‘ஹார்முஸ் அமெரிக்காவுக்கு சொந்தம்’ - ட்ரம்ப் அதிரடி; 'அது எப்போதும் முடியாது' - ...
"நீங்க மம்மூட்டி சாரா? என்னை ஃபாலோ செய்ங்க!" - நள்ளிரவில் 10 கி.மீ பைக்கில் வழிகாட்டிய தமிழக ரசிகர்!
தமிழ்நாட்டின் காரைக்குடியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் கேரளா திரும்பிக் கொண்டிருந்த மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி வழியறியாமல் தவித்த போது தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற ரசிகர் அதிகாலை 3:30 மணிக்கு பைக்கில் முன்சென்று வழிகாட்டி உதவிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் தமிழக ரசிகரை "நம்ம ஃபிரெண்டு" என மம்மூட்டி கூறுகிறார். மேலும், அந்த ரசிகரின் பைக்கை ஃபாலோ செய்யும்போது "சொந்தம் என்ன பந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம்
நான் இல்லை ஹோய்" என மம்மூட்டி பாடுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
அந்த வீடியோவை தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடந்த நிகழ்வு குறித்தும் தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் தகவல் வெளியிட்டுள்ளார்.
மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் நிதீஷ் சகதேவன் இயக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு முடிந்து அதிகாலை வேளையில் மம்மூட்டி, தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப், நடிகர் ரமேஷ் பிஷாரடி, ஜார்ஜ் மற்றும் ஓட்டுநர் உன்னி ஆகியோர் காரில் கேரளா நோக்கிப் புறப்பட்டனர்.
திருப்பத்தூர் அருகே சென்றபோது நெடுஞ்சாலை அடைக்கப்பட்டிருந்தது. மாற்று வழியைக் கண்டறிய கூகுள் மேப் உதவியை நாடிய போதிலும், பல வழிகளில் சுற்றித் திரிந்தும் வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காரில் அலைந்ததால் சோர்வடைந்த மம்மூட்டி, "மீண்டும் காரைக்குடி அறைக்கே திரும்பிச் செல்லலாம், நாளை காலை பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறினார். அடுத்த நாள் திட்டங்கள் அனைத்தும் வீணாகிவிடுமே என்று படக்குழுவினர் யோசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது பட்டமங்கலம் பகுதியில் இருந்த ஒரு பெட்ரோல் பங்க்கில் கார் நிறுத்தப்பட்டது. அங்கு கொசுவலைக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஒரு இளைஞரிடம் வழி கேட்டனர். அவர் கூறிய வழிகள் அனைத்தும் ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த பாதைகளாகவே இருந்தன. அந்த சத்தம் கேட்டு, அருகே தூங்கிக் கொண்டிருந்த மற்றொரு இளைஞர் அங்கு வந்தார். காரில் இருந்தவர்களிடம் "நீங்க தமிழா, மலையாளிகளா?" என்று கேட்டவாறே காரின் உட்பகுதியை உற்றுப் பார்த்தார்.
காரில் அமர்ந்திருப்பது மெகாஸ்டார் மம்மூட்டி என்பதைக் கண்டதும், அந்த இளைஞரின் தூக்கம் பறந்துபோய் முகத்தில் சொல்லொணா வியப்பும் உற்சாகமும் கூடியது. உடனே அவர் பரவசத்துடன், “நீங்க மம்மூட்டி சார்தானே, என்னை ஃபாலோ செய்ங்க...” என்று கூறி, தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.

கூகுள் மேப்பிற்கே தெரியாத குறுக்கு வழிகள் வழியாக, சுமார் 10 கிலோமீட்டர் தூரம் தனது இருசக்கர வாகனத்தில் முன்சென்று மம்மூட்டியின் காருக்கு அவர் வழிகாட்டினார். நெடுஞ்சாலையை அடைந்ததும், "அப்படியே ஸ்ட்ரைட்டா போனா கேரளா வந்துரும்" என்று கையைக் காட்டி வழியனுப்பினார்.
அப்போது நடிகர் ரமேஷ் பிஷாரடி, "இந்த நல்ல மனிதர் நாளை யாரிடமாவது அதிகாலையில் மம்மூக்காவைப் பார்த்து வழி காட்டினேன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்களே" என்றார். உடனே மம்மூட்டி காரில் இருந்து இறங்கி, அந்த இளைஞரின் செல்போனை வாங்கி ரமேஷ் பிஷாரடியிடம் கொடுத்து புகைப்படம் எடுக்கச் சொன்னார்.

மம்மூட்டி அவரை அன்போடு அணைத்துக்கொண்டு, "உன் பெயர் என்ன?" என்று கேட்டார். அதற்கு அவர் "பாண்டியன்" என்று பதிலளித்தார். "அவரது அக்கறையை நாம் பகிர வேண்டும் ஆன்டோ சேட்டா... இந்த பாண்டியன் பான்-இந்திய அளவில் பிரபலமாகட்டும்!" என்றார் ரமேஷ் பிஷாரடி. எதிர்பாராத நேரத்தில் நள்ளிரவில் உதவி செய்த தமிழக இளைஞர் பாண்டியனின் செயல் மம்மூட்டியின் உள்ளத்தை கவர்ந்தது.



















