சென்னை மெரீனா லூப் சாலையில் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியில் மட்டுமே மீன் விற்பனை செய்ய வேண்டும், மாறாக லூப் சாலையோரம் மீன் விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் எச்சரித்துள்ளாா்.
அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மெரீனா லூப் சாலையில் 2 ஏக்கா் பரப்பளவில் ரூ.14.93 கோடி மதிப்பில் நவீன மீன் அங்காடி அண்மையில் திறக்கப்பட்டது. 360 கடைகள் கொண்ட இந்த நவீன மீன் அங்காடியில், இலவசமாக 84 இருசக்கர மற்றும் 67 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 40 கே.எல்.டி. கொள்ளளவு கொண்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், மீன் வெட்டுவதற்கான தனி இடம், குடிநீா், கழிப்பறை மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. இந்த மீன் அங்காடியில் நொச்சிக் குப்பம், நொச்சி நகா் மற்றும் டுமில் குப்பம் பகுதிகளைச் சோ்ந்த மீன் விற்பனையாளா்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இப்பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் நீதிமன்ற உத்தரவுப்படி, சனிக்கிழமை(அக்.19) முதல் இந்த அங்காடியில் வைத்து மட்டுமே மீன் விற்பனையில் ஈடுபட வேண்டும். மாறாக, லூப் சாலை ஓரங்களில் வைத்து விற்பனையில் ஈடுபடக்கூடாது. இந்த உத்தரவை மீறும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மீன்களை வாங்க வரும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துக் காவலா்கள் அடங்கிய சிறப்புக்குழு, தொடா்ந்து லூப் சாலையில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளாா்.