விமான நிலையத்தில் செக்- இன் செய்தவுடன் பிரியும் தம்பதிகள் - பிரபலமாகும் `ஏர்போர்...
'உன் மீதே போக்சோ வழக்கு கொடுப்பேன்' தந்தையை மிரட்டிய 17 வயது மகள் - நடந்தது என்ன?
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலைய எல்லைக்குட்பட மேற்கு நெய்யூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளிக்கு மனைவி, 17 வயதில் ஒரு மகள் மற்றும் 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மகள் பிளஸ் 2 படித்து வருகிறார். கட்டட தொழிலாளியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்துசென்று தனியாக வசித்துவருகிறார். மகளையும் மகனையும் கட்டட தொழிலாளி கவனித்து வந்தார்.
கடந்த வாரம் அந்த பகுதியில் நடந்த ஒரு பிரச்னையில் கட்டட தொழிலாளி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தனது பிள்ளைகளை பார்த்துக் கொள்ளும்படி உறவினர்களிடம் கூறிவிட்டு கட்டட தொழிலாளி தலைமறைவானார். இதற்கிடையே கணவர் தனது பிள்ளைகளை தனியாக விட்டு விட்டு தலைமறைவான விவகாரம், பிரிந்துசென்ற அவரது மனைவிக்கு தெரிய வந்தது. அவர் குழந்தைகளிடம் போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தார்.
இதனிடையே கட்டட தொழிலாளியின் மகளும் அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்த விபரம் கட்டட தொழிலாளியின் மனைவிக்கு ஏற்கனவே தெரியுமாம். கட்டடத் தொழிலாளியின் மனைவி அந்த வாலிபரை தொடர்பு கொண்டு மகளுக்கு உணவு கொடுக்கும்படி கூறி உள்ளார். இதையடுத்து கடந்த ஒரு வாரமாக அந்த வாலிபர் மாணவியின் வீட்டுக்குச் சென்று உணவு கொடுத்து வந்தார். மேலும், அந்த மாணவியும், வாலிபரும் வீட்டில் தனியாக சந்தித்துக்கொள்வதும் நடந்துள்ளது.

இதற்கிடையே நேற்று முன்தினம் கட்டட தொழிலாளிக்கு ஜாமீன் கிடைத்தது. நேற்று முன்தினம் மாலையும் வழக்கம்போல் வாலிபர் உணவு பார்சலுடன் மாணவியை சந்திக்க சென்றுள்ளர். மாணவியும் வாலிபரும் வீட்டுக்குள் சென்று சென்று கதவை பூட்டிக்கொண்டார். இதுகுறித்து அப்பகுதியினர் கட்டட தொழிலாளிக்கு தகவல் தெரிவித்தனர். அவசரமாக வீட்டுக்குச் சென்ற கட்டட தொழிலாளி, பூட்டிக்கிடந்த வீட்டு கதவை தட்டினார். வீட்டுக்குள் இருந்து மாணவியும், வாலிபரும் வெளியே வந்தனர். இதை பார்த்ததும் ஆத்திரத்தில் மகளை கண்டித்து தாக்கியுள்ளார் கட்டட தொழிலாளி. அந்த வாலிபரையும் கண்டித்துள்ளார். அப்போது தந்தையுடன் மகள் கடுமையாக தகராற்றில் ஈடுபட்டார். இதையடுத்து, தனது மகளையும், வாலிபரையும் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார் கட்டட தொழிலாளி.

காவல் நிலையத்துக்கு செல்லும் வழியில் தந்தையிடம் தகராறு செய்த மகள், 'நீ தான் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தாய் என போலீஸ் ஸ்டேஷனில் கூறி, உன் மீதே நான் போக்சோ வழக்கு கொடுப்பேன்' என தந்தையை மிரட்டி உள்ளார். மகள் பேசியதைக் கேட்டு கட்டட தொழிலாளி உடைந்து போனார். ஸ்டேஷன் வரை சென்றவர் புகார் எதுவும் வேண்டாம் என கூறிவிட்டு அழுதபடி வீட்டுக்குச் சென்று விட்டார். பிரச்சனை இருக்கும்போது மாணவியை தனியாக விட முடியாது என்பதால் அவரது தாயை போலீஸார் செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்தனர். காவல் நிலையத்துக்குச் சென்ற மாணவியின் தாய் தனது மகளை அழைத்து சென்றார். புகார் எதுவும் இல்லாததால், மாணவியுடன் இருந்த வாலிபரை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.




















