மாண்புமிகு பறை: ``ஆஸ்திரேலியாவில் என்னை அழைத்து கௌரவித்தது ஏன்?'' -இசையமைப்பாளர்...
குமரி: அரசு நிலத்தை பங்குபோட்டு கொடுத்தாரா அதிமுக பிரமுகர்? - தாசில்தார் புகாரால் வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவுக்குட்பட்ட சிறமடம் பகுதியில் சுமார் 3 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் அமைந்துள்ளது. அங்கு மின்சார சுடுகாடு அமைக்க அரசு சில மாதங்களுக்கு முன்பு முயன்றது. அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் அந்த நிலத்தை வீடு இல்லாத மக்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் என அ.தி.மு.க பிரமுகர் ஜெகதீஷ் என்பவர் மக்களை அழைத்துச் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.

பின்னர் அந்த நிலத்தை அ.தி.மு.க பிரமுகர் ஜெகதீஷ் பொதுமக்களுக்கு பங்குவைத்து பிரித்துகொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறமடம் அரசு புறம்போக்கு நிலத்தில் சிலர் புகுந்து குடிசைகள் கட்டுவதற்கு நிலத்தினை சமன்படுத்திக் கொண்டிருப்பதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது.
அதன் அடிப்படையில் தோவாளை தாசில்தார் கோலப்பன் தலைமையில் அதிகாரிகள் அந்த இடத்துக்குச் சென்று அரசு நிலத்தை ஆக்கிரமிக்காதீர்கள் என கூறினர். அப்போது பெண்கள் சூழ்ந்துகொண்டு நாங்கள் அளித்த மனு எங்கே என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மனு அலுவலகத்தில் இருப்பதாக அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். இந்த நிலையில் தாசில்தார் கோலப்பன் பெண்களை அடிக்கப்பாய்ந்ததாக சிலர் சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பினர்.

இதையடுத்து தோவாளை தாசில்தார் கோலப்பன் பூதப்பாண்டி காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அதில், "கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் அரசு வாகனத்தில் சம்பவ இடத்துக்குச் சென்றேன். அங்கு தங்கதுரை, அபிலாஷ் உட்பட 50 -க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் இரண்டு டெம்போ வாகனங்களில் கொண்டுவந்திருந்த கிட்டாட்ச் இயந்திரங்களுடன் மேடான பகுதியை சமன்படுத்திக் கொண்டிருந்தனர்.
அந்த நிலம் அரசுக்குச் சொந்தமான நிலம் எனவும், ஆக்கிரமிப்பு செய்யாதீர்கள் எனவும், நிலத்தை சமப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்திவிட்டு அனைவரும் அரசு புறம்போக்கு நிலத்தை விட்டு வெளியேற தெரிவிக்கப்பட்டது.
தவறும் பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தேன். இதனை சிலர் அவர்களது செல்போனில் வீடியோ எடுத்தனர்.
இதற்கிடையே ஜெகதீஷ் என்பவர் தனது சமூக வலைதளத்தில் இருந்து தோவாளை வட்டாட்சியர் பெண்களை அடிக்க முயன்றார் என அவதூறு வீடியோக்களை பரப்பி எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார். அரசு பணியினை செய்யவிடாமல் தடுத்த தங்கதுரையையும் என்னைப்பற்றி முகநூல் போன்ற சமூக வலைதளத்தில் அவதூறு செய்தி பரப்பியுள்ளார்.
அந்த பதிவுகளை சமூக வலைதளத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெகதீஷ் என்பவரது செயலால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனவே தங்கதுரை மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் மீது அரசு ஊழியர் பணியை செய்ய விடாமல் தடுத்தது, அவதூறு ஏற்படுத்தும் பொருட்டு சமூக ஊடகங்களில் பகிர்ந்தது, அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் பொருட்டு இரண்டு கிட்டாச்சிகளுடன் பணி மேற்கொண்டது ஆகிய குற்றச் செயல்களுக்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தப்பிச் சென்ற இரண்டு கிட்டாச்சி ஓட்டுநர் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரின் மீது கடந்த ஐந்து நாட்களாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து நேற்று தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, தங்கதுரை, ஜெகதீஷ் ஆகியோர் மீது பூதப்பாண்டி காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அ.தி.மு.க பிரமுகர் ஜெகதீஷ் கூறுகையில்,
"நான் யாருக்கும் அந்த நிலத்தை பங்குவைத்து கொடுக்கவில்லை. மக்களுக்குத் தெரியாமல் நான் பங்கு வைத்துக் கொடுத்ததாகக் கூறுகின்றனர். நான் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது உண்மைதான். ஆனால் அன்று நான் சம்பவ இடத்தில் இல்லை" என்றார்.















