Beauty Tips: சமந்தா, ராஷ்மிகா சொன்ன ரகசியம்! சரும பளபளப்புக்கு உதவும் Apple Cide...
நித்தமும் நினைவில் சுமந்து கொண்டே இருந்த நிகழ்வு! - மனதிற்கு அரிய மருந்தான மன்னிப்பு
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
சில மாதங்களுக்கு முன், அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் சக ஊழியரோடு வேலை சார்ந்த பெரும் விவாதம் ஏற்பட்டது.
ஒருவருக்கொருவர் முகம் கொடுத்துக்குக் கூட பேச முடியாவண்ணம் வாதம் முற்றியது. அடுத்த சில தினங்கள், அவரவர் வேலையை கவனித்தவாறு பொழுதுகள் கழிந்தன. ஆயினும், இருவருக்கிடையே தோன்றிய அணல் அகலாது அதே வேகத்துடன் நீடித்து கொண்டே இருந்தது.
பின்பு ஒரு நாள், வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது, ஒரு குறிப்பிட்ட சமூக வலைதளப்பதிவு என்னை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்தியது. பிரபல நடிகர் ஒருவரின் பெருந்தன்மையையும் மன்னிக்கும் குணத்தையும் பற்றி சான்றுகளுடன் அவரின் இயக்குநர் மனம் நெகிழ்ந்து பரிமாறினார்.
செல்பேசியை அணைத்துவிட்டுச் சில நிமிடங்கள் அமைதியாய் என் கடந்த சில நாட்களை ஆராய்ந்தேன். தேவையற்ற தேக்கங்களால் ஏற்பட்ட மனநிலை மாற்றங்கள், இதுவரை என்னுள் பாராத சில பரிமாணங்களை வெளிக்கொணர்ந்தன. ஏனெனில், இயல்பாகவே மன்னிக்கும் குணம் படைத்தவள் நான்.

கோபம் இருப்பினும், அது ஓரிரு நாட்களில் கரைந்து விடும். பின்பு இயல்பு நிலைக்கு பழகிவிடும். ஆனால், அந்த ஒரு நிகழ்வை நித்தமும் நினைவில் சுமந்து கொண்டே இருந்ததால், ஏதோ ஒரு பாரம் பற்றிக்கொண்டிருப்பதை என்னால் பல நேரங்களில் உணரமுடிந்தது. அதுவே எந்நேரமும் எரிச்சல், சிடுசிடுப்பு, செய்யும் செயலில் கவனக்குறைவு போன்றவற்றிற்கு வழிவகுத்தது.
இதற்கு மேலும் தள்ளிப்போட வேண்டாமென்று எண்ணி, உடனே அவ்வூழியரிடம் இதுவரை நடந்ததை மறந்து இனி ஒருவருக்கொருவர் வேலையில் உதவியாகவும் சகஜமாகவும் செயல்படுவோம் என்று குறுஞ்செய்தியை பகிர்ந்தேன்.
நிஜமாகவே, அந்த ஒரு நிமிடம், நெஞ்சினிடையே நெருடிக்கொண்டிருந்த ஏதோ ஒன்று நீங்கி, அத்துணை நாள் இல்லாத ஒரு நிம்மதி நிழலில் நெஞ்சம் இளைப்பாரியது.

மூக்கின் நுனியில் துளிரும் கோபத்தை விடுத்து, சூழ்நிலையை அமைதியான முறையில் கையாளப் பழக வேண்டுமென்றும், அன்பர்களோடோ, நெருங்கிய உறவுகளோடோ முரண்பாடுகள் முளைவிட்டால், "நான் தான் சரி" என்று பிடிவாதம் செய்யாமல், பக்குவமாய் நம் கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டுமென்ற புரிதலும் புகுந்தது.
கோபம், குரோதம், வெறுப்பு போன்றவற்றால் எவ்வித பயனுமில்லை என்ற உண்மையை உலகம் நன்கறிந்த பின்னரும், அவை அகங்காரம் என்ற பசிக்கு பல நேரங்களில் நிரந்தர தீனியாய் நிலைகொண்டாடுகிறது.
சொல்லிலும் செயலிலும் தெளிவு வேண்டுமாயின், முதலில் மனதில் தெளிவு வேண்டும். கொதிக்கும் நீரில் அழகிய பிம்பத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றம் மட்டுமே மிகுதியாகும்.
-மனதின் குரலாய்,
நா. இந்துஜா
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.




















