Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டால...
மேற்கு வங்கம்: பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 பேர் பலி; திறந்திருந்த லெவல் கிராஸிங்தான் காரணமா?
மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் பகுதியில் இன்று காலை பயணிகள் ரயில் ஒன்று பள்ளி வேன் மீது மோதியதில், இரண்டு மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். இதில் 5 மாணவர்களும் காயமடைந்தனர்.
முர்ஷிதாபாத்தின் பெர்ஹம்பூர் பகுதியில், கர்ணசுபர்ணா ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கிராஸிங்கில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் இந்த விபத்து நடந்தது.
சம்பவம் நடந்த இடத்தில் ரயில்வே கிராசிங் திறந்திருந்தது. இதையடுத்து பள்ளி வேன் ஒன்று அதைக் கடந்து செல்ல முயன்றது. அந்நேரம் அவ்வழியே வந்த நிம்திதா-கட்வா பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதிக்கொண்டது.
போலீஸாரும், ரயில்வே அதிகாரிகளும் விரைந்து செயல்பட்டு மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இதில் 2 மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

விபத்துக்குள்ளான வேன் ரயில் தண்டவாளத்தில் உருக்குலைந்த நிலையில் கிடந்த காட்சி வைரலாகி இரூக்கிறது. விபத்தில் காயமடைந்த மாணவர்கள் முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு ரயில் கடந்து செல்லும் வரை மூடப்பட்டிருந்த ரயில்வே கேட், அது சென்ற பிறகு திறக்கப்பட்டதாகவும், ஆனால் அடுத்த தண்டவாளத்தில் மற்றொரு ரயில் வந்துகொண்டிருந்தபோதும் கேட் மீண்டும் மூடப்படாததே விபத்துக்குக் காரணம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து குறித்து முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விபத்தைத் தொடர்ந்து, கிழக்கு ரயில்வேயின் ஹவுரா பிரிவில் உள்ள அசிம்கஞ்ச்-கட்வா வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.




















