``IIT மெட்ராஸ் பறை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்'' - விருதுநகரில் பறை இச...
கரூர் சம்பவம்: `உயர் நீதிமன்றம் விசாரணைகளை நடத்திய முறையில் செயல்முறை மீறல்கள்..!’ - உச்ச நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைத்த ஒரு நபர் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.
மதுரை உயர் நீதிமன்றம் அமைத்த SIT-ஐ எதிர்த்து தமிழக வெற்றி கழகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் இந்த விசாரணை நடைபெற்றது.
தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ``இந்த விவகாரத்தில் கடந்த முறை நீதிமன்றம் எட்டு வாரத்தில் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய கூறியது, சென்னை உயர் நீதிமன்றம் பதிவாளர் தரப்பிலும் பதிலளிக்க கூறியது.
அதை வேளையில் இந்த கரூர் சம்பவம் விவகார தொடர்பான விசாரணை என்பது தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது” என வாதங்களை முன் வைத்தனர்.
அப்போது நீதிபதிகள்
``சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரேனும் ஆஜராகி இருக்கின்றனரா?
அமர்வு, மதுரை உயர் நீதிமன்ற பதிவாளர் தரப்பு வழக்கறிஞர்கள் இங்கு உள்ளனர்களா?” என கேள்வி எழுப்பினர்
சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நோட்டீஸ் பிறப்பிக்காத காரணத்தினால் இந்த விவகாரத்தில் இதுவரை பதில் அளிக்கவில்லை அதற்கு பதில் அளிக்கப்பட்டது.
பின்னர் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் என்.ஆர் இளங்கோ ஆகியோர்,
``கரூர் சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆணையத்தை பொறுத்தவரைக்கும் விசாரணை அமைப்புகளின் புலன் விசாரணைக்குள் தலையிடாமல் தனியாக சுய தீன விசாரணையை நடத்தும் வகையில்தான் அமைக்கப்பட்டது
எனவே தனி நீதிபதி ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
மேலும், ``எதிர்காலத்தில் கூட்டங்கள் நடத்த விதிமுறைகளை வகுப்பதற்கும், நிவாரணம் பரிந்துரைக்கவுமே ஆணையம் அமைக்கப்பட்டது” என கூறினார்கள்.

அப்போது பேசிய நீதிபதிகள், ``கரூர் சம்பவம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றம் விசாரித்த முந்தைய முறையீட்டில் குழப்பம் உள்ளது அவர்கள், சில தவறுகள் செய்திருக்கலாம்” என்று கூறினர்.
குறிப்பாக, ``உயர் நீதிமன்றம் விசாரணைகளை நடத்திய முறையில் செயல்முறை மீறல்கள் உள்ளதாக தெரிகிறது” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும், ``மதுரை அமர்வு இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை எவ்வாறு எடுத்துக்கொண்டது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்றும் கூறினர்.
உயர் நீதிமன்ற பதிவாளர், வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அடிப்படையை விளக்கும் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி, இந்த விவகாரத்தை முதலில் விசாரிப்போம் என கூறினர்.
எனவே, உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டனர்.
மேலும், பதிவாளரின் அறிக்கையின் நகல்களை அனைத்து தரப்பினருக்கும் வழங்குமாறும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.




















