kathipara Flyover Metro Bridge : வியக்கவைக்கும் கத்திபாரா மெட்ரோ பாலம் பணிகள்!
Tara Prasad : அமெரிக்க குடியுரிமையை துறந்து இந்தியாவுக்காக ஆடும் பனிச்சறுக்கு ராணி! - யார் இவர்?
இந்தியாவில் பனிச்சறுக்கு (Figure Skating) என்பது ஒரு சவாலான விளையாட்டாக கருதப்பட்டாலும், அதில் தொடர்ந்து சர்வதேசப் பதக்கங்களை பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தவர் தாரா பிரசாத். 25 வயதான இவர், அமெரிக்காவில் பிறந்திருந்தாலும், இந்தியாவில் தான் வாழ வேண்டும் என்ற பற்று காரணமாக அமெரிக்கக் குடியுரிமையை விட்டுவிட்டு இந்தியக் குடியுரிமையைத் தேர்வு செய்தார்.
ஏழு வயதிலேயே பனிச்சறுக்கைத் தொடங்கிய இவர், விளையாட்டுப் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து soவந்தவர்.
அவரது தாயார் கவிதா பிரசாத், புகழ்பெற்ற தடகள வீரர் பி.டி. உஷாவுடன் பயிற்சி பெற்றதுடன், அவருடன் களத்திலும் விளையாடி இருக்கிறார். இந்த மன உறுதி மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுதான் தாராவின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது.

ஓய்வு நேரப் பொழுதுபோக்காகத் தொடங்கிய பனிச்சறுக்கு, பின்னர் தாராவுக்கு ஒரு தீவிரமான தொழில்முறை விளையாட்டாக மாறியது. அவர் இந்தியாவுக்காகப் போட்டியிட ஆரம்பித்த பிறகு, தேசிய களத்தில் விரைவிலேயே தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.
இவர் தனது முதல் இந்திய தேசிய சாம்பியன்ஷிப் போட்டியிலேயே தங்கப் பதக்கம் வென்றதோடு மட்டுமல்லாமல், அதன்பிறகு மேலும் இரண்டு முறை என மொத்தம் மூன்று முறை தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று, நாட்டின் பனிச்சறுக்கு அரங்கில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். இந்த ஆரம்ப கட்ட வெற்றிகள், அவர் சர்வதேசப் போட்டிகளுக்குத் தயாராக ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.
தேசிய வெற்றிகளைத் தாண்டி, சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக இவர் நிகழ்த்திய சாதனையே இவரை மிகவும் சிறப்பித்தது.
தாரா பிரசாத், இந்தியாவுக்காக இந்த விளையாட்டில் சர்வதேசப் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். அவர் சமீபத்தில் ஐஸ்லாந்தில் நடந்த ரெய்க்யவிக் விளையாட்டுப் போட்டிகள் (Reykjavik Games) மற்றும் ஸ்லோவேனியாவில் நடந்த ஸ்கேட் செல்ஜே (Skate Celje) ஆகிய இரண்டு மதிப்புமிக்க சர்வதேசப் போட்டிகளிலும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தார்.
இவரது இந்த அசாத்தியத் திறமையைப் பாராட்டி, இந்திய பனிச்சறுக்குச் சங்கத்தின் செயலாளர் இவரை 'இந்தியா இதுவரை கண்டதிலேயே சிறந்த பனிச்சறுக்கு வீராங்கனை' என்று புகழ்ந்துள்ளார்.

இவ்வளவு சாதனைகள் படைத்தபோதிலும், காயங்கள் இவரை விட்டுவைக்கவில்லை.
தாராவின் சமீபத்திய முதுகுக் காயம் ஒரு தற்காலிகத் தடையாக உருவெடுத்தது. இதன் காரணமாக, 2026 குளிர்கால ஒலிம்பிக்ஸ் தகுதிச் சுற்றில் பங்கேற்பதில் இருந்து அவர் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், இந்தக் காயம் அவரது லட்சியத்தைப் பாதிக்கவில்லை. தனது கடின உழைப்பையும், மன உறுதியையும் மூலதனமாகக் கொண்டு, எதிர்காலத்தில் அனைத்து சர்வதேசப் போட்டிகளிலும் இந்தியாவுக்காகப் பெருமையுடன் பங்கேற்கத் தான் உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தாரா பிரசாத் தனது அர்ப்பணிப்பு உணர்வால் இளம் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

















