‘ஹார்முஸ் அமெரிக்காவுக்கு சொந்தம்’ - ட்ரம்ப் அதிரடி; 'அது எப்போதும் முடியாது' - ...
` திருமணம் ஆகாத இளைஞர்கள் மது குடிக்க தடை; மீறினால் அபராதம்' - நல்வழிப்படுத்தும் முன்மாதிரி கிராமம்
இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் மதுக்குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகின்றனர். இதனால் அவர்களது வாழ்க்கை வளர்ச்சியடையாமல் பாதிப்பை சந்திக்கிறது. பலரது வாழ்க்கை மதுப்பழக்கத்தால் சீரழிகிறது. இப்போதுள்ள சூழலில் வயது வித்யாசமின்றி மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. பள்ளிகளில், கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் கூட மது அருந்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பதற வைக்கிறது.

மது குடிப்பதால் உடல் நலம் கெடுகிறது. அமைதி கேள்விக்குறியாகி சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன. மதுக்கு அடிமையானவரின் குடும்பம் வளர்ச்சியில் பல ஆண்டுகள் பின்நோக்கி சென்று பல்வேறு சங்கடங்களை சந்திக்கின்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மதுவால் எந்த ஒரு நல்லதும் நடக்காத போதும் மது குடிப்பவர்கள் அதிகமாகி கொண்டே வருகின்றனர்.
மது குறித்த விழிப்புணர்வுகளில் அரசு ஈடுப்பட்டு வருகிறது. மதுவை தடுக்க வேண்டும், மது குடிப்பவர்களை தடுத்து அதில் இருந்து காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுவதுடன் விழிப்புணர்வும் ஏற்படுத்துகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு மீன கிராமத்தில் மதுவை தவிர்க்க வித்யாசமான அவசியமான முன்னெடுப்பை எடுத்துள்ளனர்.
மது குடிக்க குறிப்பாக இளைஞர்கள் குடிப்பதற்கு தடை விதித்துள்ளனர். இது பல மட்டத்திலும் கவனம் பெற்று நாமும் இதை பின்பற்றலாமே என்று பேசு பொருளை உருவாக்கியிருக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ளது விழுந்தமாவடி மீனவ கிராமம். இங்கு 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஊர் பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் இணைந்து மதுவை ஒழிப்போம், மக்களை காப்போம் என ஊரில் மது குடிப்பதற்கு தடை விதித்துள்ளனர்.
ஊரில் மக்கள் கூடுகின்ற பொதுவான இடத்தில் ஃப்ளக்ஸ் வைத்துள்ளனர். அதில் பொது அமைதி, பொது சுகாதாரம், இளைஞர்களின் நலன் அகியவற்றை கவனத்தில் கொண்டு மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி அருந்தி ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும். திருமணமானவர்கள் மது அருந்தி விட்டு வீட்டிலோ, அல்லது பொது இடத்திலோ பிரச்னை ஏற்பட்டு ஊருக்கு வரும் பட்சத்தில் 5,000 அபராதம் வசூலிப்படும். இந்த நல்ல முயற்சிக்கு ஒத்துழைப்புக் கொடுக்க கேட்டு கொள்கிறோம். இன்றைய சரியான முடிவு நாளை சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும். மதுவை தவிர்ப்போம், நம் எதிர்கால வாழ்க்கையையும், நம் சமூகத்தையும் பாதுகாப்போம் என அதில் அச்சிட்டுள்ளனர்.

விழுந்தமாவடி கிராம மக்களின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிகிறது. எந்த சூழலிலும் இந்த முன்னெடுப்பை நிறுத்தாமல் கடைபிடிக்கவும் கோரிக்கை வைக்கின்றனர். இது குறித்து விழுந்தமாவடி மீனவ கிராமத்தில் சிலரிடம் பேசினோம், மது குடிக்காமல் இருந்தால் அந்த வீடு மட்டுமல்ல, ஊர், ஏன் நாடே நன்றாக இருக்கும், வளமாகும்.
இளைஞர்கள் மது குடிப்பதால் நல்ல வாய்ப்புகளை, எதிர்காலத்தை இழக்கின்றனர். எங்க கிராமம் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும், இளைஞர்கள் நலமாக, பலமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருமித்த கருத்துடன் இதை செயல்படுத்தி இருக்கிறோம். ஃப்ளக்ஸ் வைத்தது மட்டுமின்றி ஊர் முழுக்க ஒலி பெருக்கி மூலம் இதை அறிவிச்சோம்.

கடுப்பாட்டை மீறி யாரும் மது குடித்தால் அதை ஊர் தலைவர்களிடம் ஆதாரத்துடன் தகவல் தரும் நபர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்குகிறோம். மதுவுக்கு எதிரான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகிறது. கிராமத்தில் எவ்வித சண்டையுமின்றி அமைதி நிலவுவதாக ஊர் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். எங்க ஊரைப் போல தமிழ்நாடும் மாறணும் அப்பதான் எங்களுக்கு மகிழ்ச்சி என்றனர்.




















