குடும்பத்தையும், அரசியலையும் துறக்கிறேன்: லாலு பிரசாத்திற்கு சிறுநீரகம் தானம் செ...
``திமுக தமிழகத்தில் ஆளும் கட்சி, இந்தியா முழுதும் சிறந்த எதிர்க்கட்சி'' - உதயநிதி ஸ்டாலின்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதிய பேரூராட்சி கட்டிடத்தை திறந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் மாதவன் ஆகியோரின் சிலைகளை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில் பேசும்போது,
"ஒரு கட்சிக்கு நல்ல தலைமை, ஆழமான அடிப்படைக் கொள்கை, வழுவான கட்டமைப்பு என்ற முக்கியமான மூன்று விஷயங்கள் இருந்தால்தான் அந்தக் கட்சி மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வளர்ச்சி பெற முடியும்.

75 ஆண்டுகள் கடந்தும் திராவிட முன்னேற்றக் கழகம் வலுவான கொள்கையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, அண்ணா, கலைஞர் போன்ற வலுவான தலைமை இன்றும் உள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இரு ஆண்டுகள் இருந்த அண்ணா யாராலும் மாற்ற முடியாத மறுக்க முடியாத மூன்று திட்டங்களை கொண்டு வந்தார்.
அதில் ஒன்று, சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயரிட்டது. இரண்டாவதாக சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் தந்தது, மூன்றாவதாக இந்திக்கு தமிழ்நாட்டில் இடமில்லை, இரு மொழிக் கொள்கைதான் என கொண்டு வந்தார்.
இந்த மூன்று திட்டத்தையும் எந்த கொம்பன் வந்தாலும் மாற்ற முடியாது. எஸ்.ஐ.ஆர். மூலம் தி.மு.க. ஆதரவு வாக்குகளை நீக்க பார்க்கின்றனர் குறிப்பாக தி.மு.க. ஆதரவாக உள்ள சிறுபான்மையினர், பெண்கள், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை நீக்கிவிட்டால், கூட்டணியில் வெற்றி பெற்று விடலாம் என ஒன்றிய பாஜக திட்டமிட்டுள்ளது.

ஆனால் ஒவ்வொரு பூத்திலும், கடைசி திமுக தொண்டர் இருக்கும் வரை ஒரு தகுதியான வாக்காளரைக்கூட நீக்கி நீங்கள் வெற்றி பெற முடியாது. எஸ்.ஐ.ஆர்-ஐ, திமுக ஆதரிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அதிமுக ஆதரிக்கிறது. இன்று மு.க.ஸ்டாலின் இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சர் என்றும், அதிமுகவை பாஜகவின் நம்பர் ஒன் அடிமைகள் என்று ஒட்டுமொத்த இந்தியாவும் கேலி பேசுகிறது.
பார்க்கும் கால்களில் எல்லாம் கீழே விழுந்து வணங்கும் எடப்பாடி பழனிசாமி இப்போது புதிய கால்களை தேடித் தேடி விழுந்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட அடிமைகளை தமிழக அரசியலில் இருந்து விரட்ட வேண்டும். அதுதான் தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நாம் செய்யவேண்டிய கடமை.

இன்று நாடு முழுவதும் பாசிச பாஜகவிற்கு பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கட்சியாக திமுக திகழ்கிறது. தமிழகத்தில் திமுக ஆளும் கட்சி, ஆனால் இந்தியா முழுவதற்கும் நாம்தான் சிறந்த எதிர்க்கட்சி.
பாசிச பாஜகவை விரட்ட வேண்டுமென்றால் அடுத்த நான்கு மாதங்கள் கடுமையாக உழைத்து இருநூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற செய்ய வேண்டும்" என பேசினார்.
நேற்று மாலை காரைக்குடியில் திராவிட இயக்க தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்த பெரியார் பெருந்தொண்டர் இராம சுப்பையாவின் 118-வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.













