிறது. தவறு இருந்தால் நூறு சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக முதலமைச்சரிடம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரிடம் விரைவில் பேசி கூடுதல் நிதி கேட்கப்படும். விரைவில் பணிகள் நிறைவடையும்," என்றார்.

தமிழ்நாட்டில் கோயில்களில் உள்ள தெப்பக்குளங்களை ஆய்வு செய்து பணியாற்றிய வல்லுநர் குழுவினர் சுசீந்திரம் தெப்பக்குளத்தை பார்வையிட்டனர்.
அப்போது சுசீந்திரம் குளத்தில் தண்ணீர் வரும் உள்மடை, வெளியேறும் மடை, சுரங்கம் போன்ற அமைப்பில் உள்ள தண்ணீர் கிணறு ஆகியவற்றைப் பார்த்து ஆச்சர்யமடைந்தனர்.
மேலும், சென்னை ஐ.ஐ.டி பொறியாளர்களுடன் ஆலோசித்து, தரமான கட்டுமானப் பணிகளுடன் சுசீந்திரம் தெப்பக்குளம் புனரமைக்கப்படும் என வல்லுநர் குழுவினர் தெரிவித்தனர்.

















