கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சம்பவ நாளில் பணியிலிருந்த 12 போலீஸார் CBI விசாரணைக்க...
சிகரெட்: புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
எய்ட்ஸ் நோய், காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படும் சைலென்ட் மரணம் அதிகமாக இருக்கிறது. புகையிலையில் சுமார் 4,000 ரசாயனப் பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 30-க்கும் மேற்பட்டவை நச்சுத் தன்மையானவை.
குறிப்பாக ஹைட்ரஜன் சயனைட், அமோனியம், ஆர்சனிக், மெத்தனால், கார்பன் மோனாக்ஸைட், தார், நிக்கோடின், நைட்ரிக் ஆக்ஸைட், பாதரசம் போன்றவையாகும். சிகரெட், பீடி பழக்கத்தை கைவிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று சென்னையைச் சேர்ந்த இதய மருத்துவர் ஆர்.ரவிக்குமாரிடம் கேட்டோம்.

''சிகரெட் பழக்கத்தை விட்ட, உடனே ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு மேம்பட ஆரம்பித்துவிடுகிறது. அதாவது, புகைப்பதை விட்ட 20-வது நிமிடத்தில் ரத்த அழுத்தமும் நாடி துடிப்பும் நார்மல் நிலைக்கு வந்துவிடுகிறது.
* புகை பிடிப்பதைவிட்ட 8 மணி நேரத்தில், ரத்தத்தில் உள்ள நிக்கோடின் மற்றும் கார்பன் மோனாக்ஸைடு அளவு பாதியாக குறைந்துவிடும். ஆக்ஸிஜன் அளவு நார்மலுக்கு வந்து விடும்.
* 24 மணி நேரத்தில் ரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்ஸைடு முற்றிலும் வெளியேறி விடும்.

* 48 மணி நேரத்தில் உடலில் உள்ள நிக்கோடின் முற்றிலும் வெளியேறி விடும்.
* 72 மணி நேரத்தில் சுவாசம் சீராகி விடும். உடலில் ஆற்றல் அதிகரித்துவிடும்.
* 2 முதல் 12 வாரங்களில் ரத்த ஓட்டம் மேம்பட்டிருக்கும்.
* ஆறுமாத காலத்துக்குள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. மேலும், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று பாதிப்பு போன்றவை குறைகிறது.
* இப்படியே தொடர்ந்தால், புகை பழக்கம் இருக்கிற ஆண், பெண் இருவருக்குமே குழந்தை பிறப்புக்கான ஆற்றல் அதிகரிக்க தொடங்கும். இப்படி ஏராளமான நன்மைகள் புகைப் பழக்கத்தை விட்ட நேரத்திலிருந்து தொடங்கி விடுகிறது'' என்கிறார் டாக்டர் ஆர்.ரவிக்குமார்.
புகை பிடிப்பதை நிறுத்த முடிவெடுத்து விட்டீர்கள்தானே?














