Rain Alert: உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - வானிலை ஆய்வு மையம் தகவ...
ராமநாதபுரம்: பட்டியல் சமூக மாணவரை தாக்கிய மாற்று சமூக மாணவர்கள் - அரசு விடுதியில் அரங்கேறிய அவலம்
ராமநாதபுரம் அம்மா பூங்கா பகுதியில் மாணவர்களுக்கான அரசு சமூக விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பல்வேறு சமுதாயத்தினை சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 11-ம் தேதி விடுதியில் தங்கியுள்ள பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த மாணவர் ஒருவரை, மற்ற சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இது தொடர்பான காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் தாக்குதல் சம்பவம் நேற்று சில செய்தி ஊடகங்களில் வெளியானது. இதனால் ராமநாதபுரத்தில் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் உத்தரவிட்டார். மேலும் பட்டியல் சமுதாய மாணவர் மீது தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை விடுதியில் இருந்து நீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே வன்முறை கலாசாரம் பரவி வருவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், அரசு மாணவர் விடுதிக்குள்ளேயே அது அரங்கேறியிருப்பது அச்சத்ததை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நடந்த போது அதனை தடுத்திருக்க வேண்டிய விடுதி காப்பாளர் உள்ளிட்ட பணியாளர்கள் எங்கு போனார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. எனவே இது தொடர்பாகவும் விசாரணை நடத்தி அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவரின் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



















