ஒரே சதத்தில் சச்சின், ரோஹித்தின் சாதனை சமன்; கரியரின் 2-வது இன்னிங்ஸில் பட்டாஸாக...
தென்காசி: உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை; சிகிச்சையளித்து தேற்றும் வனத்துறை!
தென்காசி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சிவகிரி வனச்சரகப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக உடல்நலம் குன்றிச் சுற்றித் திரிந்த 35 வயதுடைய காட்டு யானையை, வனத்துறையினர் தீவிர சிகிச்சைக்குப் பின் மீட்டுள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தடுமாறி நடமாடி, பின்னர் ஓர் இடத்தில் படுத்துக்கொண்டிருந்த இந்த யானையைக் கண்காணிக்க, சிவகிரி வனச்சரகத்தின் கீழ் ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டது. அத்துடன், யானையின் சாணம் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், அந்த யானை தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் படுத்திருந்தது கண்டறியப்பட்டது. திருநெல்வேலி புலிகள் காப்பகத்தின் வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் ஆனந்த் உத்தரவின் பேரில், மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

தென்காசி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் முனைவர் ராஜ்மோகன் முன்னிலையில், திருநெல்வேலி வனக் கால்நடை மருத்துவர் டாக்டர் மனோகரன் மற்றும் டாக்டர் சாந்தகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் யானைக்குச் சிகிச்சை அளித்தனர். வனப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன், மருத்துவக் குழுவினர் இரண்டு நாள்களாகத் தொடர்ந்து யானைக்குச் சிகிச்சை அளித்து, அதன் உடல்நிலையைச் சீராக்கினர். யானைக்கு நீர்ச்சத்து குறைபாடு, உணவு உட்கொள்ளாமை மற்றும் பலவீனம் ஆகியவை இருந்ததால், தொடர்ச்சியான திரவ ஊசிகள், ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் வழங்கப்பட்டன. யானையின் உடல் வெப்பநிலை, இதயத் துடிப்பு மற்றும் சுவாசம் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.

தற்போது, யானை நல்ல நிலையில் மீட்கப்பட்டு, தானாகவே எழுந்து நடமாடத் தொடங்கியுள்ளது. உணவு உட்கொள்ளவும் தொடங்கியுள்ள இந்த யானை, வனத்துறையினரால் பாதுகாப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. முழுமையாக நலம் பெற்ற பின்னர், இயற்கையான வனப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானையை மீட்க வனத்துறையினர் மேற்கொண்ட தீவிர முயற்சிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மனித வாழ்விடங்களுக்கு அருகே இருந்த இந்த யானையை விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளித்து மீட்டது வனத்துறையின் திறமையான பணியாகும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.



















