கிலோ ரூ.12,500: நோயை எதிர்த்து போராடும், அதிக விலையுள்ள அரிசி ஜப்பானில் அறிமுகம்...
``திருமணத்திற்குப் பிறகு கோலியிடம் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன" - முன்னாள் சக வீரர் பகிர்வு
விராட் கோலி, கிரிக்கெட் உலகில் இந்தியாவைக் கடந்து உலக அளவில் பல தசாப்தங்களுக்கு ஒலிக்கும் பெயர்.
சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களில் சதமடித்திருக்கும் சச்சினின் சாதனையை முறியடிக்கும் ஒரே வீரராகப் பார்க்கப்பட்ட கோலி, சர்வதேச டி20-யிலும் டெஸ்ட்டிலும் ஓய்வுபெற்றுவிட்டதால் இப்போது அது கொஞ்சம் கடினம்தான்.
அது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தாலும் இப்போதைக்கு கோலியின் இலக்கு 2027 ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுப்பதாக மட்டும்தான் இருக்கிறது.

அதற்கு அவரை அணியில் எடுப்பார்களா என்ற கேள்வி தேர்வுக்குழுவின் செயல்பாடுகளால் எழுந்தாலும், சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் தொடரில் பேக் டு பேக் டக் அவுட் ஆனாலும் கடைசிப் போட்டியில் ரோஹித்துடன் கடைசிவரை நின்று ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக்கொடுத்தது கிளாசிக்.
எனவே கோலியை அவ்வளவு சீக்கிரம் தேர்வுக்குழு புறக்கணிப்பதெல்லாம் கடினம்.
இவ்வாறிருக்க, மாடர்ன் டே கிரிக்கெட்டின் ரன் மெஷின் கோலி நேற்று முன்தினம் (நவம்பர் 5) தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இந்த நிலையில், திருமணத்துக்குப் பிறகு கோலியிடம் நிறைய வித்தியாசம் இருப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் கூறியிருக்கிறார்.
தனது யூடியூப் சேனலில் பேசிய கைஃப், ``விராட் கோலி இப்போது கொஞ்சம் அமைதியாகிவிட்டார். அவர் இப்போது ஒரு தந்தை.
திருமணத்துக்கு முன்பு அவர் எப்படி இருந்ததற்கும், திருமணத்துக்குப் பிறகு அவர் இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
பஞ்சாப்புக்கெதிரான ஐ.பி.எல் ஆட்டத்தின்போது கோலியைப் பார்த்தேன். அப்போட்டியில் ரபாடா பந்தை தரையோடு தரையாக பவுண்டரி அடித்தார்.

அன்று நாங்கள் இருவரும் நல்ல உரையாடலை நடத்தினோம். அப்போது அவர், `ரபாடாவை நான் ஆரம்பத்திலேயே அடிக்காவிட்டால் பிறகு அவர் என்னை விளையாட விடமாட்டார். அதனால் முதல் பந்திலேயே அவரை அடிக்க விரும்பினேன்' என்று கூறினார். அதைத்தான் அபிஷேக் சர்மா செய்துகொண்டிருக்கிறார்.
கிரிக்கெட்டைப் பற்றிய அவரது புரிதலைப் பொறுத்தவரை அது அவரின் அமைதியுடனே முன்னேற்றமடைந்திருக்கிறது.
இத்தனை வருடங்களாக விளையாடிய பிறகும் அவர் தனது ஆட்டத்தை மேம்படுத்த விரும்புகிறார்.

முன்பு அவர் உங்களை சகோதரர் என்று அழைத்திருந்தால், இப்போதும் அவர் உங்களை சகோதரர் என்றுதான் அழைப்பார்.
அவரை நீங்கள் மைதானத்திற்கு வெளியே சந்திக்கும்போது, அவர் உங்களுடன் விளையாடியதை நினைவில் வைத்துக் கொண்டு, உங்களுக்கு அந்த மரியாதையை வழங்குவார். அதில் எந்த மாற்றமும் இல்லை" என்று கூறினார்.
கைஃப், கோலி ஆகிய இருவரும் இணைந்து சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்காவிட்டாலும், 2011 ஐ.பி.எல் சீசனில் ஆர்.சி.பி அணியில் இணைந்து விளையாடியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




















