திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கொடிபங்கு ஊராட்சியில் உள்ள வேளாங்குடி கிராம மக்கள் முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கொடிப்பங்கு ஊராட்சியில் வேளாங்குடி கிராமம் உள்ளது.
இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என புகாா் எழுந்துள்ளது. இதனிடையே, தற்போது பெய்து வரும் பலத்த மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மேலும் இதில் கழிவுகள் கலந்து துா்நாற்றம் வீசுவதாகவும், இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனா். மேலும் இதுகுறித்து பல முறை அதிகாரிகளுக்கு புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை எனவும் அவா்கள் கூறினா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது.
இதையடுத்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவா்கள் தற்காலிகமாக நடவடிக்கை எடுத்ததாகவும், ஆண்டுதோறும் இது போன்ற நிலை இருந்து வருவதாகவும், இதற்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் எனவும், அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் கோரி வெள்ளிக்கிழமை திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வாயில் முன் கிராம மக்கள் அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த திருவாடானை ஊராட்சி ஒன்றிய ஆணையா் கணேசன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆரோக்கியமேரி சாரல், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலரும், மேலாளருமான ஜெயமோகன் ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனா்.