80-ல் நுழைந்த ப.சிதம்பரம், நளினி சிதம்பரம்; கார்த்தி சிதம்பரம் தந்த ஸ்பெஷல் பரி...
`அன்று பொன்னாடை போர்த்திய ஜனாதிபதி; இன்று சி.எம் கையிலிருந்து விருது'- நாகசுர கலைஞர் கிருஷ்ணமூர்த்தி
திருவாரூர் மாவட்டம், வடுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகசுரக் கலைஞர் எஸ்.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. இவர் கடந்த 16-ம் தேதி சென்னையில் நடைபெற்ற முத்தமிழ் பேரவை இசை விழாவில் தமிழ்நாடு முதல்வர் கையினால் `ராஜரத்தினா' விருதினைப் பெற்றார். கிருஷ்ணமூர்த்தி ஐயாவுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, அவரிடம் பேசத் தொடங்கினோம்.
``நான் பாரம்பர்ய இசைக் குடும்பத்திலிருந்து வந்தவன். என்னுடைய தாத்தா நாகசுர வித்துவான் ஆவூர் ராஜமாணிக்கம், `தங்க நாகசுரம்' வாசித்தவர். அப்படிப்பட்ட இசைக் குடும்பத்தில் நான் நான்காவது தலைமுறை.
என் தந்தை ராமையா பிள்ளை சிறந்த நாகசுர கலைஞர் ஆவார். அவர் நாதசுவரம் வாசிப்பதை சிறு வயதிலிருந்து பார்த்துப் பார்த்து எனக்கும் அதன் மீது ஆர்வம் வந்தது. நான் 7ம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறேன். ஆனால் எனக்கு படிப்பதைத் தாண்டி நாதஸ்வரம் கலையின் மீது மிகவும் ஈர்ப்பு வந்துவிட்டது. எனது 5 வயதிலிருந்தே இக்கலையினைக் கற்கத் தொடங்கிவிட்டேன்.

என் தந்தையும் என் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு, திருவெண்காடு ஜெயராமன் மற்றும் கோட்டூர் சுவாமிநாத பிள்ளை ஆகியோரிடம் நாகசுரம் பயில அனுப்பி வைத்தார்.
அவர்களிடம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் குருகுலக் கல்வியாக நாதஸ்வரம் கலையினை கற்றேன். இப்படியே படிப்படியாக நாகசுர கலையினை கற்று முடித்தேன்.
ஏறத்தாழ 10,000-க்கும் மேற்பட்ட கோயில் கச்சேரிகள், திருமண நிகழ்ச்சிகள் எனப் பல இடங்களில் நாதஸ்வரம் வாசித்தேன். 1997-ம் ஆண்டு அமெரிக்க வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாகசுரத் தமிழ் கருத்தரங்கத்தில் இசை ஆய்வாளர் பி.எம் சுந்தரத்துடன் இணைந்து நாகசுரம் மரபைப் பற்றிய செயல்முறை விளக்க உரையினை வழங்கி நான் பெற்ற கலைக்கு மென்மேலும் பெருமையைச் சேர்த்தேன்.
வாழ்வில் மறக்க முடியாத ஒன்று:
நான் ஏராளமான கச்சேரிகளை நடத்தியிருந்தாலும் இன்றைய நாள் வரை என்னால் மறக்க முடியாத ஒன்று என்றால், அது டெல்லியில் நடைபெற்ற சம்பவம் தான். டெல்லியில், `கந்த சஷ்டி விழா'வில் நான் நாதஸ்வரம் இசைத்துக் கொண்டு இருந்தபோது, மேனாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் எனது இசையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தினார். என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் அது!

வடுவூர் கிருஷ்ணமூர்த்தி தான் என் அடையாளம்:
நான் என்னதான் இசை கலைஞர், ராஜரத்னா விருது பெற்றிருந்தாலும்... என் பெயருக்கு முன் கண்டிப்பாக என் ஊர் இருக்கும். என் ஊர்தான் என்னுடைய அடையாளம். நான் எங்கு சென்றாலும், எவ்வளவு பெரிய சபைக்குச் சென்றாலும்... என் பெயருக்கு முன் வடுவூர் என்ற என் ஊரைக் கூறித்தான், அறிமுகம் செய்வேன். கடந்த 40 ஆண்டுகளாக வடுவூர் கிருஷ்ணமூர்த்தியாக இசைத்துறையில் இருக்கிறேன்.
அந்த ஒரு தருணம்:
நான் எவ்வளவோ பாராட்டுகள், விருதுகளைப் பெற்றிருக்கிறேன். ஆனால் தமிழ்நாடு முதல்வர் தனது கையால் `ராஜரத்னா' விருதினை தந்தபோது அந்த ஒரு நிமிடம்... என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. மிகவும் மகிழ்ச்சியான தருணம் அது. நாகசுர கவிஞர்களுக்கெல்லாம் மகா சக்கரவர்த்தியாக விளங்கக்கூடியவர் திருவாடுதுறை `ராஜரத்தினம் பிள்ளை.' அவருடைய பெயரில் எனக்கு விருது கிடைத்தது பெரும் பாக்கியமாகத்தான் நினைக்கிறேன்" என்று மனம் நெகிழ்ந்து கூறினார்.


















